டெல்லி: ஒரு நாளைக்கு 17 ருபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எதிர்வரும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும். அதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும். இந்த 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக விவசாயிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு நாளைக்கு 17 ருபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
அன்பு நமோ (அதாவது நரேந்திர மோடி), 5 ஆண்டுகளாக உங்கள் ஆட்சியின் திறமையின்மை மற்றும் ஆணவம் காரணமாக,நமது விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்களுக்கு ஒரு நாளைக்கு 17 ருபாய் ( 6 ஆயிரத்தை 365 நாட்களால் வகுத்தால் கிடைப்பது) வழங்குவது என்பது இத்தனை நாளாக அவர்கள் எதற்காக செயல்பட்டார்களோ, உழைத்தார்களோ அதற்கு இணையான அவமானம் ஆகும் என்று அவர் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications