பிப்ரவரி 01, 2019 அன்று பியுஷ் கோயல் தன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, ஆர்பிஐ அமைப்பை ஏதோ தன் வீட்டு வேலைக்காரனை அதிகாரத்தோடு சொல்லி வேலை வாங்கியது போலப் பேசினார்.
இது அரசின் அதிகாரபூர்வமாக நிதியமைச்சர் பேச்சில் இல்லை. நிதியமைச்சர் பேச்சை டவுன்லோட் செய்ய க்ளிக்கவும்: https://www.indiabudget.gov.in/ub2019-20/bs/bs.pdf
கோபப் பேச்சு
"ஹமாரா சர்கார் மே, யே தம் தா, கி ஹம் ஆர்பிஐ கோ கஹேன், கே யே சபீ லோன்ஸ் கோ தேகே, அவுர் பேங்கோ கி சஹி ஸ்திதி தேஷ் கே சாம்னே ரக்கே" என ஹிந்தியிலேயே பேசுகிறார். "எங்கள் அரசுக்குத் தான் ஆர்பிஐ அமைப்பை, இந்தியாவில் இருக்கும் வாராக் கடன்களை ஒழுங்காக வசூலிக்கச் சொல்ல முடிந்தது" என்பது தான் இந்த ஹிந்தி வெறுப்புப் பேச்சின் பொருள். உண்மையாகவே ஆர்பிஐ அமைப்பு இவர்கள் வளர்த்தார்களா..? ஆர்பிஐக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்தார்களா..? இல்லை என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க முயன்று இருக்கிறோம். இந்தக் கட்டுரையில் பல பகுதிகளை முன்பே சிறு சிறு கட்டுரைகளாக எழுதி இருக்கிறோம். அவைகளின் தொகுப்பு தான் இது.
ரகுராம் ராஜன்
இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்று ஒரு பதவி இருப்பதை அப்துல் கலாம் காலத்தில் எப்படி பாமர மக்களுக்கு எல்லாம் தெரிய வந்ததோ... அப்படி ஆர்பிஐ கவர்னர் பதவியை தலைப்புச் செய்திகளாக்கி இந்தியர்களுக்குத் தெரியப்படுத்தியவர். 2013 செப்டம்பரிலேயே (காங்கிரஸ் காலத்திலேயே) கவர்னராக பதவிக்கு வந்துவிட்டார். இவர் ஆர்பிஐ கவர்னராக இருந்த போது தான் பல்வேறு புதிய நடைமுறைகளைக் கொண்டு வருகிறார். வங்கியை முதலில் வாராக் கடன்களை ஒப்புக் கொள்ளச் சொல்கிறார். அதன் பின் அதை வசூலிக்கப் வழி வகுக்கிறார். மத்திய அரசை எதிர்த்து தன் சுதந்திரப் போக்கிலேயே முடிவு செய்கிறார். வட்டி விகிதங்கள் மத்திய அரசின் கருத்து கேட்டு எல்லாம் குறைக்க முடியாது என கூலாகச் சொன்னவர்.
2013 - 16
இவர் பதவிக் காலம் முடிந்த உடன் ஆளும் பாஜகவுக்கு "என் பணி இன்னும் முடியவில்லை, இன்னொரு மூன்று வருடம் கொடுத்தால் பார்க்கலாம்" என வெளிப்படையாகக் கேட்டார். ரகுராம் பாஜகவின் அரசு அறிவுறுத்திய படி எந்த காரியத்தையும் செய்யவில்லை. தன் போக்கில் வங்கிகளுக்கு கடிவாளம் கட்டி வாராக் கடன்களை வசூலிக்க வைத்தார் என்பது தான் கோபம். குறிப்பாக வட்டி விகிதத்தைக் குறைக்காததால் ஜெட்லிக்கு, ரகுராமுக்கும் இடையில் நடந்த மோதல்கள் சாதாரண பிராந்தியப் பத்திரிகைகளில் கூட தலைப்புச் செய்திகளானது. ஆக மீண்டும் ரகுமாமுக்கு பதவி கொடுத்து சிரமப்பட வேண்டாம் என உர்ஜித் படேலை தேடிக் கொண்டு வந்து பதவியில் அமர்த்தினார்கள்.
உர்ஜித் படேல்
உர்ஜித் படேல் நமக்கு எல்லாம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்கிற அளவில் தான் தெரியும். ஆனால் ரகுராம் ராஜன் விட்டுச் சென்ற பல முக்கியப் பணிகளை நேர்மையாகவும், ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசை எதிர்த்துச் செயல்படுத்திய உறுதியான உர்ஜித்தைத் தெரியுமா..? 1,50,000 கோடி ரூபாய்க்காக மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போராடி வென்றது தெரியுமா..? ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்கிற பிம்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதர் ரகுராம் ராஜன் அளவுக்கு போற்றப்பட்டிருப்பார்.
உர்ஜித் படேல் பின்புலம்
கென்யா வாழ் NRI. வெளிநாடு வாழ் இந்தியர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் இளநிலைப் பட்டம், ஆக்ஸ்ஃபோர்டில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 1990-ல் ‘யேல்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் சர்வதேச நிதி ஆணையத்தில் பணிபுரிந்தார். 1995-க்குப் பின் இந்தியாவின் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். ரிலையன்ஸ் உட்பட. 2013-ல் ரகுராம் ராஜன் ஆர்பிஐயின் கவர்னராக பொறுப்பேற்றா அதே ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் நான்கு துணை கவர்னர்களூள் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
ஆர்பிஐ கவர்னர்
மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்த ரகுராம் ராஜனின் பதவிக் காலத்தை நீட்டிக்க பாஜக அரசு விரும்பவில்லை. ஆக ராஜனின் பதவிக் காலம் முடிந்த உடன் 2016-ல் உர்ஜித் படேல் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது பாஜகவுக்குத் தெரிந்திருக்கவில்லை, உர்ஜித், ரகுராம் ராஜனின் பிரதியாக நின்று ஆர்பிஐக்கு பெருமை சேர்ப்பார், பாஜகவுக்கு பெரிய தலைவலி ஆவார் என பாஜகவுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உண்மைகளை உலகம் அறியத் தானே செய்யும். சற்று பின்னோக்கி போனால் உண்மைகள் புரிய வருகிறது. வாருங்கள் வரலாற்றைப் பின் நோக்குவோம்.
சம்பவம் 1 - பணமதிப்பிழப்பு
"ஆப் கீ பார் மோடி சர்கார்" 2016 நவம்பர் 08-ம் தேதி, பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மோடி. பதவி ஏற்ற உடனேயே பணமதிப்பிழப்பு குறித்து தன் கருத்தை தெளிவாக முன் வைத்தார் உர்ஜித். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்கு உதவாது. நெகட்டிவ்வாக மருத்துவம், சுற்றுலா போன்ற சேவைத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றாராம். ஆனால், மோடியோ ஜெட்லியோ ரிசர்வ் வங்கி சொல்வதை, அதாவது உர்ஜித் சொன்னதை காது கொடுத்துக் கேட்க வில்லையாம்.
முட்டு கொடுக்கவில்லை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பல பொருளாதார நிபுணர்கள் வெளிப்படையாக ஆதரித்த போதும், ஆர்பிஐ கவர்னராக இருக்கும் உர்ஜித் படேல் மட்டும் அத்தனை அழுத்தமாக முட்டு கொடுக்கவில்லை என்பதை ஆளும் பாஜக ஒரு குறையாகவே கண்டது. அதோடு ஆர்பிஐயின் அறிக்கை மோடியின் பணமதிப்பிழப்பு பயன் இல்லாதது என சொல்லாமல் சொன்னது. அந்த உரசல் தான் அடுத்தடுத்த விரிசல்களுக்கு விதை போட்டது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏறத்தாழ அனைத்து (99.3%) கரன்ஸி நோட்டுகளும் ரிசர்வ் வங்கிக்குத் திரும்ப வந்துவிட்டதாகவும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பண நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கி (2017-18) ஆண்டறிக்கை வழியாகச் சொன்னார் உர்ஜித். பாஜக மேலிடம் கொதித்துவிட்டது. பியுஷ் கோயலோ, நிதி அமைச்சகமோ பாஜகவின் முடிவுகளை விமர்சிக்கச் சொல்லவில்லை, ஆனால் உர்ஜித் நேர்மையாக தனக்கு சரி எனப் பட்டதை விமர்சித்தார், ஆர்பிஐ அறிக்கையிலும் கொண்டு வந்தார்.
சம்பவம் 2 - வட்டி விகிதம்
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகத்திற்குப் பின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு கண்டது இந்தியா. இதற்குச் சரியான தீர்வு வட்டி விகித குறைப்பு என மத்திய அரசு மீசையை முறுக்கியது. நான்கு வரிகளில் விளக்க முடியாத சிக்கலான பல பொருளாதார காரணிகளால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது என நெஞ்சை நிமிர்த்தினார் உர்ஜித். ஜூன் 2017 பணக் கொள்கை (Monetary Policy) முடிவுக்கான கூட்டத்தை சிறப்பாக நடத்தினார். இதில் விஷயம் என்னவென்றால், கூட்டத்துக்கு முன் நிதியமைச்சக பிரதிநிதிகளைச் சந்திக்க கேட்டிருக்கிறார்கள். "நிதி அமைச்சக கூட்டமா, சரி பணக் கொள்கை கூட்டத்தை முடிச்சுட்டு பேசலாம்" என தில்லாக கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என அறிவித்துவிட்டு நிதி அமைச்சகம் வந்து நின்றார். இப்போது அருண் ஜெட்லி, பியுஷ் கோயலின் பரிந்துரைகளை கேட்கவில்லை ஆர்பிஐ. இப்போதும் இந்திய பொருளாதாரத்துக்கு எது சரியோ அதையே செய்தது ஆர்பிஐ.
சம்பவம் 3 - காசு கொடு
ஒவ்வொரு வருடமும் ஆர்பிஐ-ன் மொத்த லாபத்தில் ஒரு பங்கை ஈவுத் தொகையாக (Dividend) மத்திய அரசுக்கு தருவது வழக்கம். அதே போல் 2016 - 17 நிதி ஆண்டில் வழக்கம் போல ஒரு 60,000 கோடி ரூபாயை எதிர்பார்த்தது மத்திய அரசு. காரணம் ரகுராம் ராஜன் 2015 - 16 நிதி ஆண்டில் கொடுத்த ஈவுத் தொகை 65,876 கோடி ரூபாய். மத்திய அரசின் ஈவுத் தொகைக்காக, உர்ஜித் கையெழுத்து போட்ட காசோலையைப் பார்த்த நிதி அமைச்சகம் அரண்டு விட்டது. வெறும் 30,659 கோடி ரூபாய். மிச்ச 30,000 கோடி ரூபாயை ஆர்பிஐ இடமிருந்து வசூலிக்க, மீண்டும் பஞ்சாயத்து பேச உர்ஜித்தை அழைத்தது நிதி அமைச்சகம். "சார் உங்க அரசோட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு புதிய கரன்சி அச்சிட்டதனால், ஆர்பிஐயின் லாபம் குறைந்துவிட்டது, அதனால் தான் இந்த முறை அதிகம் டிவிடெண்ட் தர முடியவில்லை. இதற்கு மேல் கொடுக்கவும் முடியாது" என பதில் கொடுத்தார். இந்த பிரச்னையின் போதும் ஆர்பிஐ அமைப்பு சுரண்டத் தான் பார்த்ததெ ஒழிய அதை சுதந்திரமாக இயங்க விட நினைக்கவில்லை பாஜக.
சம்பவம் 4 - ரிசர்வ்
ரிசர்வ் என்றால் என்ன..? என்பதைப் புரிந்து கொண்டால் மேற்கொண்டு படிக்க கொஞ்சம் எளிதாக இருக்கும். ஆர்பிஐ-க்கு ஒரு ஆண்டில் வரும் லாபத்தை, முதலில் அவசரத் தேவைக்கான ரிசர்வ்வாக ஒதுக்கி வைக்கும். அந்த தொகையை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆர்பிஐ சட்ட திட்டங்களில் இருக்கும் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே அந்த ரிசர்வ் நிதியில் இருந்து பயன்படுத்தலாம். அந்த ஆர்பிஐ ரிசர்வ் தொகையைத் தான் மத்திய அரசு தானமாக கேட்கிறது. இதில் பாஜகவுக்கு கோபம் வேறு. நிதி அமைச்சகத்துக்கு கீழே இருக்குற அமைப்புக்கு 8.9 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ்வா...? என வாயைப் பிளந்தார் அருண் ஜெட்லி. அந்த தருணத்தில் இருந்து தான் இந்த ரிசர்வ்களில் ஒரு கண் வைத்து வளைக்க திட்டமிட்டார்கள். இப்போது அந்த ரிசர்வ் தொகைகளில் இருந்து ஒரு 3.06 லட்சம் கோடியை அரசுக்கு தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ரிசர்வ்வுக்காக பேச்சு வார்த்தை
"படேல், ஆர்பிஐக்கு எதுக்கு காசு. நீங்க எதுக்கு 2016 - 17-லயும், ரிசர்வ் வெச்சிருக்கீங்க" என காட்டு கத்து கத்தினார்கள் நிதி அமைச்சக அதிகாரிகள். 2016 - 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ வங்கியின் நிதி நிலை அறிக்கைகள் படி ஆர்பிஐ இடம் 8,94,684 கோடி ரூபாய் இருந்தது. இதைப் பார்த்த உடன் ஜெட்லிக்கே அத்தனை கோபமாம். இதை எல்லாம் ஆர்பிஐ என்ன பண்ணப் போகுது என கடுப்பானார்கள். உர்ஜித்தோ "ஒரு நிறுவனத்துக்கு இது எல்லாம் தேவை, அதனால் எடுத்துக் கொண்டோம். 2015 - 16-ல் சுமார் 10.2 லட்சம் கோடியாக இருந்த ரிசர்வ்கள் இப்போது ஆர்பிஐ லாப குறைவால் 8.94 லட்சம் ரூபாயாக குறைந்திருக்கிறது. உங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், இனி ஆர்பிஐ எந்த ஒரு ஈவுத் தொகையையும் தரும் நிலையில் இல்லை" என தன்மையாக பதில் கூறி, கொடுத்த டீயை குடித்துவிட்டு கிளம்பிவிட்டாராம். பாஜக அரசின் சுரண்டல்களுக்கு அடி பணியாத ஆர்பிஐ அமைப்பைப் பார்த்து வெறுப்பின் உச்சிக்கே சென்றார்கள் பாஜகவினர்.
சம்பவம் - 5 வாராக்கடன்
பாஜக அரசைக் கேட்காமல் ஒரு பெரிய முடிவை எடுக்கிறார் உர்ஜித். "ரூ.2,000 கோடிக்கு மேல் வாராக் கடன் வைத்திருக்கும் நிறுவனங்களின் மீது, கடன் சீரமைப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தும் 180 நாட்களுக்குள் கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒத்து வராவிட்டால், அந்த நிறுவனத்தை நொடிந்த நிறுவனம் (Insolvent company) என வங்கிகள் பட்டியல் இட வேண்டும். Insolvency & Bankruptcy Code-ன் கீழ் வாரக் கடன் உள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" நிறைந்த அன்பும் ப்ரியங்களுடன் உர்ஜித் படேல்... என 2018 பிப்ரவரி 12-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கு பகீர் கிளப்பினார்.
சொன்ன படி நடந்தார்
KSK Energy, Avantha Group, GMR Energy and Jaiprakash Power Ventures போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதே தில்லாக தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT -National Company Law Tribunal)- வழக்கு தொடுத்தார் உர்ஜித். எவ்வளவு தொகையை மீட்கத் தெரியுமா...? 1.5 லட்சம் கோடி ரூபாய். இந்த NCLT தான் நிறுவன கடன் சார்ந்த பிரச்னைகளை கையாளும் அமைப்பு, இங்கு வரும் தீர்ப்பு சரிப்பட்டு வரவில்லை என்றால் நீதி மன்றங்களுக்குப் போகலாம்.
கம்பெனிகள்
மேலே சொன்ன தனியார் கார்ப்பரேட்டுகள் Independent Power Producers Association of India என்கிற பெயரில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா...? கார்ப்பரேட்டுகள் சார்பாக அரசு நிலைப்பாடு இருந்தது தான். அங்கும் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆர்பிஐ தன் இஷ்டத்துக்கு விசாரிக்க உத்தரவிடுமாறு நீதி மன்றத்திடம் கேட்டார் உர்ஜித். அரசோ கம்பெனிகளுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றது. ஆக வாராக் கடன்களை வசூலிக்கப் போராடிய ஆர்பிஐ அமைப்புக்கு முட்டுக் கட்ட போட்ட அதே பாஜக அரசு தான் வெட்கமே இல்லாமல் "ஹமாரா சர்கார் மே, யே தம் தா, கி ஹம் ஆர்பிஐ கோ கஹேன், கே யே சபீ லோன்ஸ் கோ தேகே, அவுர் பேங்கோ கி சஹி ஸ்திதி தேஷ் கே சாம்னே ரக்கே" எனப் பேசி இருக்கிறார் பியுஷ் கோயல்.
நீதி மன்றத் தீர்ப்பு
ஆர்பிஐ நடவடிக்கைகளில் இருந்து கம்பெனிகளுக்கு தற்காலிக ஓய்வு அளிக்க முடியாது. இதை குறித்து ஒரு உயர் மட்டக் குழு அமைத்து 2 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். மின் அமைச்சகம் ஆர்பிஐ கவர்னரோடு கலந்தாலோசித்து, ஆர்பிஐயில் இருந்து ஒரு உயர் அதிகாரியை அந்த உயர் மட்டக் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Insolvency & Bankruptcy Code-ன் கீழ் நிறுவனங்கள் மீது ஆர்பிஐ நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை என்றது நீதி மன்றம். பாஜக அரசு போட்டு முட்டுக் கட்டைகளைத் தாண்டியும் வென்றது ஆர்பிஐ.
பிரிவு விரிவு
ஆக ஆர்பிஐக்கு எதிராகவும், நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு வக்காளத்து வாங்கியது. உர்ஜித்தோ தனி ஒருவனாக நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை கடுமை ஆக்கினார். கார்ப்பரேட் நிறுவனங்கள் விடாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வரும் மார்ச் 2019-ல் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது. அப்படி வந்தால் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது NCLT-ல் வழக்கு பதியப்பட்டு கடன் தொகைகள் மீட்கப்படும் அல்லது நிறுவனங்களின் சொத்துக்களை விற்று வங்கிக் கடன் தொகை எடுத்துக் கொள்ளப்படும். இத்தனை விடாப் பிடியாக விரட்டி கடனை வசூலிக்க வங்கிகளுக்கு வழி செய்து கொடுத்த உர்ஜித் சாருக்கும், ஆர்பிஐக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட். ஆர்பிஐக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்த பாஜக அரசுக்கு ஒரு குட்டு.
சம்பவம் 6 - ஆர்பிஐ சட்டம் பிரிவு 7
மிக சுருக்கமாக "மத்திய அரசின் சொல் பேச்சைக் கேட்டு ஆர்பிஐ நடக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு மத்திய இயக்குநர்கள் குழு வைத்து, ஆர்பிஐ செய்ய வேண்டியவைகளை அரசு மேற்கொள்ளலாம்." என்பது தான் ஆர்பிஐ சட்டம் பிரிவு 7. இந்த சட்டப் பிரிவை இதுவரை இந்தியாவில் யாருமே பயன்படுத்திய தில்லை. இந்த சட்டப் பிரிவின் கீழ் சொல்லப்படும் அறிவுரைகள் ஆர்பிஐ கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். கிட்டதட்ட ஆர்பிஐ என்கிற தனி அமைப்பைப் கூட அரசுக்கு கூஜா தூக்கும் சொம்பு அமைப்பாக மாற்றிவிடும். ஆனால் பாஜக பயன்படுத்தியது என்பது தான் வேதனை.
காரணம்
பணம் தான். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக மத்திய அரசுக்கு ஒழுங்காக வருவாய் இல்லை. ஆக அந்த பட்ஜெட் துண்டை சரி செய்ய, ஆர்பிஐ-ன் 8.9 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் தொகையில் இருந்து 3.06 லட்சம் கோடி ரூபாயை கேட்டது இந்த சட்ட பிரிவைப் பயன்படுத்தி தான். அதோடு 1.5 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் தொகையை தராத கம்பெனிகள் மீது கருணை காட்டச் சொல்லி மத்திய அரசு ஆர்பிஐ-யை மிரட்டியதும் இந்த ஆர்பிஐ சட்டம் பிரிவு 7-ன் கீழ் தான். மக்கள் பணத்தை மீட்பதற்கு பதிலாக, கார்ப்பரேட்டுகளிடம் கருணை காட்டச் சொன்ன பாஜக அரசின் அறிவுரைகளை ஆர்பிஐ ஏற்கவில்லை. மாறாக கம்பெனிகள் மீதான பிடியை இறுக்கியது.
சம்பவம் 7 - PCA
Promp Corrective Action என்பது தான் PCA வின் விரிவாக்கம். வங்கிகளின் நிதி நிலையைப் பொறுத்து தான் ஆர்பிஐ-ன் PCA திட்டத்தில் பட்டியலிடப் படுவார்கள். PCA-வில் பட்டியலிடப்படும் வங்கிகள் பெரிய தொகை டெபாசிட்டுகளை வாங்கக் கூடாது. அதே போல் இருக்கும் டெபாசிட்டுகளைக் கூட மறு டெபாசிட்டுகளாக (Renew) செய்யக் கூடாது. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் புதிய சேவைகளை வழங்கவோ, கூடுதல் கட்டணங்களை வசூலிக்ககவோ, மற்ற வங்கிகளிடம் கடன் வாங்கவோ, புதிய கிளைகளை திறக்கவோ கூடாது. மிக முக்கியமாக PCA திட்டத்தின் கீழ் இருக்கும் வங்கிகள் ஆர்பிஐ அனுமதி இல்லாமல் பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. குறிப்பாக கார்ப்பரேட்டுக்கு பெரிய கடன் தொகைகளை வழங்கக் கூடாது. இப்படி இந்தியாவின் 11 பொதுத் துறை மற்றும் அரசு வங்கிகள் இந்த PCA திட்டத்தின் கீழ் பட்டியலிடப் பட்டார்கள். அந்த அளவுக்கு பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை பலவீனமாக இருந்தது, இன்னும் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே விட்டால் இந்திய வங்கிகள் மொத்தமாக திவால் ஆகிவிடும் என தில்லாக சொல்லி PCA திட்டத்தை ஒழுங்காகச் செயல்படுத்தியது ஆர்பிஐ.
பாஜக அரசு தரப்பு
"எப்பா உர்ஜித், நீங்க சொன்ன PCA திட்டத்தால மொத்த இந்தியாவும் ஸ்தம்பிச்சி இருக்கு. PCA திட்டத்த வாபஸ் வாங்குங்க" என நிதி அமைச்சகம் அழுத்தம் கொடுத்தது. "என் காலத்தில் இந்திய வங்கிகள் திவால் ஆவதை நான் விரும்பவில்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து PCA திட்ட உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் உர்ஜித் படேல். ஆர்பிஐ அத்தனை விரைப்பாக செயல்பட்டு இந்திய பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்றியது. ஆனால் இப்போது சில வங்கிகளின் நிதி நிலை முழுமையாக சரி வராமலேயே இந்த பிசிஏ திட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டது பாஜக அரசு. ஆம் பஜக சொன்னதை இங்கும் கேட்கவில்லை ஆர்பிஐ. பயபுள்ள என்ன சொன்னாலும் இந்த ஆர்பிஐ அமைப்பும் கவர்னர்களும் பாஜகவின் பேச்சை மதிக்காததால் ஒரு அதிரடி முடிவு எடுத்தது பாஜக. அந்த முடிவின் பெயர் RBI Board Meeting.
மோதல் 8 - நீயா Vs நானா
நவம்பர் 19, 2018-க்கு முன், இந்திய ஊடக வரலாற்றில் RBI Board Meeting-க்கு இத்தனை கவனம் கொடுத்திருக்கமாட்டார்கள் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க இந்த கூட்டத்தில் என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா..? இந்த கூட்டத்தில் தான் RBI Board பெரிதா..? அல்லது RBI Governor..? பெரியவரா என்கிற சண்டை உருவானது. இப்போது RBI Board சொன்னால் ஆர்பிஐ கவர்னர் கேட்டே ஆக வேண்டும் தானே என மத்திய பாஜக அரசு கிடிக்கிப்பிடி போட்டது. RBI இயகுநர் குழுவில் (Board of Directors) மொத்தம் 21 இயக்குநர் பதவிகள் அல்லது இடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு ஆர்பிஐ கவர்னர், நான்கு துணை கவர்னர்கள், ஆர்பிஐ-ன் பிராந்திய குழுக்களில் இருந்து வரும் நான்கு உறுப்பினர்கள் என ஆர்பிஐ சார்பில் மட்டும் (1+4+4 = 9) இயக்குநர்கள் வருவார்கள். அது போக இரண்டு பேர் நிதி அமைச்சகத்தின் நாமினிக்களாக இருப்பார்கள். மீதமுள்ள 10 பேரும் அரசினால் இயக்குநர்களாக நியமிக்கப்படுபவர்கள் தான். இந்த 10 பேரை நியமிக்கும் முன்பு நிதி அமைச்சகம், ஆர்பிஐ கவர்னரிடம் ஒரு வார்த்தை கேட்டு தான் நியமிப்பார்கள். சில நேரங்களில் தன்னுடைய இயக்குநர் குழுவுக்கான 10 பேரை ஆர்பிஐயே முன் மொழியும். அதில் இருந்து தான் அரசு தேர்ந்தெடுக்கும். ஆனால் உர்ஜித்திடம் குருமூர்த்தி, சதீஷ் குலாத்தி, மனீஷ் சபர்வால், சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களை நியமிக்கும் போது ஒரு வார்த்தைக் கூட கேட்ககாமல் ஒரு சபை நாகரீகம் கூட இல்லாமல் அவமானப்படுத்தினார்கள். இப்படி ஆர்பிஐ கவர்னரை அவமானப்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்தது பாஜக அரசு.
Y H Malegam
இந்த பிரச்னை குறித்து 20 வருடங்களாக RBI Board-ல் பணியாற்றிய பட்டயக் கணக்காளர் Y H Malegam ஒரு ஆங்கில ஊடகத்திடம் பேசி இருக்கிறார். "என்னைப் பொருத்தவரை ஆர்பிஐ கவர்னர் முடிவு தான் இறுதியானது. அப்படி ஒருவேளை ஆர்பிஐ கவர்னரை எதிர்த்து தீர்மானங்களை RBI Board கொண்டு வர வேண்டும் என்றால், RBI Board-ன் தீர்மானங்களை மத்திய அரசின் முன் அனுமதியோடு இந்திய கெஸட்டில் வெளியிட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்குள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அந்த தீர்மானத்தை தாக்கல் செய்து வாக்கெடுப்பு அடிப்படையில் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்." என்கிறார்.
ரகுராம் ராஜன் வருத்தம்
RBI Board எப்போதுமே ஆர்பிஐ-ன் செயல்பாடுகளில் தலையிடாது. RBI Board ஒரு ஆலோசனைக் குழு. அது ஆர்பிஐ-ன் செயல்பாடுகளை விமர்சிக்கலாம், அறிவுரை கூறலாம், புதிய யோசனைகளை முன் மொழியலாம், ஆனால்... ஆர்பிஐ கவர்னர் தான் செயல்படுத்துவார். அவர் தான் ஆர்பிஐ அமைப்பின் செயல்பாடுகளுக்கு முழு பொறுப்பு. ஆர்பிஐயோ ஒரு தனி அமைப்பு. சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய பதவியையும், நபரையும் இன்று அரசு தன் அழுத்தத்தால் மாற்ற விரும்புவது மிகவும் வருத்தத்துக்குரியது என்றார்.
ராஜினாமா
எத்தனையோ பிரச்னைகளைக் கடந்தும் தன் வேலையை ஒழுங்காகப் பார்த்த உர்ஜித்துக்கு தன் RBI Board-ஐ தனக்கே எதிராக திருப்பும் முயற்சியைக் கண்டவர் ஏனோ மனம் நொந்து விட்டார் போல. அடுத்த RBI Board கூட்டம் நடக்க இருந்த டிசம்பர் 14, 2018-க்கு முன்பே டிசம்பர் 10 2018-ல் தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். இத்தனை நடந்தும் மனிதர் யாரையும் குறை சொல்லவில்லை. தன் பதவிக் காலம் முழுவதும் மத்திய அரசுடன் போராடிய நேர்மையான கவர்னர் "என் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்" என ராஜினாமா கடிதத்தை முடித்த போது எவ்வளவு வலித்திருக்கும். அந்த வலியைக் கொடுத்த பெருமைக்குரியவர்கள் பாஜக மேலிடம் தான்.
நம்ம பய..!
ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் போன்ற கறார் பேர்விழிகளால் பட்டது எல்லாம் போதும் என தன் செல்லப் பிள்ளைகளில் ஒருவரைத் தேடினார்கள் சிக்கினார் சக்தி காந்த தாஸ். வரலாறு படித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு அடித்தது ஜாக்பாட். "சொன்ன பேச்ச கேட்டீங்கன்னா..? அடுத்த ஆறு வருடம் நீங்க தான்" என ஆசை காட்டி மொத்த ஆர்பிஐ அமைப்பையும் மோசம் செய்துவிட்டது பாஜக. இப்போது பாஜகவின் கண் அசைவுக்கு கட்டுப்படும் அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது வரலாற்றுப் புகழ் ஆர்பிஐ. இதற்கு எல்லாம் காரணம் பாஜக. ஒரு விதத்தில் ஆர்பிஐ அமைப்பை தன் வீட்டு வேலைக் காரர்களுக்கு கட்டளை இடுவது போல இனி சொல்ல முடியும் தானே..? ஆக ஆர்பிஐ அமைப்பை தரக் குறைவாக பியுஷ் கொயல் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கத் தான் செய்கிறது.