டெல்லி: 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இடைநிலை பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இந்த இடைக்கால பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய முக்கிய 3 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பாஜக மத்தியில் ஆட்சியை தக்கவைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்றைக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டுடன் இன்று ரயில்வே பட்ஜெட்டும் அறிவிக்கப்படுகிறது. இது தேர்தல் பட்ஜெட்டாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அதிகவே ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். பரபரப்பாக இயங்கும் ரயில் தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்தடங்களில் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.
விவசாயிகளுக்கு சலுகைகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு பண உதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . பட்ஜெட்டில் விவசாயிகளுக்குக் கூடுதல் மானியம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனப்படுகிறது. அதன்படி கூடுதலாக 70,000 கோடி ரூபாயை விவசாயிகளின் நலனுக்காக அரசு கொடுக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. உணவு மானியத்திற்கு ரூ. 1.8 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படலாம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோருக்கும் பட்ஜெட்டில் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகலாம். வருவமான வரி உச்ச வரம்பில் விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பெரும்பான்மையானோர் உள்ளனர். கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ. 1.3 லட்சம் கோடி வரை செலவு செய்வதற்கு மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படிச் செய்வதன் மூலம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஜிடிபியின் 3.3 சதவிகிதம் மீறப்பட்டுவிடும். அரசு புதிதாக அறிவிக்கப் போகும் திட்டங்களால் நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 3.3 சதவிகித ஜிடிபியிலிருந்து, 3.5 சதவிகித ஜிடிபியாக உயரும் என்று ப்லூம்பெர்க் சர்வே சொல்கிறது.
இது மத்திய அரசின் மீது மேலும் நிதிச் சுமையை அதிகரிக்கும். நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்து பாஜக அரசு அமைந்தாலோ, அல்லது வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தாலோ நிதி சார்ந்த திட்டங்கள் வலிமையானதாக இருக்காது என்று நிதித் துறை வல்லுநர் பிரகாஷ் சாக்பல் கூறியுள்ளார்.