டெல்லி: மோடி அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறது. இதனை இடைக்கால நிதியமைச்சரும் ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் தாக்கல் செய்ய உள்ளதாக நிதி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடைபெற இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் 2019 - 20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் திரண்டு ஓரணியாக செயல்பட பெரும் முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், தற்போது தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜகவுக்கும் இது முக்கியமான பட்ஜெட் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று நவம்பர் 28ஆம் தேதி நிதியமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அப்போது கூறப்பட்டிருந்தது. மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இடைக்கால நிதியமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு
பொதுவாக தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதுதான் வழக்கம். இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்கும் அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும். இந்த நிலையில் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் என்ற தகவல் வெளியானது. இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். நாடாளுமன்ற மரபை பாஜக மீற முயல்வதாகவும், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
முழு பட்ஜெட் கிடையாது
மரபுகளைக் கடந்து, தேர்தலை முன்னிறுத்தி பாஜக இதுபோல் செயல்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. முன்பு மரபை மீறிய காங்கிரஸ் எங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டியது இல்லை என்று பாஜக தலைவர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் இந்தக் குழப்பங்களை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், 'இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறிய அவர் பொதுத் தேர்தலுக்கு பிறகே முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சலுகைகள் அறிவிப்பு
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பட்ஜெட்டில் மக்களுக்கான புதிய சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. விவசாயிகள், கிராமங்கள் மற்றும் மத்திய தர வர்க்கத்தினருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும் வர்த்தகர்கள், உயர் ஜாதியினர், மற்றும் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை ஈர்க்கும் வகையில் சிறப்பு சலுகைகள் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு சலுகைகள்
விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டது. மாறாக விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். கொள்முதல் செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை அரசு நிர்ணயிக்கிறது என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வருகிறது. விவசாயப் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதாய விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் கூறப்பட்டது. ஆனால். இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் கிராமப்புறங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முழு பட்ஜெட் தாக்கல் செய்வது யார்
பொருளாதார ஆய்வு (Economic Survey) முழு பட்ஜெட்டோடுதான் சேர்க்கப்படும் என்பதால், இடைக்கால பட்ஜெட்டில் பொருளாதார ஆய்வு விவரங்கள் வராது. இத்தகைய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி குறித்து பெரிய மாற்றங்களை முந்தைய அரசுகள் கொண்டுவந்ததில்லை. ஏனென்றால் அதே கட்சி ஆட்சிக்கு வருமா அல்லது வேறு கூட்டணி ஆட்சிக்கு வருமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருப்பதால் பெரும் மாற்றங்களை செய்வதில்லை. தவிர இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படும் வரிவிதிப்பில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அடுத்த அரசுக்கு அதை மீண்டும் மாற்றிமைக்க அதிகாரம் உள்ளது என்பதால் பெரிய மாற்றங்கள் செய்யப்படுவதில்லை. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் பாஜக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா? என்பது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது.