வாஷிங்டன்: இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வெனிசூலா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் நிதி நெருக்கடியை சரி செய்ய முடிவு செய்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தியாவிடமிருந்து ரூபாய் மதிப்பு மற்றும் பண்ட மாற்ற முறையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடர்ந்தால் பிற நாணயங்களுக்கு எதிரான மதிப்பு சரியும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது. வெனிசூலா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் , வெனிசூலாவின் வளங்களை திருடும் அதிபர் மதுரோவிற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா பொருளாதாரத்தடை
ஈரானிலிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் செய்து வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தால் சற்றுக் குறைந்தது. ரூபாய் அல்லது பண்ட மாற்ற முறையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம் என்று அமெரிக்கக் கூறியது. இதனால் மீண்டும் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது.
இதே போன்று வெனிசுலா மீதும் சில மாதங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய்
நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வெனிசுலா கச்சா எண்ணெய்யை அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைச் சரி செய்ய முடிவு செய்துள்ள வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தியாவிடமிருந்து ரூபாய் மதிப்பு மற்றும் பண்ட மாற்ற முறையில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
பிச்சை எடுக்கும் மக்கள்
வெனிசுலாவின் எல்லா நிலை மக்களையும் பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளது. 2017ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், உணவுப் பற்றாக்குறையால் சராசரியாக 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர். 90 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். தினசரி உணவுக்காகப் பிச்சையெடுக்கும் நிலையில் நாட்டின் பாதி சதவீதத்தினர் இருக்கிறார்கள். நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள்.
விலை அதிகரிப்பு
லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு. ஆனால், இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள். பணவீக்கம் படு உயர்வில் இருக்கிறது. வெனிசுலாவில் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை நிர்ணய முறையை வர்த்தகர்கள் நீக்கிவிட்டார்கள். அவர்கள் சொல்வதுதான் விலை. உணவு, தண்ணீர் உட்பட அனைத்து பொருள்களும் மிகப்பெரும் பற்றாக்குறையில் இருக்கிறது.
பணவீக்கம் அதிகரிப்பு
2014ஆம் ஆண்டில் 69 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் 2016ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி மிகவும் அதிகரித்ததால், 800 சதவிகிதமாக உயர்ந்தது. 2018ஆம் ஆண்டில் வெனிசுலாவின் பணவீக்கம் 16,98,488 சதவிகிதமாக உயர்ந்தது. வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.
புதிய அதிபர் பதவியேற்பு
வெனிசூலா அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.
கச்சா எண்ணெய் வாங்க தடை
கடந்த மாதம் எதிர்கட்சி தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்பைடையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்தநிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் வெனிசுலா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுபோலவே ஐரோப்பிய நாடுகளும் இந்த தடையை விதித்துள்ளன.
பண்ட மாற்று முறை
வெனிசுலாவின் பொருளாதாரம் முழுக்க முழுக்க கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய தயார் என வெனிசுலா அறிவித்தது. அமெரிக்காவின் தடை உள்ளபோதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபாணியில் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வெனிசுலா முன் வந்துள்ளது.
இந்தியாவிற்கு வாய்ப்பு
வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடும் என அமெரிக்க நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இந்த பிரச்சினையில் தீர்வு கிடைப்தில் சிக்கல் நீடிக்கிறது. இதற்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்திய ரூபாய் மதிப்பிலேயே கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் டாலர் விலையேற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ரூபாய் மாற்று தொகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு பராமரிப்பிலும் சிக்கல் இல்லை. அதுபோலவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெனிசுலாவுக்கும் பிரச்சினை தீரும். பிரச்சினைகள் தீர அமெரிக்கா விடுமா?