சென்னை: தமிழக தலைநகரமான சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டில் வீட்டு வாடகை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக உள்ளதாக நோ புரோக்கர் டாட் காம் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை அதிகரிப்பு, சொத்து வரி உயர்வே இந்த வாடகை அதிகரிப்பிற்குக் காரணம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான நோ புரோக்கர் டாட் காம் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 5 முக்கிய மெட்ரோ நகரங்களில் வீட்டு வாடகை குறித்த ஆய்வை நடத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களான சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக நோ புரோக்கர் டாட் காம் நடத்திய ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மும்பையில் வீட்டு வாடகை 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் விட்டு வாடகை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னையில் வீட்டு வாடகை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.வாடகைக்கு வீடு தேடி செல்லும் போது வீட்டின் உரிமையாளர்கள் அதிகமான முன்பணமும், பராமரிப்பு கட்டணமும் வசூலிப்பதாகவும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. சென்னையில் 88சதவிகிதம் பேர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும், வாடகை வீடுகளில் இருப்பவர்களில் 57சதவிகிதம் பேரின் மனநிலை சொந்த வீடு வாங்க வேண்டும் என இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை
வாடகைக்கு வீடு தேடுபவர்களில் 49சதவிகிதம் பேர் வேலை பார்க்கும் இடம், குழந்தைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிக்கு அருகாமையிலேயே இருக்கும்படி தேடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வீடு தேடுபவர்களில் 55% பேர் தரகர்களுக்கு பணம் கொடுக்க விருப்பப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 29 சதவிகிதம் பேர் உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக வீட்டை வாடகைக்கு பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டு தேவை அதிகம்
சென்னையில் கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 50 லட்சமாக இருந்தது. இதுவே தற்போது ஒருகோடிக்கு மேல் தாண்டியுள்ளது. பெரும்பாலோனோர் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்னைக்கு வந்தவர்களே. மக்கள் தொகை அதிகரித்தாலும் வீடுகள் கட்டப்படுவது அதற்கேற்ப அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகையும் அதிகரித்துள்ளது.
சிங்கிள் பெட்ரூம் வீடு
சென்னையின் மையப்பகுதிகளில் வீட்டுவாடகை தொடர்ந்து அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அடையாறு, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம்,வேளச்சேரி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 5000 ரூபாயாக இருந்த வீட்டு வாடகை தற்போது 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு படுக்கை அறை வீடு
அதே நேரத்தில் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், செங்குன்றம், ரெட்டேரி ஆகிய பகுதிகளில் வீட்டு வாடகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வாடகை உயர்வு சென்னையில் வசிப்பவர்களை பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. வாங்கும் சம்பளத்தில் 40 சதவிகிதம் வரை வீட்டு வாடகைக்கே செலவிடுவதாக கவலை தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை என்னதான் தொடர்ந்து உயர்ந்தாலும் மக்கள் 2 அல்லது 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டைத் தேடுவதும் அதிகரித்துள்ளது. இதுவே 2017ஆம் ஆண்டு ஒற்றைப் படுக்கை அறை கொண்ட வீட்டிற்குத் தான் அதிகளவில் தேவையிருந்துள்ளது.
வீட்டு வாடகை அதிகரிக்க காரணம்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தியதாக கூறப்படுகிறது. தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை இரண்டு மடங்காக உயர்த்தியது. குடியிருக்கும் கட்டிடங்களுக்கு 50 சதவீதம், வாடகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என அறிவித்தது. இந்த உயர்வுக்கு வந்த எதிர்ப்புகள் காரணமாக 100 சதவீதமாக அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வு 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதாவது சொந்த குடியிருப்பு, வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்து வரி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட சென்னையில் வீட்டு வாடகை உயர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.