நிர்மல் பேங்க் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் (Nirmal Bang Institutional Equities) என்கிற நிறுவனமும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதாரப் பிரிவும் இணைந்து சில கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் கணிப்புப் படி இனி இந்தியார்கள் தங்கள் பணத்தை பெருக்க, முதலீடுகள் செய்ய வங்கிகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுப்பார்கள் என அடித்துச் சொல்கிறது. எதன் அடிப்படையில் இதைக் கணித்திருக்கிறார்கள்...?
பியுஷ் கோயலால் தாக்கல் செய்யப்பட்ட 2019 - 20 இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் அடிப்படையில் இதைக் கணித்து இருக்கிறார்கள்.
அறிவிப்புகள்
1. ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டத் தேவை இல்லை.
2. வருமான வரிச் சட்டம் 194A-ன் படி வங்கி மற்றும் அஞ்சலக வட்டி வருமானம் ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் சென்றால் டிடிஎஸ் (TDS- Tax Deducted At Source) பிடித்தம் செய்யப்படும் என இருக்கிறது. இந்த விதிகளின் படி இனி ஆண்டுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வந்தால் மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
கணிப்புகள்
மார்ச் 2018 நிலவரப்படி இந்திய வங்கிகளிடம் மொத்தம் 23.9 கோடி டெபாசிட் கணக்குகள் இருக்கின்றன. ஒரு டெபாசிட் கணக்குக்கு சராசரியாக 2.75 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கு வட்டியாக ஆண்டுக்கு 7.5% கணக்கிட்டால் கூட சுமார் 21,000 ரூபாய் வரும். எனவே டிடிஎஸ் பிடித்தமும் செய்யப்படும்.
இனி
புதிய பட்ஜெட் அறிவிப்புகள் நடப்புக்கு வந்தால் இனி பென்ஷன் தாரர்கள் மற்றும் சாதாரண சம்பளதாரர்களின் பணம் பெரிய அளவில் வங்கிகளுக்கே வரும். இனி ஆண்டுக்கு 5,00,000 ரூபாய் வரை டெபாசி செய்தால் கூட வட்டியாக 40,000 ரூபாய் வரும். இந்த மொத்த தொகைக்கும் டிடிஎஸ் பிடித்தமும் செய்யப்படாது. எனவே டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி அதிகமாக டெபாசிட் செய்வதோடு மட்டுமில்லாமல் புதிய டெபாசிட்தாரர்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.
நடப்பு எப்படி இருக்கும்
ஆண்டு வருமானம் 5,00,000 ரூபய்க்கு கிழ் இருக்கிறது என்றால் இனி முதலீடு செய்ய இன்ஷூரன்ஸ் எடுப்பது, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது போன்ற பிரச்னைகளை சம்பளதாரர்கள் சந்திக்க வேண்டாம். அதோடு சம்பளதாரர்களின் பணம் அப்படியே வங்கிகளிடமே தேங்கி நிற்கும் என்பதால் வங்கி குஷியாக இருக்கிறதாம். அதோடு நுகர்வும் அதிகரிக்கும் எனவும் கணித்திருக்கிறது எஸ்பிஐ பொருளாதாரப் பிரிவு. ஆக பணம் தங்களிடமே தங்குவதால் தங்களை ராஜாவாகவே கருதுவதாக சிலர் கலாய்த்திருக்கிறார்கள்.