அமெரிக்க சீன வர்த்தகப் போரைப் பற்றி நமக்குத் தெரியும். அமெரிக்க சீனாவின் பொருட்களுக்கு வரி விதித்தது போல, சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது.
இதற்கான பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இரு தரப்புக்குமே இந்த வர்த்தகப் பொர் ஒரு சுமூகமாக நிலையை அடையும் என்கிற நம்பிக்கை இல்லாமலேயே தங்கள் நாட்டின் சார்பாகவே பேசி வருகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் அதே சூழலில் தான் தற்போது இந்தியா 99 சீனப் பொருட்கள் மீது புதிதாக இறக்குமதி வரியை விதித்திருக்கிறது.
ஏன்
உள்நாட்டு வணிகர்களின் வியாபாரம் கெட்டு விடாமல் இருக்கத் தான் இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்களாம். அதோடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் சீனாவின் மலிவு விலையில் கிடைக்கிறதாம். இப்படியே விலை குறைவாகக் கிடைத்தால் இந்திய வணிகர்களின் பொருட்களை இந்தியாவிலேயே வாங்கமாட்டார்கள் என்பதால் தான் இந்த இறக்குமதி வரியை விதித்து இந்திய பொருட்களுக்கு சமமான விலையைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.
எந்த பொருட்களுக்கு எல்லாம்..?
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிறப்பு ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்கள், ஃபைபர்கள், யார்ன் ரக துணிகள், இயந்திரங்கள், பார்மா துறை சார்ந்த பொருட்கள், ரப்பர், ஸ்டீல் என 99 பொருட்களுக்கு இந்த இறக்குமதி வரியை ஜனவரி 29, 2019-ல் இருந்து விதித்திருக்கிறதாம்.
சீனா இறக்குமதி
கடந்த 2017 - 18 முழு நிதி ஆண்டில் 76.38 பில்லியன் டாலருக்கு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி ஆகி இருக்கின்றனவாம். இந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 53.87 பில்லியன் டாலருக்கு சீன பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறதாம்.
மறு பக்கம்
ஒருபக்கம் இப்படி சீன பொருட்கள் மீதே வரி விதித்து விட்டு இன்னொரு பக்கம் சீனாவுக்கு, இந்தியாவில் இருந்து பெரிய அளவில் புகையிலைகளை ஏற்றுமதி செய்ய முயன்று கொண்டிருக்கிறது இந்தியா. இப்போது இந்த 99 பொருட்களுக்கு பார்த்தால், நாளை இந்திய புகையிலைகளுக்கு நோ சொல்ல நிறைய வாய்ப்பிருக்கிறதே..? இதை எல்லாம் கண்டு கொள்ளாத டிரம்ப் சொல்லித் தான் இந்திய அரசு சீனாவுக்கு இப்படி ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறதோ என்கிற கருத்தும் பெரிய அளவில் பரவி வருகிறது. எது எப்படியோ அமெரிக்கா சீனா போல சண்டை ஆகாமல் இருந்தால் சரி.