டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் அவருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உதவியுள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கத் தொடங்கும் முன்பு பாரம்பரியமாகச் செய்து வரும் அல்வா விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
அல்வா கிண்டும் விழா முடிவடைந்த பிறகு தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படும் பணிகள் தொடங்கும்.
நிதி அமைச்சரான அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் அல்வா விழாவில் பங்கேற்க முடியவில்லை.
அல்வா கிண்டும் விழாவில் அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை என்றாலும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த பட்ஜெட் மிக மிக வேகமாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். பியூஸ் கோயல் லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இவர் இருக்கிறார். இவர் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் இவர் இந்த பட்ஜெட்டை உருவாக்கி உள்ளார். சிஏ படித்தவர் என்பதால் இவரது பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை அமைச்சராக கடந்த 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதனால் தமிழக மக்களை கவரும் வகையில் சிறப்பாக அம்சங்கள் எதுவும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தாமரையை மலரச்செய்வோம் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். தமிழக வாக்காளர்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா அல்லது அல்வா மட்டும்தானா என்பது பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான பின்னரே தெரியவரும்.