டெல்லி: ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிகள் கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்பிட்டால், இவ்வாண்டு, ஜனவரி மாதத்தில் 45 விழுக்காடு குறைந்து '270,500 பீப்பாய்கள் தினசரி (பிபிடி)' என்ற அளவுக்கு சரிந்தன.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொருளாதாரத் தடையை விதித்தது. இருப்பினும் இந்தியா உட்பட எட்டு நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையை அமெரிக்கா ஆறு மாதங்களுக்கு தளர்த்தி கொள்வதாக அறிவித்தது.
ஈரானிடமிருந்து, மாதத்திற்கு 1.25 மில்லியன் டன் என்ற அளவில் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. ஆனால், டிசம்பருடன் ஒப்பிட்டால் ஜனவரியில் ஈரானிடமிருந்து இந்தியாவில் கச்சா எண்ணையின் கொள்முதல் அளவு 10.4 சதவீதம் குறைவு ஆகும்.
ஈரானை பொறுத்தளவில், இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. படிப்படியாக ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்துக் கொண்டே வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஈரானை பொறுத்தளவில் 500,000 bpd அளவுக்கு மேலான கச்சா எண்ணெய்யை 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து விட திட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்காக கிட்டத்தட்ட இலவசமாகவே போக்குவரத்து செலவை ஏற்றுக் கொள்வதாகவும், கடன் கால அளவை நீடிப்பதாகவும் அந்த நாடு தெரிவித்திருந்தது.