எப்போதுமே பட்ஜெட்டின் போது சொல்வது எல்லாம் தாக்கல் செய்வதாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அவைகள் எல்லாமே நிதிச் சட்டம் (Finance Bill) ஆக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்
குடியரசுத் தலைவரும் அவர் செயலர்கள் வழியாக கொண்டு வந்திருக்கும் சட்டங்கள் எல்லாம் நல்லதா... கெட்டதா என விசாரித்து முடிவு செய்வார்.
ஆனால் குடியரசுத் தலைவருக்கு பாராளுமன்றம் சொல்வதை மறுக்க உரிமை இல்லை. அதிகபட்சம் எனக்கு இது சரியாகப்படவில்லை என ஒரு முறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும்.
இரண்டாவது முறை
அப்படி திருப்பி அனுப்பப்படும் மசோதாக்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பினால் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டியது தான் குடியரசுத் தலைவரின் வேலையாக இருக்கும். ஆனால் ராம்நாத் கோவிந்த் அப்படி இரண்டாவது முறை எல்லாம் கொண்டு வரும் பிரச்னையை பாஜக அரசுக்கு கொடுக்கவில்லை.
பட்ஜெட் தாக்கல்
பிப்ரவரி 01, 2019 அன்று தான் பாரதிய ஜனதா கட்சி தன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தாக்கல் செய்த விஷயங்கள் மற்றும் அறிவிப்புகள் சட்டங்களாக உருவாக வேண்டும். அப்படி சட்டங்கள் வர வேண்டும் என்றால் குடியரசுத் தலைவர் கையெழுத்து வேண்டும்.
அந்த 5 லட்சம்
ஒரு நிதி ஆண்டில் ஒரு தனி நபர் 5,00,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆக 2019 - 20 நிதி ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 5,00,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம். ஆனால் வரி தாக்கல் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
50,000 எடுத்துக்குங்க
இந்தியாவில் சம்பாதிக்கும் ஒவ்வொருவருக்கும் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக சம்பாதிக்கும் மொத்த தொகையில் 40,000 ரூபாயை கழித்துக் கொண்டு வரி செலுத்தினால் போதும். இது பழைய சட்டம். இப்போது புதிய சட்டத் திருத்தத்தில் இந்த மருத்துவ மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக சம்பாதிக்கும் மொத்த வருமானத்தில் 50,000 ரூபாய் வரை கழித்துக் கொண்டு வரி செலுத்தினால் போதும் எனச் சொல்கிறார் ராம்நாத் கோவிந்த்.
5.5 லட்சம்
ஆக இதுவரை 5,00,000 + 50,000 ரூபாய் என மொத்தம் 5,50,000 ரூபாய் வரை எந்த ஒருமுதலீடுகளோ அல்லது செலவுகளோ செய்யாமலேயே நேரடியாக 5.5 லட்சம் ரூபாய் வரை கழித்துக் கொண்டு பாக்கி உள்ள தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். மக்களவைத் தேர்தல் நெருக்கத்தால் தான் இந்த அளவு வேகமாக நிதிச் சட்டம் மாறியதாக எதிர்கட்சியினர் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிழைத்த பில்டர்கள்
இதுவரை ஒரு பில்டர் ஒரு வீட்டை கட்டி முடித்து நிறைவுச் சான்றிதழ் வாங்கிவிட்டார் என்றால், அவர் கட்டி முடித்த வீட்டை அடுத்த ஒரு வருடத்துக்குள் விற்று விட வேண்டும். அப்படி விற்கவில்லை என்றால், இரண்டாவது ஆண்டில் இருந்து, கட்டி முடித்த வீட்டை வாடகைக்கு விட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆக வராத வருமானம் வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டு வரி செலுத்த வேண்டும்.
உதாரணமாக
சாய் பில்டர்ஸ் என்கிற நிறுவனம் அம்பத்தூரில் ஒரு அபார்ட்மெண்ட்டைக் 2016 மார்ச் 31-ல் கட்டி முடித்து நிறைவுச் சான்றிதழும் பெற்று விடுகிறது. அதில் மொத்தம் 12 வீடுகள். அந்த 12 வீடுகளில் 10 வீடுகள் மட்டுமே 2017 மார்ச் 31-க்குள் விற்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு வீடுகள் 2018 ஏப்ரலில் தான் விற்கப்படுகிறது. ஆக மீதமுள்ல இரண்டு வீடுகள் கடந்த ஒரு வருடமாக பில்டரே வைத்திருந்தார். எனவே ஒரு விட்டுக்கு சுமாராக 10,000 ரூபாய் வாடகை என இரண்டு வீட்டுக்கு 20,000 ரூபாய் ஒரு மாத வருமானம். ஆக மொத்தம் 12 மாதம் * 20,000 = 2,40,000 ரூபாய் வீட்டு வாடகை மூலம் வருமானம் வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த 2,40,000 ரூபாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
மாற்றம்
இந்த இடைக்கால பட்ஜெட்டில், ஓராண்டுக் காலம் என்பது இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆக இனி பில்டர்கள் கட்டி முடித்த வீட்டை 2 வருடங்கள் வரை கையில் வைத்து விற்கலாம். இதன்மூலம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு. காரணம் பில்டர்களுக்கு கையில் தேங்கும் வீடு மூலம் ஏற்படும் வரி நஷ்டத்தை மற்ற வீடுகள் மீது ஏற்றத் தானே செய்வார்கள். அதனால் தான் இந்த அறிவிப்பு வீடு வாங்குபவர்களுக்கும் பலன் தருவதாகவே இருக்கிறது. உண்மையாகவே பில்டர்களின் நலனைப் பேணும் இந்த முக்கிய சட்டத்துக்கும் இந்திய குடியரசுத் தலைவர் சம்மதம் சொல்லி இருக்கிறார்.
தனி நபர்களுக்கு - இரண்டு வீடு
வருமான வரி செலுத்தும் அல்லது தாக்கல் செய்யும் ஒருவருக்கு இரண்டு வீடுகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு வீட்டில் அவர் குடியிருக்கிறார். இரண்டாவது வீட்டில் அவர் குடும்பத்தினர் அல்லது பெற்றோர் குடியிருந்தாலும் அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதை ஆங்கிலத்தில் (Deemed to be Let Out) எனச் சொல்வோம். ஆக அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வருமான வரி தாக்கல் செய்யும் போது பிரச்னை இல்லை. அவர் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் தங்கி இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் என்ன வருமானம் வந்திருக்குமோ அந்த வருமானத்தை வருமான வரித் துறையிடம் கணக்கு காட்ட வேண்டும்.
வராத வருமானம்
இப்படி வராத வருமானத்துக்கு, வரி கட்டும் கொடுமை இனி இல்லை எனச் சொல்லி இருக்கிறார் பியுஷ் கோயல். ஆக இனி இரண்டு வீடு வைத்திருப்பவர் கொஞ்சம் நிம்மதியாக வாழலாம். இதன்மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வருமான வரி மிச்சமாகும். அதோடு, இனி ஒரு வீட்டை கட்டி விட்டால் நமக்கோ அல்லது வாடகைக்கோ விட்டுக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இரண்டாவது வீட்டைக் கூட வாங்கத் தயார் ஆவார்கள். ஆக ரியல் எஸ்டேட் வளரும். பின்ன ஒரு வீட்டை வாங்கிவிட்டு சும்மா இருப்பவருக்கு இப்போது இன்னொரு வீடு வாங்கினாலும் பிரச்னை இல்லை எனத் தெரிந்தால் சும்மா இருப்பார்களா..? இப்படி ரியல் எஸ்டேட்டை வளர்க்கும் இந்த சட்டத்துக்கும் ராம்நாத் கோவிந்த் நிதிச் சட்டத்தில் சம்மதம் கொடுத்திருக்கிறார்.
டி.டி.எஸ் உயர்வு
டிடிஎஸ் - Tax Deducted At Source. நமக்கு வந்து சேர வேண்டிய காசை கொடுக்கும் போதே அதற்கு வரி பிடித்தம் செய்தால் அதற்கு பெயர் தான் டிடிஎஸ். இதுவரை ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ ஒரு வீட்டை மாதம் 16000 ரூபாய் வாடகைக்கு விட்டு இருக்கிறார். அவருக்கு ஆண்டுக்கு 1.92 லட்சம் மொத்த வாடகையாக வரும். இப்போது வாடகை தருபவர் ஒவ்வொரு முறை வாடகை கொடுக்கும் போதும் 5 - 10 சதவிகிதத்தை பிடித்தம் செய்துவிட்டு கொடுக்க வேண்டும். இந்த பிடித்தம் செய்யும் தொகையை அரசாங்கத்திடம் செலுத்தி விட வேண்டும்.
தளர்வு
அதன் பின் வீட்டை வாடகைக்கு விட்டவர் நிதி ஆண்டு இறுதியில் வருமான வரி தாக்கல் செய்து 2.5 லட்சம் ரூபாய்க்குள் தான் மொத்த வருமானம் இருக்கிறது என நிரூபித்தால் தான் டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தருவார்கள். அப்படி இல்லை என்றால் வருமான வரித்துறையில் இருந்து நோட்டிஸ் வரும். மத்திய இடைக்கால பட்ஜெட்டில், இந்த வீட்டு வாடகைக்காக டிடிஎஸ் வரம்பை ரூ.1.80 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தி இருக்கிறார் பியுஷ் கோயல். இதனால், வீட்டு வாடகை மூலம் பயனடையும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் மூத்த குடிமக்கள் பயன டைவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த 60,000 ரூபாய் தளர்வுக்கு ராம்நாத் கோவிந்த் நிதிச் சட்டத்தில் சம்மதம் கொடுத்திருக்கிறார்.
வீடு விற்பனை
1970-ல் என் தந்தை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டை 50,000 ரூபாய்க்கு வாங்குகிறார். 2019-ல் நாங்கள் குடும்பத்தோடு வெளிநாட்டில் சென்று செட்டிலாக தீர்மானிக்கிறோம். ஆகையால் இந்த சொத்தை 1.5 கோடி ரூபாய்க்கு விற்க இருக்கிறோம். இப்போது நேரடியாக 1.5 கோடியில் 50,000 கழித்தால் 1,49,50,000 ரூபாய் வரும். இது மொத்த ஆதாயம் இல்லை.
மூல தன ஆதாயம் கணக்கீடு
1970-ல் வாங்கிய வீட்டில் விலை 50,000 ரூபாய். அதை இன்றைய பணவீக்கத்தோடு ஒப்பிட்ட வேண்டும். ஆக அப்படி ஓப்பிட்டால் சுமார் 1,36,000 வரை நாம் சொத்தை வாங்கியதற்கான காசாக எடுத்துக் கொள்ளலாம். ஆக 1,50,00,000 - 1,36,000 = 1,48,64,000 ரூபாய் தான் எங்கள் மூல தன ஆதாய வரி. இதற்கு 20% வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த விரும்பாதவர்கள் இந்த 1.48 கோடிக்கு ஏதாவது ஒரே ஒரு வீடோ அல்லது மூன்று ஆண்டு கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்ய வேண்டும்.
மாற்றம்
இப்போது வரும் மூலதன ஆதாய வரியில் ஒரே ஒரு வீடு என்கிற இடத்தில் இரண்டு வீடு வரை வாங்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இதை ஒருவரின் வாழ்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். எனவே இதுவும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்யச் சொல்வது போலவே இருக்கிறது. இதற்கு ராம்நாத் கோவிந்த் நிதிச் சட்டத்தில் சம்மதம் கொடுத்திருக்கிறார்.
இப்படி பியுஷ் கோயல் தேர்தலை முன் வைத்து சொன்ன எல்லா விஷயங்களும் இந்த நிதிச் சட்டத்தில் குடியரசுத் தலிவர் கையெழுத்தான பின் சட்டமாகிவிட்டது. எனவே இனி இன்னும் நிம்மதியாக பட்ஜெட்டில் சொன்னதைச் செய்து வாக்குகளை அள்ளி விடலாம் என பாஜக தரப்பு கொண்டாட்டத்தில் இருக்கிறது. அதைத் தான் சில பாஜக ஆதரவாளர்கள் "குடியரசுத் தலைவரேசொல்லிட்டாரு, இனி 5,50,000 வரை சல்லிக் காசு வரி கட்ட வேண்டாம்..! பப்பு போ அங்குட்டு போய் விளையாடு..?" என காங்கிரஸை கலாய்த்து வருகிறார்கள்.