கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில் ஒன்றான புல்வாமா பகுதியில் 44 மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலால் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் மத்திய அரசை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கிளம்பி இருக்கிறது இந்திய அரசு.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி, இப்போதைக்கு பழிக்குப் பழி என்கிற ரீதியில் மட்டும் இல்லாமல், இனி இந்தியாவோடு பாகிஸ்தான் எந்த காலத்துக்கும் வாலாட்டக் கூடாது அப்படி ஒரு அடியைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது மத்திய அரசு.
என்ன வாய்ப்புகள்
எனவே இந்தியா அரசு ரீதியிலும், ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாகவும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கலாம், எடுக்க முடியும், எது எல்லாம் இந்தியாவுக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது, எந்த எந்த நாடுகள் எல்லாம் பாக்கை ஆதரிக்கிறது என பல கோணங்களில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் துருவ் ஜெய்ஷங்கர் விளக்குகிறார். அதற்கு முன் இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான உறவு முறை எப்படி இருக்கிறது
உறவு முறை எப்படி..?
இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அரசியல் ரீதியாக, ஹாய் பாய் என்கிஅ ரீதியிலேயெ உள்ளன. குறிப்பாக கடந்த 2015-க்குப் பிறகான வருடங்களில் சுமூகநிலை என்கிற பேச்சுக்கே இடம் இல்லாத நிலையில் உரசல்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறது இந்தோ பாக் அரசியல் உறவுகள். சரி இனி அரசியல் ரீதியிலான விஷயங்களைப் பார்ப்போம்
பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டியவைகள்
1. 2014 மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பாண்மையோடு பாராளுமன்றத்தில் ஏறிய நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து இந்தோ பாக் உறவை ஒட்ட வைக்க முயன்றார்.
2. இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான பேச்சுவார்த்தைகளை பல்வேறு தடங்கள்களுக்குப் பிறகு, மீண்டும் புதுப்பிக்க வைத்தார்கள். பேச்சு வார்த்தைகளும் நடக்கத் தொடங்கியது.
3. எப்போது பிரதமர், அதிபர் போன்ற நாட்டின் பெரும் தலைவர்கள் வேறு ஒரு நாட்டுக்கு போகும் போது முன்னேற்பாடுகள் பலமாக இருக்கும். அதே அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளௌம் பலமாக இருக்கும். ஆனால் பிரதமர் மோடி லாகூருக்கு திட்டமிடாத பயணத்தை மேற்கொண்டார்.
4. இதை எல்லாம் விட அதிகம் விமர்சனம் செய்யப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு (இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து) விசாரணைக்கு ஒப்புதல் அளித்தார். இப்படி இந்தியா தன்னால் ஆன எல்லா நட்புக் கரங்களையும் நேசத்தோடு நீட்டியது.
பாக் - பதிலடி
இந்தியா நீட்டிய நட்புக் கரத்தை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்றே தெரியவில்லை..? அதற்குள்
1. பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி இரு தரப்புக்குமான உறவில் விரிசல் போட்டது.
2. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க வேண்டும் என உரிமையாக இந்திய அரசிடம் கோரியது.
3. இந்திய உளவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து அசால்டாக மரண தண்டனை வழங்கி கால் மேல் கால் போட்டு அமர்ந்தது. கூடுமான வரை இந்தியா பொறுமை காத்தது.
கடுப்பான இந்தியா..!
மோடியும் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ம் லாகூரில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய அடுத்த 24 மணி நேரத்துக்குள், இந்தியாவின் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைதளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இந்தியா தரப்பில் ஆறு சிப்பாய்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
ஜெய்ஷ் இ முகமதுவே பொறுப்பு
பதான் கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயின் செல்ல பிள்ளையான ஜெய்ஷ்-இ-முகமது மீது இந்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இந்த தாக்குதலுக்குப் பின் தான் இந்தியா பாகிஸ்தானின் பல விஷயங்களில் கடினம் காட்டத் தொடங்கியது. பாகிஸ்தான் என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கியது.
வழக்கம் போல
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பின் ஐ.நா பொதுச் சபையில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானது. இந்த முறை இந்தியாவினுடையது. இருப்பினும் வழக்கமான அரசியல் போக்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும் இந்தியா அதிரடி காட்டவில்லை. பொருமையாகவே நடந்து கொண்டது.
புல்வாமா திருப்பம்
பிப்ரவரி 14, 2019-ல் புல்வாமாவில் நடந்த துயர சம்பவத்துக்குப் பின் தான் இந்தியா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என வெளிப்படையாக புகார் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. புல்வாமாவுக்குப் பிறகு தான் பாகிஸ்தானுக்கு எதிரான அரசு நடவடிக்கைகளை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.
கண்டனம் (அரசு நடவடிக்கைகள்)
இந்தியா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான கண்டனத்தையும் சர்வதேச அளவில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்தியாவின் கோபத்துக்கு செவி சாய்க்கும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தில்லாக தன் கண்டனத்தை உலகம் கேட்கும் விதத்தில் சொல்லி இருக்கிறது.
ஒருங்கிணைப்பு
இந்தியா தனது கூட்டணி நாடுகளின் முக்கிய பாதுகாப்பு சவால்களையும், இந்தோ பாக் பிரச்னையோடு சேர்த்துவிட்டது. எடுத்துக்காட்டாக ஜப்பான் இப்போது ஜப்பான் இந்தியாவை சர்வதேச அளவில் துக்கிப் பிடித்தே ஆக வேண்டும். காரணம் வட கொரியா. வட கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் கடந்த 10 ஆண்டுகளில் நல்ல உறவு முறை இல்லை. 1998-ல் Taepodong-1 என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதத்தை ஜப்பான் வான் வெளியில் அவர்கள் அனுமதி இன்றி பசிபிப் பெருங்கடலில் சோதனை செய்தது. இதனால் வட கொரியா ஒரு அணு ஆயுதமில்லாத நாடாக இருக்க வேண்டும் என்பதை ஜப்பான் வலியுறுத்துகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டே இருக்கிறதே ஒழிய முடிந்த பாடில்லை.
பாக் - வட கொரியா
வடகொரிய பிரச்னைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா..? ஆந்த ரத்த பாசம் தான். அமெரிக்க எதிர்ப்புணர்வு தொடங்கி, வட கொரியா பாகிஸ்தானோடு சேர்ந்து ஈரான் - ஈராக் போரில் ஈரானை ஆதரித்தது, ஆயுத ரீதியாக உதவியது என பட்டியல் நீள்கிறது. அந்த அளவுக்கு பாகிஸ்தானும் வட கொரியாவும் ஜிகினி தோஸ்துகள். அதனால் தான் இங்கு இந்தோ பாக் பிரச்னை பாக் வலுவடைந்தால் அங்கு வட கொரியாவும் வலுவடையும். அங்கு வட கொரியா வலு பெறக் கூடாது என்றால், இங்கு வட கொரியாவின் நட்பு நாடான பாகிஸ்தானும் வலுபெறக் கூடாது. அந்த லாஜிக் படி தான் இந்தியா, பாகிஸ்தான் எதிர்ப்பில் ஜப்பானை கோர்த்துவிட்டது.
உதவிகள்
இப்படி சர்வதேச நாடுகளில் எல்லாம் நல்ல பெயர் எடுக்கும் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் உளவுத் துறை தகவல்கள், ஆயுதங்கள் போன்ற உதவிகள் கிடைக்கும். அதோடு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் குறித்த சர்வதேச விவரங்கள், பல்வேறு நாடுகளில் உள்ள தீவிரவாத அமைபுகளின் நிதி ஆதாரங்களை கண்டுபிடிப்பது என இந்த சர்வதேச ஒத்துழைப்புகளால் பயன்கள் ஏராளம்.
அரசு ரீதி சிக்கல்கள்
பாகிஸ்தான் என்ன செய்தாலும், இந்தியாவையும் இரண்டாகப் பிளந்தாலும், பிற நாடுகள் பாகிஸ்தானுடன் உறவை வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது தான் இந்திய அரசின் முன் மிகப் பெரிய சவாலாக வந்து நிற்கிறது.
உதாரணம்
அமெரிக்கா தற்போது பாகிஸ்தான் மீது அதிருப்தியிலேயே உள்ளது. ஆனால், சீனா இன்னமும் பாகிஸ்தானின் கூட்டாளியாகவே உள்ளது. இதுவரை பல்வேறு உலக நாடுகள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், சீனா மட்டும் தன் வேலையை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. அதோடு பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம், நவீன போர் ஏவுகணைத் தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள் என ஆயுதங்கள் வழியாக மட்டுமே சீனா அள்ளி இறைக்கிறது. மேலும், சீனா- பாகிஸ்தான் கூட்டு பொருளாதார நடவடிக்கைகள் படி, பல அடிப்படைக் கட்டுமானம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. தெளிவாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை கொம்பு சீவி விடுகிறது சீனா.
மற்ற நாடுகள்
எண்ணெய் வளமிக்க சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டு போன்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுடன் கடந்த ஐந்து வருடங்களாக இணக்கமான ஒரு நல்ல உறவையே கடைபிடித்து வருகின்றன. இருந்த போதிலும், பாகிஸ்தானுடனான பொருளதார மற்றும் பாதுகாப்பு கூட்டணிகளை இதுவரை முறித்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் இந்தியா வோடும் தன் உறவுகளை முறித்துக் கொள்ளவில்லை.
மேற்கத்திய நாடுகள்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் பாகிஸ்தானுக்கு வர்த்தக சலுகைகளை வழங்குகின்றன. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை விட குறைவான வரிகளையே விதிக்கின்றன. இதனால் ஒரே மாதிரியான, ஒரே தரத்திலான பொருட்கள் இந்தியாவிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. பொருளாதார ரீதியில் பாகிஸ்தானை முடக்க இவர்கள் தயாராக இல்லை.
இங்கிலாந்து
பிரிட்டன் இப்போதும், பாகிஸ்தானுடன் இணக்கமாக நல்லுறவைப் பேணி வருவதாக சில ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பிரெக்ஸிட்டுக்கு பிறகு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தரப்படும் என்றும் உறுதி அளிக்கிறது இங்கிலாந்து. ஆக
பொருளாதார ரீதியாக 1
பாகிஸ்தான் தனது வர்த்தக கூட்டணி நாடு என்ற அந்தஸ்த்தை நீக்கியது இந்தியா. இதை ஆங்கிலத்தில் Most Favoured Nation MFN Status என்போம். மேலும், பாகிஸ்தானில் இருந்து வரும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரை சுங்க வரியையும் விதித்திருக்கிறது. இதனால் இனி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் போது 200% கூடுதல் விலை வைத்தே விற்க வேண்டி இருக்கும். இது பாகிஸ்தானின் 14,000 கோடி இந்திய ஏற்றுமதிக்கு போட்ட செக். இது எல்லாமே பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணாத்தோடே செய்யும் காரியங்கள் தான்.
கிரிக்கெட்
கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை இந்தியா தடுத்து வருகிறது. இந்த போட்டியை லைவ் டெலிகாஸ்ட் செய்தால் பாகிஸ்தான் கிரிக்கேட் போர்டுக்கு அத்தனை லாபம் வரும். அதுவும் இந்தியா பாகிஸ்தான் என்றால் சொல்ல வேண்டுமா என்ன..? இது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டிற்கு தொடர்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கருணை காட்டி விளையாடலாமா..? என விசாரித்து வந்த நேரத்தில் புல்வாமாவால் மீண்டும் பாகிஸ்தான் உடனான டெஸ்ட் கிரிக்கேட் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
சிந்து நதிநீர் பங்கீடு
இதோடு 1960ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி பங்கீடு ஓப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் இந்தியா மிரட்டி இருக்கிறது. இம்மாதிரியான நடவடிக்கை இந்தியா நீரை கொள்ளும் நாடுகளான சீனா, நேபால் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவும் பாதிக்கப்படும்.
கறுப்புப் பட்டியல்
Financial Action Task Force என்பார்கள். இதில் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் பட்டியலிடப்பட வேண்டும் என முறையிட்டிருக்கிறது இந்தியா. காரனம் தீவிரவாதிகளின் நிதி மற்றும் ரொக்கங்கள் எல்லாம் பாகிஸ்தான் வழியாகத் தான் பரிமாற்றப்படுகிறது என புகார் சொல்லி இருக்கிறது. வரும் செப்டம்பர் 2019 வரை காலக் கெடுவும் கொடுத்திருக்கிறது. அப்படி கறுப்புப் பட்டியலில் இடம் பிடித்துவிட்டால் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து பணப் பரி வர்த்தகத்தையும் கண்காணிப்புக்கு உள்ளாக்க முடியும். அது அந்நாட்டின் பண புழக்கம், க்ரேடிட் ரேட்டிங், பங்குச் சந்தை, வங்கித் துறை ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக சர்வதேச அளவில் கடன் வாங்குவது சிரமமாகிப் போகும்.
ராணுவ ரீதியாக - 1
இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பது பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதம் மற்றும் ஆற்றல் மிக்க ராணுவம் தான். இந்திய ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், போர் தான் பழிவாங்கல் என்று கூறும் நிலையில், இதைதான் இந்திய தலைமையில் உள்ளவர்களும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கிறது.
பதிலடி
1999ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் உள்ள நடைமுறை எல்லையில் பாகிஸ்தான் நுழைந்ததால் கார்கில் போர் மூண்டது. அவ்வப்போது பாகிஸ்தானுக்கு இந்திய எல்லையில் பதிலடிகளை கொடுத்துள்ளது. உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. பிற ராணுவ வாய்ப்புகள் எல்லாம் நீண்டகாலம் எடுக்கக்கூடியவை. பாகிஸ்தான் எல்லைக்குள் வருவதை தடுக்க புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உளவுத்துறை கூட்டணிகளை பிற நாடுகளிடமிருந்து பெற்றுள்ளது இந்தியா.
நவீன கருவிகள்
ஆளில்லா விமானங்கள், தொழில்நுட்ப நுண்ணறிவு மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்தால் பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவுவதை தடுக்கலாம். இவை எல்லாம் இந்தியா பதிலடி கொடுக்கும் ஒரு சில வழிகளே. சமீபத்திய வரலாற்றை எடுத்து பார்க்கும் போது முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் கூட எதாவது நடக்கலாம். நம்மைப் பொறுத்தவரை போர் வேண்டாம். அது ஒட்டு மொத்த உலகத்தையும் பாதிக்கும்.