கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த 2,500 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தீவிர வாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதளில் 40-க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மதை பாகிஸ்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயங்கரமாக ஆதரிப்பது தான் இந்த தீவிரவாத செயல்களுக்கு காரணம் என உலகமே சொன்னாலும், பாகிஸ்தான் நம்பவதாய் இல்லை.
இதற்கு ஆயுதங்கள் வழியாக பதிலடி கொடுப்பதற்கு பதிலாக முதலில் பொருளாதார ரீதியில் அடி கொடுத்திருக்கிறது இந்தியா. அதன் முதற்கட்டம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்க வரி விதித்து தாளித்திருக்கிறது. அதோடு MFN - Most Favoured Nation ஸ்டேட்டஸையும் ரத்து செய்திருக்கிறது.
MFN - Most Favored Nation..?
11-ம் வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்தவர்களூக்கு இந்த General Agreement on Tariffs and Trade (GATT) 1994 பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த ஒப்பந்தப்படி உலக வர்த்தக அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் MFN - Most Favoured Nation ஸ்டேட்டஸ் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றது. அதாவது உலகில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுக்கு பிடித்தமான நாடுகளே. ஆக எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா நாட்டு பொருட்களுக்கும், நல்ல விலை கிடைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் எனச் சொல்வது தான் இந்த Most Favoured Nation ஸ்டேட்டஸ்.
கேட்ட இந்தியா..!
உலக வர்த்தக அமைப்பு சொன்ன உடனேயே பாகிஸ்தானுடன் நட்பு பாராட்ட 1996-லேயே ஓகே சொன்னது. அதாவது 1996-ல் இந்தியா, பாகிஸ்தானுக்கு Most Favoured Nation ஸ்டேட்டஸ் வழங்கியது. இதனால் இந்தியா பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளை வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் எனச் சொன்னது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து வெறும் 138 பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டது. சுமார் 1200 பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தது. சுருக்கமாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு Most Favoured Nation ஸ்டேட்டஸ் கொடுக்கவில்லை.
பேச்சு வார்த்தை
பாகிஸ்தானோடு நல்ல வணிக உறவைக் கொண்டு வர பாகிஸ்தானுக்குக் கொடுத்த Most Favored Nation ஸ்டேட்டஸில் எந்த சூழலிலும் கைவைக்கவில்லை. கூடுமான வரை பேச்சு வார்த்தைகளிலேயே தீர்க்க முயன்றது. நவம்பர் 02, 2011-ல் பாகிஸ்தான் இந்தியாவுக்கு Most Favoured Nation ஸ்டேட்டஸ் கொடுக்கும் எனச் சொன்னது. ஆனால் கொடுக்கவில்லை.
கொஞ்சம் இறக்கம்
மார்ச் 2012-க்கு முன் வரை இந்தியாவை தங்களின் வியாபார பட்டியலில் நெகட்டிவ் லிஸ்டில் தான் வைத்திருந்தது பாகிஸ்தான். அதன் பின் தான் கொஞ்சம் மனம் இறங்கி இந்தியாவை பாசிட்டிவ் லிஸ்டில் வைத்துக் கொண்டது. இந்த சமரசத்தால் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1950 பொருட்களை இறக்குமதி செய்ய முன் வந்தது. சில பொருட்களை மட்டும் தங்கள் நாட்டு தொழிற்சாலைகளைக் காக்க இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தடை விதித்தது.
கோவத்தில் கொப்பளித்த இந்தியா
2010-க்குப் பின் பல முறை தீவிரவாதத் தாக்குதல் நடந்த போதெல்லாம் கடுப்பாகி அறிக்கைகள் எல்லாம் விட்டாலும், பாகிஸ்தானுக்குக் கொடுத்த Most Favored Nation ஸ்டேட்டஸில் கை வைக்கவில்லை. அவ்வளவு ஏன் டிசம்பர் 2018-ல் ராஜ்ய சபாவில் இதைப் பற்றி கேள்வி எழுப்பிய போது கூட "பாகிஸ்தானுக்குக் கொடுத்திருக்கும் Most Favored Nation ஸ்டேட்டஸ் குறித்து எந்த கருத்தும் இல்லை. அதை மாற்றுவதாகவே இல்லை" என எழுதிக் கொடுத்தார்கள் ஆலுங்கட்சியினர். காங்கிரஸோ பாஜகவோ இருவருமே பாகிஸ்தானுக்கு கொடுத்த MFN ஸ்டேட்டஸில் கைவைக்கவில்லை.
அவ்வளவு பெரிய ஆளா..?
அப்படி என்றால் பாகிஸ்தான் இந்தியாவை விட பெரிய ஆளா..? பாகிஸ்தானோடு வணிக ரீதியில் வர்த்தகம் மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியாவுக்கு நஷ்டம் வந்து விடுமா என்ன..? இல்லவே இல்லை. எல்லாம் ஒரு நட்புக்காகத் தான் பாகிஸ்தானை அரவணைத்துச் சென்றது இந்தியா. 2017 - 18 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 19,56,000 கோடி ரூபாய். இதில் பாகிஸ்தானுக்கு செய்யும் மொத்த ஏற்றுமதி வெறும் 12,400 கோடி ரூபாய் தான். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வெறும் 0.6 சதவிகிதம் தான்.
பாகிஸ்தானுக்கு..?
ஆனால் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்திருந்த Most Favored Nation ஸ்டேட்டஸை இழந்ததால் டாலரில் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். காரணம் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது 12,400 கோடி ரூபாய். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது 3,150 கோடி ரூபாய். இனி இந்த 3,150 கோடி ரூபாய்க்கு செய்யும் இறக்குமதிக்கு கூடுதலாக 200% இறக்குமதி வரி வேறு செலுத்த வேண்டும். எனவே இனி இந்தியாவில் யாரும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யமாட்டார்கள். எனவே இனி இந்தியாவோடு பாகிஸ்தான் வர்த்தகம் மேற்கொள்ளும் போது அதிக அளவில் டாலர் கையிருப்பை வைத்துக் கொண்டு தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.
உதாரணம்
இப்போது பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து 100 டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதே நேரத்தில் 60 டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது என்றால் பாக்கி 40 டாலரை மட்டும் கொடுத்தால் போதும். ஆனால் இப்போது இந்தியா, பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்த Most Favoured Nation ஸ்டேட்டஸை திரும்ப வாங்கிக் கொண்டதால் பாக் பொருட்கள் மீது இந்தியா இறக்குமதி வரியாக 200% சுங்க வரி வேறு விதித்திருக்கிறது. ஆக யாரும் இனி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய விரும்பமாட்டார்கள். ஆக இப்போது பாகிஸ்தானுக்குத் தேவையான 100 டாலர் பொருட்கள் இந்தியாவில் இருந்து போக வேண்டும் என்றால் இனி அவர்கள் 100 டாலரை தயாராக கையில் வைத்துக் கொண்டு தான் வியாபாரம் பேச வேண்டி இருக்கும். இந்தியாவில் இருந்து சில சிறப்பு ரசாயனங்கள், பருத்தி போன்றவைகள் பாக் தொழிற்சாலைகளின் முக்கிய மூலப் பொருட்களாக இருக்கிறதாம். எனவே மறைமுகமாக பாகிஸ்தானின் சில துறைகளில் விலை வாசி ஏற்றத்துக்கு இந்தியா முக்கிய காரணமாக இருக்குமென்றும் கணித்திருக்கிறார்கள். இது பாக் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அடி தான் என இந்திய வணிக அமைச்சக வட்டாரங்கள் சொல்கிறார்கள்.
பாக் தரப்பு
இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற பின் "நம்மில் நிலவும் ஏழ்மையை அகற்ற ஒட்டு மொத்த ஆசிய கண்டமும் ஒன்றிணைந்து, பேச்சு வார்த்தைகள் நடத்தி நம் வேறுபாடுகளை மறந்து வியாபாரம் செய்ய வேண்டும்" எனச் சொன்னார். ஆனால் இப்போது துரதிர்ஷ்டவசமாக அதே இம்ரான் கான் தான் "இந்தியா தாக்கினால், நாங்களும் பதிலடி கொடுப்போம் எனச் சொல்லி இருக்கிறார்".