டெல்லி: தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது தனி நபருக்கான வருமான வரிக்கான விலக்கு ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உயரும் என நடுத்தரவாசிகள் மிகவும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது கோயல் கூறுகையில் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலனடைவர். ஒட்டுமொத்த வருமான வரி சலுகை மூலம் ரூ. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. தனி நபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தரக் கழிவுக்கான உச்சவரம்பு ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.