டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து இருக்கிறார்.
மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் குறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
சூப்பர்
இதுகுறித்து அருண் ஜெட்லி தெரிவித்துள்ள கருத்தில், கடந்த 2014ல் இருந்தே மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. தற்போது பியூஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டும் நடுத்தர வர்கத்த்து மக்களுக்கும், ஏழைகளுக்கும் பெரிய உதவியாக இருக்கும். இது ஒரு மிக சிறந்த பட்ஜெட்.
மோடியின் கனவு
பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை சரியாக புரிந்து கொண்டு அதை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பெரிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்று பெருமையாக குறிப்பிட்டு இருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
யோகி ஆதித்யநாத்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் என்று எல்லோரும் பயன் பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கிறது. புதிய இந்தியாவின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ராஜ்நாத் சிங்
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது ஒரு சிறப்பான பட்ஜெட். இந்த இடைக்கால பட்ஜெட் மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும். இந்திய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும், என்றுள்ளார்.
சசிதரூர்
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்த பட்ஜெட்டை எதோ வெடிவெடிப்பது போல தாக்கல் செய்துள்ளனர். இதில் வரி உச்ச வரம்பு ஒரு நல்ல திட்டம். ஆனால் 6000 ரூபாய் விவசாயிகளுக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் என்பது எல்லாம் திட்டமே கிடையாது. அவர்கள் அதை வைத்துக்கொண்டு வாழ முடியும் என்று எப்படி நினைக்கிறீர்கள்?.. இந்த பட்ஜெட் மொத்தமும் அப்படித்தான் உள்ளது என்று சசி தரூர் கூறியுள்ளார்.
நிதின் கட்கரி
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் நிதின் கட்கரி, வருமான வரி உச்ச வரம்பு மாற்றப்பட்டதுதான் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சம் ஆகும் . இந்தியாவில் உள்ள நதிகளை அடுத்த 10 வருடங்களில் புதுப்பிக்க போவதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். இது மிக சிறப்பான திட்டம் . இதை பாஜக அரசு விரைவாக முடிக்கும், என்று கூறியுள்ளார்.