புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக் கூட இன்னும் சில இடங்களில் தகனம் செய்யவில்லை.
அதற்குள் சீனா இந்தியாவின் முதுகில் குத்தி விட்டது. சர்வதேச அளவில் அமெரிக்க முதல் அனைத்து ஜி8 நாடுகளும் புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே என கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சீனா இதுவரை புல்வாமாவில் நடந்ததைப் பற்றிப் பேசவே இல்லை. ஆனால் சர்வதேச அளவில் இந்தியா எடுக்கும் எல்லா முடிவுகளையும் குறுக்கில் நின்று தடுத்துக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் சீனா தொடக்கம்
பாகிஸ்தான் நாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகவோ ஏகப்பட்ட உதவிகளைச் செய்து வாழ வைக்கும் நாடு சீனா. 1950-களில் Republic of China (on Taiwan) வோடு உறவைத் துண்டித்து People's Republic of China (PRC) உடன் கை கோர்த்ததில் இருந்து பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமான உறவு இருக்கிறது. அத்தனை பால்ய நண்பர்கள் இந்த இருவரும்.
என்ன ஆனாலும் சரி
1989-ல் 15 ஏப்ரல் முதல் 4 ஜூன் வரை நடந்த Tiananmen Square protests பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சீனாவில் ஊழல் படிந்த கம்யூனிஸ ஆட்சி ஒழிய வேண்டும், ஜனநாயாகம் மலர வேண்டும், பேச்சு சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 10 லட்சம் பேர் தெருவுக்கு வந்து போராடினார்கள். 45 நாட்கள் நடந்த இந்த அறப் போராட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவ வீரர்களால் ஈவு இறக்கமே இல்லாமல் கொல்லப்பட்டனர். உலகமே அதிர்ந்து போய் அனைவரும் கண்டித்தார்கள். ஆனால் அப்போது கூட பாகிஸ்தான் சீனாவுக்கு சப்போர்ட் செய்தது. சீனாவை ஆதரித்த 2-வது அரசு க்யூபா. ஆம் ஃபெடல் காஸ்ட்ரோவில் க்யூப அரசு இந்த கொடூரத்தை ஆதரித்தது.
காஷ்மீர் விவகாரம்
சீனா ஏற்கனவே காஷ்மீரின் அக்ஷய் சின் பகுதியை கையகப்படுத்திக் கொண்டு தர மறுக்கிறது. இதில் முழு காஷ்மீரும் பாகிஸ்தானுக்கே சொந்தம் எனவும் பேசி வருகிறது. சீனாவில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களின் தரமான சந்தையே பாகிஸ்தான் தான் என Stockholm International Peace Research Institute ஒரு அறிக்கை படிக்கிறது. ஒரு ஆண்டில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களில் 47% பாகிஸ்தானில் தான் விற்கிறார்களாம்.
பாக் பொருளாதாரம்
பாகிஸ்தான் எட்டிப் பார்த்தாலே இந்தியாவில் இருந்து தேவையான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்து கொள்ளலாம். ஆனால் பாகிஸ்தான் சீனாவில் இருந்து தான் பல பொருட்களை இறக்குமதி செய்து கொள்கிறது. 2017-ம் ஆண்டில் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர். ஆனால் அதே 2017-ல் இந்தியாவில் இருந்து சுமார் 2 பில்லியன் டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி ஆகி இருக்கிறது. அவ்வளவு ஏன் பாகிஸ்தானின் சிவில் அணுசக்தி துறையை மேம்படுத்த சீனாவைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறது பாகிஸ்தான்.
பலே உறவு
இப்படி பாகிஸ்தானை "புஜ்ஜிமா, கண்ணு குட்டி" எனக் கொஞ்சிக் கொண்டிருக்கும் சீனா எப்படி பாகிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடும் என பிப்ரவரி 15-ம் தேதியே சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியது. அவர்கள் கேட்டது சரி தான். மேலே சொன்ன படி ராணுவம், பொருளாதாரம் தொழில் துறை, டெக்னாலஜி என அனைத்து பிரிவுகளிலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை கொம்பு சீவி விடும் சீனா எப்படி பாக்கை எதிர்த்துப் பேசுவார்கள். தவிர புல்வாமா, சீனாவின் எதிரி நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் தான் இருக்கிறது. இப்படி இவர்கள் உறவு கொண்டாடிக் கொண்டிருப்பதால் தான் இந்தியாவால் சர்வதேச அளவில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. சரி சீன பிரச்னைகு வருவோம்.
UN Security Council (UNSC)
புல்வாமா தாக்குதல் நடந்த அன்றைய தினமே இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஐநா பாதுகப்பு கவுன்சிலிடம் பேசி விட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் காஷ்மீரில் நடக்கும் இந்திய தரப்பு உயிரிழப்பை கண்டிக்க முன் வந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் முறை. அதிலும் குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கண்டன அறிக்கையில் "Jaish E Muhammad தீவிரவாத அமைப்பின் பெயரும், தீவிரவாதிகளை இந்திய நீதிமன்றங்களின் முன் கொண்டு வர வேண்டும்" என்கிற வார்த்தைகளையும் சேர்த்து அறிக்கை விடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா.
ஓகே சொன்ன ஐநா
பாதுகாப்பு கவுன்சிலும் இந்தியாவின் கோரிக்கைகளை முழுமையாக ஒப்புக் கொண்டது. இந்தியா கேட்பது போல பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை விட்டால் உலக நாடுகளிடம் இருந்து, இந்தியாவுக்கு தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான உதவிகள் நிறையக் கிடைக்கும். ஆயுதங்கள் தொடங்கி உளவுத் துறை அறிக்கைகள் வரை பல வசதிகளை இந்தியா செலவே செய்யாமல் அசால்டாக பெற முடியும்.
உதவிய அமெரிக்கா
அமெரிக்காவுக்கு என்ன தலை வலியோ இந்தியா புல்வாமா தாக்குதலுக்கான கண்டன அறிக்கை கோரிக்கையை சிரமேற் கொண்டு எல்லாவற்றையும் தயார் செய்தது. பிப்ரவரி 15-ம் தேதியே இந்த கண்டன அறிக்கையை வெளியிடக் காத்திருந்ததும் அமெரிக்காவின் வேகத்தால் தான்.
சர்வதேச கவனம்
அதோடு சர்வதேச அரசியலில் புல்வாமா தாக்குதல் பேசப்பட்டு இந்தியா மீது ஒரு நல்ல (பரிதாப) பிம்பமும், பாகிஸ்தான் மீதான தீவிரவாத பிம்பமும் அழுத்தமடையும். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலிடம் புல்வாமா தாக்குதலை கண்டிக்கச் சொன்னது. பாதுகாப்பு கவுன்சிலும் ஏற்றுக் கொண்டது.
வாய்தா வாங்கும் சீனா
பொதுவாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒரு அறிக்கையோ, கண்டனமோ தெரிவிக்கிறது என்றால் அதில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்களும் சேர்ந்து கையொப்பமிட்டே வெளியிடுவார்கள். பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு சூட்டோடு சூடாக பிப்ரவரி 15-ம் தேதியே ஐநா பாதுகாப்பு கவுன்சில் தன் கண்டனத்தை வெளிப்படுத்தத் தயாரானது. 14 நாடுகளும் தயார் என்றது. ஒரு நாடு மட்டும் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டது. அது தான் சீனா..!
பாக் முயற்சி
இதற்கு மத்தியில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரையே நேரடியாக சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையும் தயார் செய்ய வேண்டாம் என பேச்சு வார்த்தை நடத்தியது. நடத்தியவர் பாகிஸ்தானின் முக்கிய வெளியுறவு அதிகாரி மலிஹா லோதி (Maleeha Lodhi). ஆனால் பயன் இல்லை. இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின் தான் பாகிஸ்தான் இந்த விஷயத்தை நீர்த்துப் போகச் செய்ய சீனாவை நாடி இருக்கிறது.
சீன கண்டன அறிக்கை
சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு புல்வாமா தாக்குதல் தொடர்பாக கொடுத்த கண்டன அறிக்கையில் ஒரு வார்த்தை கூட தீவிரவாதம் எனச் சொல்லப்படவில்லை என சில இந்திய அதிகாரிகள் முனகி வருகிறார்கள். இத்தனை பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்த பின், அதுவும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற ஒரு தீவிர வாத அமைப்பு பொறுப்பேற்ற பின்னும் கூட சீனா தன் கண்டன அறிக்கையில் "தீவிரவாதம்" என ஒரு சொல்லைச் சேர்க்காமல் எப்படி அறிக்கை வெளியிடுகிறது என சீனா மீது வெறுப்பாகி இருக்கிறார்கள், இந்திய அதிகாரிகள்.
என்ன செய்கிறது
இப்போது சூடாக இருக்கும் போதே புல்வாமாவுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்தால் தான் அது சர்வதேச அளவிலும் பெரிதாக பேசப்படும். சீனா இதை தெரிந்து கொண்டு இந்தியாவுக்கு புல்வாமா பிரச்னை மீதான வேகத்தை நீர்த்து போகச் செய்கிறது.
தனிமைப்படுத்துதல்
பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக முழுவதும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். ஆனால் சீனா பாகிஸ்தானை முழுமையாக ஆதரிப்பதால் ஒரு ஐநா அறிக்கையைக் கூட இந்தியாவால் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லையே என இந்திய அதிகாரிகள் கடுப்பில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதுகில் குத்துதல்
சீனாவுக்கும் இந்தியாவுக்கு நேரடிப் போர் மூண்டால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை, ஆனால் இப்படி தொடர்ந்து இந்தியாவின் முதுகில் குத்துவதை மட்டும் தவறாமல் செய்து கொண்டிருக்கிறது சீனா. நசுக்க வேண்டியது பாகிஸ்தானை மட்டும் அல்ல, சீனாவையும் தான் என்கிறார்கள் இந்தியாவின் நலம் கருதும் அதிகாரிகள்.