மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2018 - 19 நிதியாண்டில் 30,000 மாணவர்களுக்கு மேல் வேலை வாய்ப்பளித்திருக்கிறது.
கடந்த நிதியாண்டில் குறைவு
ஏப்ரல் 01, 2017 தொடங்கி, மார்ச் 30 2018 வரையான கடந்த நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 28,000 மாணவர்களுக்கு வேலை கொடுத்தது. அதற்கு முந்தைய 2016 - 17 மற்றும் 2015 - 16 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் 20,000 மாணவர்களை மட்டுமே தேர்வு செய்தது.
1,10,000 கோடி ரூபாய்
கடந்த ஏப்ரல் 01, 2018 தொடங்கி டிசம்பர் 31, 2018 வரையான ஒன்பது மாத காலத்துக்குள்ளேயே டிசிஎஸ்-க்கு சுமார் 1,10,000 கோடி ரூபாய்க்கான பிசினஸ் ஆர்டர்கள் கிடைத்திருக்கிறதாம். வழக்கம் போல இந்திய வங்கிகளுக்கு வடிவமைத்துக் கொடுத்த பேங்க்ஸ் மென்பொருள் மூலம் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறதாம். அதோடு ஃபினான்ஷியல் சர்வீசஸ் சேவைகளும் அதிக அலவில் கிடைத்திருக்கிறதாம்.
புதிய பிசினஸ்கள்
டிசிஎஸ் என்றாலே நிதி சார்ந்த மென்பொருட்கள் மட்டுமே என்கிற பிம்பத்தை மாற்றி அமைக்கும் விதமாக இந்த 2018 - 19 நிதி ஆண்டில் சில்லறை வணிகம், பேக்கிங் செய்யப்பட்ட பிசினஸ் பொருட்கள் போன்ற துறைகளில் இருந்து சில புதிய ஆர்டர்களை பிடித்திருக்கிறார்களாம்.
இனியும் எடுப்போம்
இனி வரும் ஆண்டுகளிலும் நிறைய புதிய மாணவர்களை வேலைக்கு எடுப்போம் என டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மனித வளப் பிரிவின் துணைத் தலைவர் அஜோயேந்திர முகர்ஜி தெரிவித்திருக்கிறார். அதோடு புதிய ஆட்களை வேலைக்கு எடுத்திருப்பதால் தங்கள் வருவாயும் பிசினஸ் வளர்ச்சி மூலம் வருவாயும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
டிசம்பர் 2017 முதல் டிசம்பர் 2018 வரை
கடந்த நான்கு காலாண்டுகளில் 27,049 பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முந்தைய நான்கு காலாண்டுகளில் (டிசம்பர் 2016 முதல் டிசம்பர் 2017) வெறும் 7,000 பேரை மட்டுமே புதிதாக வேலைக்கு எடுத்தார்களாம். தற்போது ஒட்டு மொத்த குழுமத்தில் சுமாராக 4.2 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம்.
2018 - 19 மூன்றாம் காலாண்டு முடிவுகள்
டிசம்பர் 2018 காலாண்டில் தன் வருவாயை 12 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய வளர்ச்சியாம். இப்போது வரை டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாயை வட அமெரிக்காவில் உள்ள வங்கிச் சேவைகள், வங்கி மற்றும் இன்ஷூரன்ஸ் சேவைகள் மூலமே பெரிய அளவில் ஈட்டி வருகிறதாம்.