கொல்கத்தா: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 41 வீரர்களில் 23 வீரர்கள் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று இருந்தனர். வீரர்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் மொத்தமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகளின் தற்கொலைப்படை நடத்திய தாக்குலில் 41 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். உலகம் முழுவதும் இருந்தும் இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் நிதி உதவியும் அளித்து வருகின்றனர். மத்திய அரசும் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும், குடும்ப உறுப்பினருக்கு மத்திய அரசு வேலையும் அளித்துள்ளது. தமிழக அரசும் உயிர்த் தியாகம் செய்த தமிழக வீர்ர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை அளித்து தன்னுடைய மாண்பினை காத்துள்ளது.
உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் தங்களின் குடும்பச் செலவிற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தனர். இந்நிலையில், அவர்கள் தீவிரவாதிகளின் எதிர்பாராத தாக்குதலில் உயிர் தியாகம் செய்ததால், அவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கும் சூழல் உருவாகி உள்ளது. உயிர் தியாகம் செய்த குடும்பதினரின் நிலையை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்து இருப்பதால், அவர்கள் தன்னால் ஆன நிதி உதவியை அளித்து வருகின்றனர்.
தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 41 வீரர்களில் 23 வீரர்கள் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று இருந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு தன்னாலான உதவியை செய்வது தன்னுடைய தலையாய கடமை என்று நன்கு உணர்ந்த எஸ்பிஐ வங்கி, வீரர்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் மொத்தமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியானது, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்பதால், தொட்டதற்கு எல்லாம் வாடிக்கையாளர்களின் கணக்கில் கை வைத்து அபராதம் போடுவது, சேவைக்கட்டணம் வசூலிப்பது, வாடிக்கையாளர்களுக்கு போதிய சேவை அளிக்காமல் வெறுப்பேற்றுவது என்ற எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களின் மனதில் நிலைத்துள்ளது. எஸ்பிஐ வங்கி தற்போது மேற்கொண்ட செயல் அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார், நாட்டின் பாதுகாப்பிற்காக சென்ற வீரர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் தியாகம் செய்துள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாகும். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தை காப்பது நம் தலையாய கடமையும் கூட. தாக்குதலில் பலியான வீரர்களில் 23 வீரர்கள் எங்கள் வங்கிக் கிளைகளில் கடன் பெற்றிருந்தனர். வீரர்கள் பெற்றிருந்த அனைத்து கடன்களையும் நாங்கள் தள்ளுபடி செய்துவிட்டோம். கூடவே, அவர்கள் எங்கள் பெருமை மிகு வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்போகிறோம். இந்தத் தொகை எங்களால் இயன்ற சிறிய உதவிதான். எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்க விரும்பினால், “bharatkeveer.gov.in” என்ற இணையதளத்தில் நேரடியாக நிதி உதவி அளிக்கலாம் என்று தெரிவித்தார்.
எஸ்பிஐ வங்கியின் இந்த செயலை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற வங்கிகளும் உயிர் தியாகம் செய்துள்ள வீரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மற்ற வங்கிகளும் உயிர் தியாகம் செய்த வீரர்களின் கடன்களை தள்ளுபடி செய்து தங்களின் மாண்பினை காக்குமா என்பது அனைத்து தரப்பினரின் கேள்வியாகும்.