டெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்து ஜோதிமணி கிண்டல் செய்துள்ளார். திமுக எம்.பி கனிமொழியும் இந்த பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தேர்தலை முன்னிட்டு இதில் நிறைய கவர்ச்சிகரமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தற்போது தலைவர்கள் வரிசையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மிக மோசம்
இந்த பட்ஜெட் வேடிக்கையானது என்று காங்கிரஸ் தரப்பை சேர்ந்தவர்களும் எதிர்கட்சியினரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள். வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் கவர்வதற்காக இந்த திட்டங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். மாறாக பாஜகவினர் இந்த பட்ஜெட்டை வரலாற்று சிறப்புமிக்கது என்று புகழ்ந்துள்ளார்.
ஜோதிமணி கருத்து
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். அதில் , 2014ல் மோடி ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளுக்கு உற்பத்தி விலையுடன் கூடுதலாக சேர்த்து 50% ஆதரவு விலையும் அளிப்பதாக கூறினார். ஆனால் அதை தற்போது மொத்தமாக நிறுத்திவிட்டு நான்கு மாதத்திற்கு 2000 ரூபாய் அளிக்கப்படுகிறது. அந்த பழைய வாக்குறுதி என்ன ஆனது, விவசாயிகளை பிச்சைக்காரர்கள் போல நடத்தாதீர்கள், அவர்கள்தான் தேசத்துக்கு உணவளிப்பது என்று ஜோதிமணி கூறியுள்ளார்.
கனிமொழி கருத்து
இதுகுறித்து திமுக ராஜ்ய சபா எம்.பி கனிமொழி தனது டிவிட்டில், குளிர்காலத்தில் சொல்லப்படும் தேவதை கதை என்றுதான் இந்த பட்ஜெட்டை கூற வேண்டும். நன்றாக இருக்கும் எல்லாம் நன்றாக முடிய வேண்டும் என்பதே விதி.. இவர்களை தங்கள் ஆட்சியை நன்றாக முடிக்க முயன்று இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களின் காலம் சென்றுவிட்டது, அது அவர்களுக்கு தெரியவில்லை! என்று கவித்துவமாக கிண்டல் செய்துள்ளார்.
ப.சிதம்பரம் கருத்து
இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட பட்ஜெட் என்பதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கிலத்தில் கவித்துவமாக குறிப்பிட்டு இருக்கிறார்.