டெல்லி: லோக்சபாவில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மிக இளவயது நிதி அமைச்சர் என்ற பெருமையை அமைச்சர் பியூஸ் கோயல் பெற்றுள்ளார்.
லோக்சபாவில் இன்று மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. கடைசி ஐந்து மாதங்களுக்கான பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் இந்தியா மொத்தத்தின் பார்வையும் தற்போது லோக்சபா பக்கம் திரும்பி இருக்கிறது.
இந்த பட்ஜெட் தற்போது இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலில் இது முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்று வெளியான தகவல்களை மத்திய அரசு மறுத்து இருக்கிறது.
தாக்கல் செய்யவில்லை
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பொறுப்பு நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மிக வேகம்
இந்த பட்ஜெட் மிக மிக வேகமாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. பியூஸ் கோயல் லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இவர் இருக்கிறார். இவர் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளில் இருந்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் இவர் இந்த பட்ஜெட்டை உருவாக்கி உள்ளார்.
இளையவர்
இந்தியாவில் இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் இவர்தான் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வயது 54தான். இதுவரை 55 வயதிற்கும் குறைவான நபர்கள் யாரும் மத்திய அரசில் பட்ஜெட் தாக்கல் செய்தது கிடையாது.
நல்லது
அதேபோல் இவர் முறையாக சிஏ படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சிஏவில் இந்திய அளவில் இரண்டாவது ரேங்க் பெற்றவர். ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட சில வங்கிகளிலும் இவர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதனால் இவரது பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.