டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் கச்சா எண்ணைய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு போன்றவற்றில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கச்சா எண்ணை தேவையை பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் உள்ளது சவுதி அரேபியா. மொத்த கச்சா எண்ணை பயன்பாட்டில் 50 சதவிகித்தை சவுதி அரேபியாவிடம் இருந்தே இறக்குமதி செய்துவருகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்தாலும், வர்த்தக உறவைப் பொருத்த வரையில் சவுதி அரேபியா இந்தியாவிற்கே முன்னுரிமை கொடுத்து வருவது கண்கூடாக தெரிகிறது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னுடைய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் சென்றார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமான நிலையத்தில் இருந்து சவுதி இளவரசருக்கு காரோட்டி சென்றார். சூட்டோடு சூட்டாக பாகிஸ்தான் ஏற்கனவெ வாங்கி இருந்த 3 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததோடு கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கினார்.
20 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்தியாவின் கச்சா எண்ணை தேவைக்கு சவுதி அரேபியாவை நம்பி இருந்தாலும், புல்வாமா தாக்குதலில் 41 ராணுவ வீரர்களை பலி கொடுத்த சோகத்தில் இருந்த இந்தியாவுக்கு, சவுதி இளவரசரின் இந்த செயல் மிகுந்த மனவேதனையை அளிப்பதாக இருந்தது. இருந்தாலும் இந்திய எந்தவிதமான எதிர் வினையையும் ஆற்றவில்லை. அனைத்தையும் மௌனமாகவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
பாகிஸ்தான் பயணத்தை வெற்றிகரமாக(?) முடித்துவிட்டு போகும் வழியில் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கும் வந்தார். வந்த இடத்தில் வர்த்தக ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார். இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு, ஆற்றல் மற்றும் கட்டுமானம் தொடர்பான சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அபிரிமிதமானதாகும். உலக வர்த்தக சந்தையை பொருத்தவரையில் இந்தியாவின் வர்த்தக சந்தை மிகப் பிரமாண்ட அமைப்பாக உள்ளது. இதன்
காரணமாகவே இந்தியப் பொருளாதாரம் மீது சவுதி அரேபியா அபார நம்பிக்கை வைத்துள்ளது. ஆகவேதான் நாங்கள் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளோம் என்று சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் மிக்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு செய்யும் நிறுவனமான ஆரம்கோ, இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து மிகப்பெரும் முதலீட்டை செய்ய விரும்புவதாக,ஆரம்கோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்தார்.