சென்னை: தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக சட்டசபையில் 2019-2020-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, வேளாண்கடன் விவசாயிகளுக்கான திட்டங்களை வாசித்தார்.
தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை பல மடங்காக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்று வாசித்தார்.
கருணாநிதி - ஜெயலலிதா
31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்த ஐந்தாண்டுக் காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.
அதிகரித்த கடன்சுமை
2011ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. கடன் அளவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. 2011ஆம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2012ல் இது ரூ.1,30,630 கோடியாகவும், 2013ஆம் ஆண்டில் ரூ.1,52,810 கோடியாகவும் உயர்ந்தது.
ரூ.2,11,483 கோடி
2014ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித்தது. அதன்பின் 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.
தள்ளாடும் தமிழகம்
கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இது மிக அதிகமான கடன் அளவு என்று கருத்து கூறினர்.
கடன் அதிகரிப்பது எப்படி?
2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் தெரிவித்தார். ஒவ்வொரு நிதி ஆண்டும் தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடன் வட்டி அதிகரிப்பு
தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துத்தான் வருகிறது. 2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடி. இது 2012-13-ல் ரூ.10,835.84 கோடியும், 2013-14-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.13,129.77 கோடியும், 2014-15-ல் ரூ.15,890.18 கோடி என்று வட்டி செலுத்தியுள்ளது. இதுவே 2015-16-ல் ரூ.17,856.65 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாக செலுத்தப்பட்டது. இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டி மட்டுமே செலுத்துகின்றனர்.
இலவசங்களால் அதிகரிக்கும் கடன்.
இலவச கலர் டிவியில் ஆரம்பித்து டிவி, ஃபேன், கிரைண்டர், மானிய விலையில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் என பலவழிகளில் இலவசங்களை அள்ளி வீசி ஓட்டுக்களை அறுவடை செய்கின்றனர். ஆள்பவர்கள் மாறினாலும் கடன்சுமை தமிழர்களின் தலையில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications