பொதுவாக வீட்டுக் கடன் என்றால் இப்போதைக்கு 8.5 - 9 சதவிகித வாக்கில் தான் வட்டி இருக்கிறது. தனி நபர் கடன் என்றால் 13 சதவிகிதத்தில் இருந்து தொடங்குகிறது.
ஆனால் ஒரு நிறுவனம் வீட்டுக் கடனை வெறும் 5% வட்டிக்கும், தனி நபர் கடனை வெறும் 8% வட்டிக்கும் தருகிறார்களாம். அதுவும் வெறும் 3,000 ரூபாய் ப்ராசசிங் கட்டணத்தில்.
மேலே சொன்ன இரண்டு பத்திகளை பல பேரிடம் போனில் சொல்லி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல்
கம்பெனிகள்
Ultra Trendz Enterprises, Krish Consultancy, Feathertec Associates, Tech Process, KCS Consultancy, Bhaarath Business Centre, Jaisairam Exim Private Limited, Vallabha Distribution Services, Prabhu and Co, Hariharan Management and Fortune Enterprises என்கிற பெயர்களில் ஏகப்பட்ட கால் சென் டர் கம்பெனிகளை சென்னையில் சூளைமேடு, தேனாம்பேட்டை, வடபழநி, ஆவடி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்களில் சிறு சிறு அறைகளிலேயே நடத்தி இருக்கிறார்கள்.
நடத்தியவர்கள்
மேலே சொன்ன நிறுவனங்களை சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் தான் பொறுப்பேற்று நடத்தி வந்தாராம். அவருக்கு எல்லாமுமாக இருந்தது சென்னை வியாசர் பாடியச் சேர்ந்த ஜான்சன். அவரைத் தொடர்ந்து கொண்டித் தோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ், பரமத்தி வேலூரைச் சேர்ந்த பூபதி, சோலிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், பத்தலம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ், திருவண்ணாமலையைச் சேர்ந்த திராவிட அரசன், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் ஆகியோர்களும் இணைந்தே மேலே சொன்ன நிறுவனங்களை நடத்தி இருக்கிறார்கள்.
செய்முறை
சாதாரண கால் செண்டர்களைப் போல கிடைக்கும் எண்களுக்கு எல்லாம் கால் செய்து பேசி கடன் வேண்டுமா எனக் கேட்பார்கள். அதெல்லாம் வேண்டாமுங்க எனச் சொன்னால் வட்டி விவரத்தைச் சொல்லிக் கடன் வேண்டுமா எனத் திரும்ப கேட்பார்கள்.
வட்டி
இரண்டாவது முறை வீட்டுக் கடனுக்கு வெறும் 5 சதவிகிதம் தான் சார் வட்டி, தனி நபர் கடனில் கொஞ்சம் ரிஸ்க் இருப்பதால் 8 சதவிகிதம் வட்டி எனச் சொன்னால் போதும் கடனே வாங்க வேண்டாம் என் தவம் இருந்தவர்கள் கூட வழியே வந்து ஒரு புது வீட்டை கடனில் வாக்கலாம் எனத் தோன்றும்.
பெண்கள் தான்
வழக்கம் போல வாடிக்கையாளர்களைக் கவர இவர்களும் பெண்களைத் தான் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக வேலைக்கு வைத்திருக்கிறார்கள். வரும் பெண்களுக்கு சில வாரங்கள் பயிற்சி அளிக்கிறார்கள். அந்த பயிற்சி காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது எப்படிப் பேசி காசைக் கறக்க வேண்டும் என தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
காசு
எப்போதுமே ஒரிஜினல் வங்கிகளில் வங்கிக் கடன் நம் கணக்குக்கு வந்த பின் தான் ப்ராசசிங் கட்டணங்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு 50,000 ரூபாய் தொடங்கி 25 லட்சம் ரூபாய் வரை அனைத்து வகையான கடன்களுக்கும் சுமார் ப்ராசசிங் கட்டணமாக 3,000 ரூபாயை முன் கூட்டியே செலுத்தி விட வேண்டும்.
ஏமாற்றுதல்
இவர்களின் அலைபேசிகள் எல்லாமே கணிணிகளோடு இணைத்து வைத்திருந்தார்கள். அதனால் 3000 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு, கடனுக்காக காத்திருப்பவர் எத்தனை முயற்சி செய்தாலும் அவரை டிரேஸ் செய்ய முடியவில்லை. அதோடு ஏகப்பட்ட வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டைகளின் எண்களையும் எப்படியோ கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதனால் 3,000 ரூபாயோடு சேர்த்து, கூடுதலாக ஏடிஎம் அட்டைகளில் இருந்து ஏகப்பட்ட பணம் பறி போய் இருக்கிறதாம்.
சந்தேகம்
ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து மாதக் கணக்கு ஆன பின்னும் எந்த அழைப்பும் வரவில்லை, அவர்கள் அழைத்தாலும் கடன் தருவதாகச் சொன்ன கம்பெனிகளுக்கு அழைப்புகள் போகவும் இல்லை. எனவே சென்னைக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் சென்னை காவல் துறை ஒரு தனிப்படை அமைத்து விசாரித்திருக்கிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீஸ் டீம், 7 பேரை கைது செய்தது.
ஜான்சன் வாக்குமூலம்
தனக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம், ஆனால், தன்னுடைய பாஸ் ஊக்கத் தொகையாக கணக்கு வழக்கே இல்லாமல் பணத்தை அள்ளித் தருவாராம். அதைக் கொண்டு ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை செய்பவரை விட சொகுசாக ராஜ வாழ்க்கை வாழ்ந்தாராம்.
என்ன பதவி
கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் சென்னையில் 7 இடங்களில் கால்சென்டர்களை நடத்தியதாக கூறினர். அதன்மூலம்தான் அப்பாவி பொதுமக்களை தங்களின் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும் தெரிவித்தனர். மோசடிக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவரை போலீஸார் தேடி வருகிறார்களாம். அவர் கிடைக்காத போதிலும் அவரின் வலதுகரமாக செயல்பட்ட சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜான்சன் (25) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது பல்வேறு திருட்டு சம்பந்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றனவாம்.
நிர்வாக அலுவலகம்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கால் சென்டர்களின் நிர்வாக அலுவலகம் வடபழனியில் செயல்பட்டுள்ளது. அதில் இன்ஜினீயரிங் படித்த சென்னை கொண்டிந்தோப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இவரும் கால்சென்டரை நடத்துபவருக்கு வலதுகரமாக இருந்துள்ளார். இவரின் வங்கி கணக்கில் தான் மோசடி செய்து சம்பாதித்த பணம் முழு தொகை செலுத்தப்பட்டுள்ளதாம்.
பயிற்சி
வெங்கடேஷைத் தொடர்ந்து இந்த ஏமாற்று கால் சென் டர் நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (ஹெச்.ஆர்) நாமக்கலைச் சேர்ந்த பூபதி இருந்துள்ளார். இவர் தான் நல்ல கணிவான குரலில் பேசக் கூடிய பெண்களை வேலைக்கு எடுத்து பயிற்சி அளித்தவராம்.
மற்றவர்கள்
வெங்கடேசனுக்கும், பூபதிக்குப் பிறகு போரூரைச் சேர்ந்த விக்னேஷ், சோளிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சார்லஸ் மற்றும் திராவிட அரசன் ஆகியோரும் பல்வேறு பொருப்புகளில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஏழு பேரையும் சென்னை காவல் துறை கைது செய்திருக்கிறதாம்.
தலைமறைவு
கால்சென்டரின் உரிமையாளர் இன்னும் தலைமறைவாக இருக்கிறாராம். சிக்கிய இந்த ஏழு பேரிடம் விசாரித்த போது சென்னையில் சேத்துப்பட்டு, ஆதம்பாக்கம், தரமணி ஆகிய 3 இடங்களிலும் கால் சென்டரை நடத்தி வந்ததாகக் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிற்றார்கள். தமிழகம் முழுவதும் கால்சென்டர்களை நிறுவி, கொள்ளையடிப்பது தான் இவர்கள் திட்டமாம்.
ஜான்சன் வங்கிக் கணக்கு
ஜான்சனின் வங்கிக் கணக்குகளை சென்னை காவல் துறை ஆராய்ந்து வருகிறதாம். அதில் அவர் மாத சம்பளம் 12,000 ரூபாய் என்றால் அதைப் போல 15 முதல் 20 மடங்கு கூடுதலாக பணம் புழங்கி இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் ஜான்சன் வங்கிக் கணக்கு மட்டும் இன்றி ஜான்சன் கணக்கில் இருந்து யார் யார் வங்கிக் கணக்குக்கு எல்லாம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ அந்த கணக்குகளை எல்லாம் விசாரித்து வருகிறார்களாம்.