பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்திய பார்மாசியூட்டிக்கள் நிறுவனங்களில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் சன் பார்மா தான். இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய அலோபதி மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்று. சன் பார்மாசியூட்டிகள் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 2018 வரையான மூன்று மாதங்களில் சுமார் நான்கு மடங்கு அதிக லாபத்தை இட்டி இருக்கிறது.
டிசம்பர் 2018 காலாண்டுக்கான முடிவுகள் இன்று பிப்ரவரி 12, 2019 மாலை 5.30 மணிக்கு வெளியானது. இதில் டிசம்பர் 2018 காலாண்டுக்கான நிகர லாபம் 1,242 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதைத் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் சன் பார்மா நிறுவனத்தின் நிகர லாபம் வெறும் 322 கோடி ரூபாயாகத் தான் இருந்தது.
பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் கூட அதிகபட்சமாக 986 கோடி ரூபாய் தான் ஈட்டும் என கணித்திருந்தது. ஆனால் தரகு நிறுவனங்களில் ஒட்டு மொத்த கணிப்புகளை எல்லாம் மீறி கணிப்பை விட சுமார் 300 கோடி ரூபாய் அதிக நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது சன் பார்மா.
சன் பார்மாவின் வருவாயும் சுமார் 16 சதவிகிதம் அதிகரித்து 7,740 கோடி ரூபாயாக இருக்கிறதாம். சன் பார்மாவின் காலாண்டு முடிவுகள் வெளியாகாத போதே இன்று சுமார் 2 சதவிகிதம் பங்கு விலை அதிகரித்தே வர்த்தகமானது. ஆனால் சென்செக்ஸ் வெறும் 0.66 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலாண்டு முடிவுகள் வெளி வந்திருப்பதால், நாளை காலை முதலே சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் நல்ல ஏற்றம் காணும் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கை காட்டுகிறார்கள்.