சென்னை: மாத ஊதியதாரர்கள் மீது நான்கரை ஆண்டுகளில் இல்லாத அக்கறை ஆட்சி முடிய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது மட்டும் மத்திய அரசுக்கு திடீரென்று வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நடுத்தர மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயருவதும், தேவையில்லாத பொருட்களின் விலை குறைவதும் வாடிக்கையான ஒன்று.
இடைக்கால பட்ஜெட்
இது மட்டுமல்லாமல் வருமான வரி விலக்கின் உச்சவரம்பு அதிகரிக்குமா என்ற ஏக்கம் நடுத்தர வர்க்கத்தினரிடையே காணப்பட்டது. எனினும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
முக்கியமானது
அதில் மக்களை குளிர்விக்கும் பல திட்டங்களும் சலுகைகளும் இன்று மத்திய அரசு அள்ளி வீசியுள்ளது. அதில் முக்கியமானது வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு அதிகரிப்புதான். ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை இருந்தால் வருமானம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊதியதாரர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும் இது எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அழுத்தம் திருத்தம்
இந்த அறிவிப்பை வெளியிட்ட பியூஷ் கோயல் கூறுகையில் பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அறிவிப்பது உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. இருந்தாலும் நடுத்தர மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
நடுத்தர வர்க்கத்தினர்
அப்படியிருக்கையில் இதன் அர்த்தம் என்ன. நான்கரை ஆண்டுகளாக எந்த நன்மையையும் மக்கள் எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யாமல் இருந்த மத்திய அரசு கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி கலைய உள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் மீது திடீர் கரிசனத்துக்கு என்ன காரணம்.
நிதி எங்கே
அது போல் விவசாயிகள் கடன் தள்ளுபடியை கோரி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 என்ற திட்டத்தின் மூலம் மாதத்துக்கு ரூ. 500-ஐ பெற்றுக் கொண்டு என்ன செய்வார்கள். வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு நிதியை எப்படி எப்போது மத்திய அரசு ஒதுக்கும். மேலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி விடுப்பில் இருக்கும் நிலையில் இது போன்ற புதிய அறிவிப்புகளை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் எப்படி வெளியிடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொருளாதார மேதைகள்
இது போன்ற கேள்விகள் சாதாரண மக்கள் மனங்களிலேயே எழும்நிலையில் பொருளாதாரம் படித்தவர்களின் மனதில் எழாமலா இருக்கும். எனவே இது போன்ற அறிவிப்புகள் மக்கள் நலன் கருதி அல்ல என்றும் தேர்தலை குறிவைத்தே பாஜக சலுகைகளை அறிவித்துள்ளது என்றும் தெள்ளத் தெளிவாகிறது.