சென்னை: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதில், தமிழகத்தில் 1, 986 கி.மீ தொலைவில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றார்.
உலக வங்கி நிதி உதவியுடன், 2 வது கட்ட திட்டப் பணிகள் 1,171 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது என்றும்
தமிழக சாலை மேம்பாட்டிற்காக 459.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.
சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் சென்னை சுற்றுவட்ட சாலைக்கு, கடன் உதவி பெற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருதாகவும் இந்த திட்டம் சென்னை சுற்றுவட்ட சாலை தரத்தை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
2019 - 20 ஆம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், நபார்ட் வங்கி உதவியின் கீழ் 299.60 கோடி ரூபாய் செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.