டெல்லி: நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் புதிய தலைவராக புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்த்ரா தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றதை அடுத்து பிசி மோடி நேரடி வரிகள் வாரியத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிகரித்துள்ள பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு புதிய தேர்தல் ஆணையராக, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்த்ரா நேற்று நியமிக்கப்பட்டார்.
சுசில் சந்திரா 1980 ஆம் ஆண்டு இந்திய வருவாய் துறை பணியில் சேர்ந்தார். மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக படிப்படியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இப்போது தேர்தல் ஆணையராகி உள்ளார்.
இதையடுத்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவரும் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான புரமோத் சந்திர மோடி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரமோத் சந்திர மோடி கடந்த 1982ஆம் ஆண்டு இந்திய வருமாய்த்துறை அதிகாரிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று வருமாய்த்துறையில் பணியைத் தொடங்கினார். பல்வேறு பதவிகளில் வருவாய்த் துறையில் திறமையாக பணியாற்றியுள்ளார். வருமான வரித் துறையின் பணியில் இணைந்து படிப்படியாக உயர்ந்து உச்சபட்ச கொள்கை வகுப்பு அமைப்பான நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் புதிய தலைவராக பிரமோத், பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.