அமெரிக்காவின் முன்னணி ஐடி நிறுவனமான, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் டிசோசா சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்திகள் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காக்னிசென்ட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பினால் இந்நிறுவன ஊழியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சரி யார் புதிய சிஇஓ தெரியுமா..?
ஐடி துறை
ஒவ்வொரு வருடமும் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் தகவல் தொழில்நுட்ப துறை கடந்த சில வருடங்களாகக் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது என்றால் மிகையில்லை. அமெரிக்க அதிபரின் தொடர் விசா கட்டுப்பாடுகள், வர்த்தக விதிமுறைகள் மாற்றம், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடி, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்ற போதிய ஊழியர்கள் இல்லாதது எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது ஐடி துறை.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் தன் நிர்வாகத்தையும், வர்த்தகத்தையும் புதுப்பித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 1.5 வருடத்தில் பல்வேறு தலைமை மாற்றங்களையும், ஊழியர்கள் வெளியேற்றம், குறைவான சம்பள உயர்வு எனப் பல்வேறு நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது.
காக்னிசென்ட்
இதன் வரிசையாக இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வைத்துள்ள காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ பதிவியில் இருந்து நீக்கப்பட்டு, இப்பதவியில் புதிதாக அதாவது நிர்வாகக் குழுவில் விட்டுவிட்டு வெளியில் இருந்து புதிதாக ஒருவரை சிஇஓவாக நியமித்துள்ளது காக்னிசென்ட். உலகின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் சிஇஓ பிரையன் ஹம்பிரீஸ் தற்போது சிடிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து தனது பணியைத் துவங்க உள்ளார்.
பிரான்சிஸ் டிசோசா
இந்நிலையில் முன்னாள் சிஇஓவான பிரான்சிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறாமல் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்ற நிகழ்வு இன்போசிஸ் நிறுவனத்தில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் மேத்தா
மேலும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ராஜீவ் மேத்தா ஏப்ரல் 1ஆம் தேதி வெளியேற உள்ள நிலையில் இப்புதிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனுடன் பிரான்சிஸ் டிசோசா தலைவர் பதிவியில் இருந்து நியமிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
மாற்றம்..
இப்புதிய தலைமை மாற்றத்தால் காக்னிசென்ட் என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கும்..? தற்போது காக்னிசென்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்தாலும் அதிகளவிலான ஊழியர்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். இப்புதிய தலைமை மாற்றத்தின் மூலம் பிரையன் ஹம்பிரீஸ் நிர்வாகத்தில் அமெரிக்க அதிபர் உத்தரவுகளுக்கு ஏற்ப அதிகளவிலான ஊழியர்கள் வெளிநாடுகளில் நியமிக்கப்படலாம். இதனால் இந்தியாவில் இந்நிறுவன ஊழியர்கள் வெளியேற்றப்படவும், இடமாற்றம் செய்யவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சம்பளம்..
வெளிநாடுகளில் அதிகமான ஊழியர்களை நியமித்தால் நிர்வாகம் அதிகளவிலான சம்பளம் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இதனால் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் பாதிக்கும். இதைக் கட்டுப்படுத்த அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல் குறைந்த அளவிலான சம்பள உயர்வை மட்டும் அளிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.