மும்பை: கூகுள் ப்ளே ஸ்டோர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட எனிடெஸ்க் ஆப்ஸ்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இந்த எச்சரிக்கை என்றும் இல்லை எனில் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் களவாடப்பட வாய்ப்புள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
இயந்திர மயமாகிவிட்ட தற்போதைய சூழலில் நாம் எதெற்கெடுத்தாலும் மொபைல் ஃபோனையே நம்பி இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.
எல்லாமே இதில் தான்
கல்யாணம் முதல் காது குத்து வரை, சுடுகாட்டில் குழி தோண்டுவதற்கு கூட ஆப்ஸ்கள் வந்துவிட்டது, குளிப்பது, டாய்லெட் போவதுற்கும் கூட ஆப்ஸ்கள் வந்துவிட்டதுதான் வேதனையான வேடிக்கையாகும். ஆனால் இந்த ஆப்ஸ்கள் எல்லாம் நமக்கு நாமே வைத்துள்கொள்ளும் ஆப்பு என்பது நம்மில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை.
பில்கள் வரை
முன்பெல்லாம் நாம் டெலிஃபோன் பில், கரண்ட் பில் கட்டுவதற்கும், மளிகை சாமான்கள் வாங்குவது, சினிமா டிக்கெட் போன்றவற்றுக்கு காலார நடந்து சென்று நேரடியாகவே பணத்தை செலுத்திவிடுவோம். ஆனால் இப்போது கையில் ஸ்மார்ட் ஃபோன் என்ற கூர்மையான ஆயுதம் வந்துவிட்டதால், நடப்பதற்கு சோம்பல் பட்டுக்கொண்டு, எல்லாவற்றையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செலுத்தி வருகிறோம். இதற்கான ஆப்ஸ்களும் அதிக அளவில் வந்துவிட்டன.
சோம்பல்
பொதுமக்களின் சோம்பேறித்தனத்தையே தங்கள் மூலதனமாக்கிக்கொண்டு செயல்படும் பல்வேறு டுபாக்கூர் கம்பெனிகளும் போலியான ஆப்ஸ்களை உருவாக்கி கூகுள் ப்ளே ஸ்டோரில் உலவ விடுகின்றன. இன்னும் சில வகை ஆப்ஸ்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை கவர்ந்து கபளீகரம் செய்வதற்காகவே, தீபாவளி, பொங்கல், விடுமுறை தின ஆஃபர் என இல்லாத இலவசங்களை எல்லாம் சொல்லி தூண்டில் போட்டு நாம் எப்போது ஏமாறுவோம் என்று வாயை பிளந்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றன.
கணக்கு விவரங்கள்
நாமும் இந்த வகையான ஆப்ஸ்களைப் பற்றிய நம்பகத் தன்மையை அறியாமல் இவற்றில் நம்முடைய வங்கிக் கணக்கு பற்றிய அனைத்து விவரங்களை எல்லாம் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து நம்முடைய பணத்தை இழந்துவிடுகிறோம்.
ஸ்மார்ட் போன்கள்
நாம் தற்போது பணம் செலுத்துவதற்காக ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கும் ஆப்ஸ்களில் சில மட்டுமே. உண்மையான ஆப்களாகும். மற்ற ஆப்ஸ்கள் எல்லாம் நம்பகத் தன்மை குறைவே. இந்த வகை ஆப்ஸ்கள் எல்லாம் நம்முடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கபளீகரம் செய்ய காத்துக்கொண்டு இருப்பவைகாளவே உள்ளன.
அந்த ஒரு நொடி
நாம் கொஞ்சம் அசந்தாலும் நம்முடைய கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் நொடிப் பொழுதில் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வாரிச் சுருட்டிக்கொண்டு செல்லக்கூடிய ஆப்கள் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் அதுதான் உண்மை.
ஆப்ஸ்கள்
இவ்வகையான ஆப்கள் பற்றி மத்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரித்துக் கொண்டுதான் உள்ளது. பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அந்த வகையில் தற்போது பணப் பரிமாற்றத்திற்காக ஸ்மார்ட் ஃபோனில் இடம் பிடித்துள்ள எனி டெஸ்க் (AnyDesk) என்ற ஆப்ஸ் பற்றியும் ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த ஆப்ஸ்
AnyDesk ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்யும்பொழுதும், இந்த ஆப்ஸை பயன்படுத்தும்போதும், வாடிக்கையாளர்களின் பணமும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களும் திருடுபோவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. நாமும், மற்ற ஆப்ஸ்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று ஓகே, டீகே என்று கொடுப்பது போல், இதற்கும் கொடுத்தால், பணம் முழுவதும் வாடிக்கையாளரின் அனுமதியுடன் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தான் குறி
ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து, "AnyDesk" ஆப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஒரே ஒருமுறை இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்துவிட்டால், மற்ற ஆப்ஸ்களில் உள்ளதுபோல் இறுதியாக கேட்கப்படும் அனுமதியும் இந்த ஆப்ஸில் கேட்கப்படும். எல்லாவற்றுக்கும் தலையாட்டிய பழக்கப்பட்ட நாமும் அனுமதி அளித்துவிடுவோம்.
சைபர் கிரிமினல்கள்
"AnyDesk" ஆப் டவுன்லோட் செய்யப்பட்டவுடன் 9 இலக்கு எண் கிடைக்கும். அதனை, அந்த சைபர் கிரிமினல்கள், வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், அதற்கு பின்னர் உங்கள் ஸ்மார்ட் ஃபோன் மட்டுமே உங்கள் வசம் இருக்கும். (ஃபோன் உங்களோடதுதான், ஆனால் உள்ளே இருக்கும் டேட்டா அவுங்களோடது ஆகிடும்) உங்கள் மொபைலின் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் எச்சரிக்கை செய்தியில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.