ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் மெட்ரோபொலிட்டன் பிராந்தியத்தின் மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் ஆணையர் பந்தல பசந்த் குமார். இவர் 2012-ம் ஆண்டில் தான் Conferred IAS ஆக பதவி உயர்வு பெற்றார்.
வரும் பிப்ரவரி 10, 2019 அன்று தன் மகனுக்கு திருமணம் செய்யவிருக்கிறார். திருமணத்துக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வர இருக்கிறார்களாம். ஆக பார்ட்டி விருந்து என கலைகட்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கிறார் இந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி.
தன் மகனின் மொத்த திருமண செலவாக 36,000 ரூபாய் மட்டுமே செலவழிக்க இருக்கிறாராம். இந்த செலவு திருமண உணவுக்கான செலவு உட்படவாம். இதே போல் 2017-ல் அவரின் மகள் திருமணத்தை வெறும் 16,000 ரூபாயில் நடத்தி முடித்தாராம். அந்த அளவுக்கு நேர்மையானவராம்.
ஏன் இப்படி என அவரைக் கேட்டால் "நான் வாங்கும் சம்பளத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்கிறேன். என்னால் வீணாக ஆடம்பரச் செலவுகளைச் செய்ய முடியாது. செய்யவில்லை. அவ்வளவு தான்" என்கிறார் பசந்த் குமார்.
இப்போது ஆந்திர மீடியாக்களில் சிக்கனச் செம்மல் என ஒரு முன்னோடியாக புகழ்ந்து தள்ளப்படுகிறாராம். எது எப்படியோ அங்கும் ஒரு சகாயம் வந்திருக்கிறார். வாழ்த்துக்கள் பசந்த் குமார் சார்.