நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது மானியங்களை நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்குகளுக்கே செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார். அது தான் இன்று direct benefit transfer - DBT என அழைக்கிறார்கள்.
நிலம் உள்ளவர்கள் மட்டுமே
இந்த திட்டப் படி ஒரு பருவத்துக்கு 4000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். ஒரு மொத்த ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மிகாமல் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி சொந்தமாக உழவு செய்ய நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன.
நிலமற்றவர்கள்..?
சொந்தமாக உழவு நிலம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தின் அடிப்படையில் மானியங்களோ உதவிகளோ கிடைப்பதில்லை. காரணம் சொந்தமாக நிலம் இல்லாதவர்களை எப்படி விவசாயிகள் என கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என அரசு விவசாயிகளிடமே கேட்டது. இதனால் விவசாயக் கூலிகளாக காலத்தைக் கழிப்பவர்களுக்கு மேலும் சுமையாகிப் போனது.
வங்கி உதவி
சொந்தமாக நிலம் உள்ளவர்களுக்கு நிலத்துக்கான பட்டா சிட்டா தஸ்தாவேஜ்கள் அடிப்படையில் அரசு வங்கிகள் விவசாயக் கடன்களை வழங்கும். பொதுவாக அரசு வங்கிகளில் விவசாயக் கடன் என்றால் வட்டி கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கும். சமீபத்தில் அந்த கொஞ்ச நெஞ்ச வட்டிச் சுமையைக் கூட முழுமையாக நீக்க வட்டியில்லாக் கடனை வழங்கச் சொன்னது அரசு.
வட்டியில்லாக் கடன்
சொந்தமாக நிலம் உள்ள ஒரு விவசாயி அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத விவசாயக் கடனாகப் பெற்று வந்தார்கள். இதுவும் நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே. இந்த மானியம் + வட்டி இல்லாக்கடன் திட்டத்தினால் சுமார் 2.28 லட்சம் கோடி அரசு செலவழித்திருக்கிறார்களாம்.
குறைந்தபட்ச ஊதியத் திட்டம்
இப்போது விட்டுச் சென்ற விவசாயிகளுக்கு அதாவது சொந்தமாக உழவு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு குறைந்த பட்ச அடிப்படை ஊதியத் திட்டத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கிறார்களாம். அதோடு விவசாய விலை பொருட்களுக்கும் வளர்ந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நல்ல விலை கொடுக்க ஏதாவது திட்டம் சொல்வார்கள் என எதிர்பார்ப்பதாக பல்வேறு விவசாய சங்கங்கள் இந்தியா முழுமைக்கும் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.