பிப்ரவரி 14-ம் தேதி இந்திய எல்லைகளைக் காத்த 44 மத்திய ரிசர்வ் போலீஸார்கள், ஜெய்ஷ் இ முகம்மதுவின் தற்கொலைப் படைத் தாக்குதலில் வீர மரண்ம் அடைந்தார்கள்.
அவர்களுக்காக நாடே கொந்தளித்தது. இந்த அந்த கொந்தளிப்புகளும், பாகிஸ்தான் மீதான கோபமும் குறையவில்லை.
பாகிஸ்தான் நடத்திய இந்த தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க, சர்வதேச அளவில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் புல்வாமா தாக்குதலுக்கு கண்டன அறிக்கை வெளியிடுவது தொடங்கி, இப்போது சிந்து நதி ஒப்பந்தத்தில் வந்து நிற்கிறது.
அது என்ன
Indus Waters Treaty. இதைத் தான் தமிழில் சிந்து நதி ஒப்பந்தம் என்கிறோம். சர் சிரில் ராட்க்ளிஃப் (Sir Cyril Radcliffe) இந்தியாவுக்குக், பாகிஸ்தானுக்குமான எல்லைப் பகுதிகளை கோடு கிழித்து 17 ஆகஸ்ட் 1947-ல் வெளியிட்ட போதே யாருக்கு எந்த நதி என பிரச்னை தொடங்கிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சிந்து நதியை எப்படி பங்கு போட்டுக் கொள்ளலாம் எனச் சொல்லும் ஒப்பந்தம் தான் இந்த சிந்து நதி ஒப்பந்தம்.
சிந்து நதி
மானசரோவர் ஏரிக்கு அருகில் இமய மலையில் தொடங்கும் இந்த நதி ஆசியாவின் மிகப் பெரிய நதிகளில் ஒன்று என பள்ளிப் பாடத்தில் படித்திருக்கலாம். ஆனால் இது ஒரு சீன நதி என்பது எத்தனை பேருக்குத் தெரியும். Sênggê Zangbo என்கிற ஆறு தான் நகாரி என்கிற பகுதியில் (மானசரோவருக்கு அருகில்) தான் இந்த Sênggê Zangbo நதியின் தோற்றவாய் இருக்கிறது. இந்த நதி திபெத்திய பகுதிகளைத் தொடும் போது தான் பெயர் மாறி சிந்து நதியாக ஓடத் தொடங்குகிறது.
கூகுள் மேப்ஸ்
இன்று இருக்கும் டெக்னாலஜி வசதிகளால், இதை உறுதிப்படுத்த முடிகிறது. கூகுள் மேப்பில் Indus river எனத் தேடினால் பாகிஸ்தானில் காட்டும். அதன் தோற்றவாயைத் தேடிப் போனால் இந்தியாவின் டெக்சொக் (Demchok) மற்றும் சீனாவின் கர் (Gar) பகுதிகளில் தான் Sênggê Zangbo நதி சிந்து நதியாக பெயர் மாற்றம் அடைவதைப் பார்க்க முடிகிறது. அதை மேலே படத்தில் பார்க்கலாம்.
சிந்து நதிப் பாதை
காஷ்மீரின் டெம்சொக் பகுதியில் இருந்து இந்தியாவில் ஓடத் தொடங்கும் சிந்து நதி அப்படியே வடக்குப் பக்கம் Dungti, chumathang, kiari, ikpadok, upshi, changa, sindhugat, choglamsar வரை பாய்கிறது.
அதன் பின் கொஞ்சம் வட கிழக்காக phey, alchi, nurla வழியாக சிந்து பள்ளத்தாக்கை அடைகிறது. இந்ஹ சிந்து பள்ளத்தாக்கில் தான் dargoo, dah பகுதிகள் எல்லாம் வருகிறது. இது வரை எல்லாமே இந்திய கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர்.
பாக் காஷ்மீர்
பகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் கில்ஜித் பகுதியில் தான் சிந்து நதி அரபிக் கடலில் கலக்க தெற்கு நோக்கி பாயத் தொடங்குகிறது. இந்த இடத்தில் தான் கில்ஜித் ஆறும் சிந்து நதியோடு கலந்து விடுகிறது. முசஃபர்கர் (Muffargarh) பஞ்சாப் பகுதியில் தான் பல நதிகள் இணைந்து பெரிய சிந்து நதியா அதுவும் ஒற்றை நதியாக பிரவாகம் எடுத்து ஓடத் தொடங்குகிறது. இப்படி பாகிஸ்தான் முழுக்க ஓடி பாகிஸ்தானையே வளப்படுத்தி சிந்த் (sindh) பகுதியில் கட்ச் வளைகுடாவில் அரபிக் கடலில் கலக்கிறது.
உலக அளவில்
சிந்து நதியால் 11,65,000 கிமீ பரப்புக்கு தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் 243 கிமீ கண அடி தண்ணீரை வெளியேற்றுகிறது. இதனால் தான் இது உலகின் 21வது பெரிய நதி. இந்த நதிக்கு சப்தநாத் என்கிற பெயரும் உண்டு. பியாஸ், ரவி, சட்லஜ், ஜூலம், சேனாப் என்கிற ஐந்து நதிகள் ஓடுவதால் தான் பஞ்சாப் மாநிலத்துக்கு பஞ்சாப் எனப் பெயர் வந்தது. அந்த ஐந்து நதிகளோடு சேர்த்து காபுல் நதியும் சிந்து நதியோடு இணைவதால் தான் சிந்துக்கு சப்தநாத் எனப் பெயர். சரி சிந்து நதி ஒப்பந்தத்துக்கு போவோம்.
1947
நீர் வரத்தை பராமரிப்பதற்காக கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாபின் முதன்மை பொறியியலாளர்களுக்கு இடையில் 1947ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன் படி பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிவதற்கு முன் எவ்வலவு தண்ணீரை பெற்ரு வந்ததோ அதே அளவு தண்ணீரை கொடுப்பது தான் அந்த ஒப்பந்தத்தின் சாரம். இந்த ஒப்பந்தம் 1948 மார்ச் 31 வரை செல்லும் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் சம்மதத்தோடு முடிவு செய்யப்பட்டது.
தடை அழுத்தம்
சரியாக 1948 ஏப்ரல் முதல் நாளன்று ஒப்பந்தம் முடிவடைந்தது. இதற்காகவே காத்திருந்தது போல இந்தியா, பாகிஸ்தானுக்கு சிந்து நதி மூலம் நீர் செல்லும் இரண்டு முக்கிய கால்வாய்களை அடைத்தது. நீர் இல்லாமல் தவித்தது பாகிஸ்தான். இதனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியானது. இந்தியா இப்படி பாகிஸ்தானின் கழுத்தை நெறிப்பதற்கு அன்று காஷ்மீர் ஒரு முக்கிய காரணம். காஷ்மீரின் அரசர் ஹரி சிங் இந்தியா பக்கம் சாய்ந்தாலும் மக்கள் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டே காஷ்மீரை இந்தியாவோடோ அல்லது பாகிஸ்தானோடோ சேர்க்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் கிளர்ச்சி மொழிகள். அமைதியாக இந்தியாவோடு சேர வரும் காஷ்மீரிகளை மதத்தின் பெயரால் குழப்புகிறது என்பது இந்தியாவின் வாதம். அந்த வாதம் தான் மேலே சொன்னது போல சிந்து நதி பங்கீட்டில் எதிரொலித்தது.
பேச்சு வார்த்தை
1948 தொடங்கி பல பேச்சு வார்த்தைகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையைல் நடந்தது. ஆனால் பயனில்லை. எந்த ஒரு தீர்வையும் இரண்டு நாடுகளும் ஏற்கவில்லை. இதற்கு மத்தியில் உலக வங்கி இந்தியாவுக்கு சார்பாகவே முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டுகள் வேறு முன் வைத்தது பாகிஸ்தான். நடுவில் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்துக்குச் சென்று முறையிட்டு தன் பங்கு தண்ணீரைப் பெறப் போவதாகவும் சொன்னது. அதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. இரு நாடுகளும் ஏற்ருக் கொள்ளும் விதத்தில் ஏதாவது ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நீதிமன்றம் தீர்வாகாது என ஆணித்தரமாக நம்பியது.
David Lillienthal
பேச்சு வார்த்தைகள், அரசியல் சண்டைகள், பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க 1954இல், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, டென்னஸி பள்ளத்தாக்கின் முன்னாள் தலைவர் மற்றும் அப்போதைய அமெரிக்க அணு சக்தி கழகத்தின் தலைவராக இருந்த டேவிட் லீலியந்தலை (David Lillienthal)-ஐ இந்தியாவுக்கு அழைத்து வந்தார். சிந்து நதி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கேட்டுக் கொண்டாராம். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்ட டேவிட் லீலியந்தல், சிந்து நதி நீர் பங்கீடு பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுதினாராம். அன்றைக்கு டேவிட்டின் பயணச் செலவுகளை ஏற்றுக் கொண்டது கொலியர் (Collier) என்கிற பத்திரிகை. டேவிட் வெளியிட்ட தொடரை உலக வங்கியிடமும் சமர்பித்தார்களாம்.
உலக வங்கி
அந்தக் கட்டுரையை உலக வங்கியின் தலைவரும் லீலியந்தலின் நண்பருமான டேவிட் ப்ளைக் என்பவரும் படித்தார். அவர் இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசினார். டேவிட் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் நடந்த பல ஆண்டு பேச்சு வார்த்தைக்கு பிறகு, 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கராச்சியில் கையெழுத்தானது. இரு நாட்டு அரசும் சிந்து நதி பங்கீட்டுக்கு ஒப்புக் கொண்டது.
எப்படி பிரித்தார்கள்
சிந்து நதி உடன்படிக்கையின் கீழ், மூன்று நதி கிழக்கு நதிகளாகவும், அடுத்த மூன்று நதிகள் மேற்கு நதிகளாகவும் பிரிக்கப்பட்டது. உடன்படிக்கையின் படி, சிந்து படுகையின் கிழக்கு பகுதி நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவைகள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டது. சிந்து படுகையின் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்திய சுதந்திரம்
ஒப்பந்தத்தின் படி, சில விதி விலக்குகள் தவிர, கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில், மேற்குப் பகுதி நதிகளின் தண்ணீரைப் பயன்படுத்த இந்தியாவுக்கு கட்டுப்பாட்டுடன் (மின்சார உற்பத்தி, விவசாயம் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர்) கூடிய உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தது.
துணை சரத்துக்கள்
இரு நாடுகளும், இந்த சிந்து நதி ஒப்பந்தம் குரித்து பேச்சு வார்த்தைகள் நடத்த, பரஸ்பர அரசுகள் கள ஆய்வுகளை மேற்கொள்ளவும் சரத்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி நீர் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன்படி இரு தரப்பு ஆணையர்களும் சந்திக்க வேண்டும் என்ற முன்மொழிவும் வைக்கப்பட்டது. சந்தித்தும் வருகிறார்கள்.
எப்போது எல்லாம்..?
நதி நீர் பங்கிட்டு விஷயத்தில், சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாக எதாவது பிரச்சனை வந்தால், அதைப் பற்றி இரு தரப்பு ஆணையர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஒப்பந்தத்தில் போதே துனை சரத்துகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
அனுமதி தேவை
பிரித்திருக்கும் இந்த 6 நதிகளில் எந்த ஒரு நதியில் சிறிய மாறுதல்கள் தொடங்கி பெரிய கட்டுமானங்கள் வரை என்ன செய்வதாக இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் சேர்ந்தே செய்ய வேண்டும். மாற்றங்கள் செய்யும் நாடு, மற்ற நாட்டுடன் பேசி சம்மதம் வாங்க வேண்டும். திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினால் மற்ற நாட்டை திருப்தி படுத்தும் வகையில் பதிலளிக்க வேண்டும். சுருக்கமாக இரு நாடுகளும் ஓகே சொல்லி கையெழுத்து போட்டால் தான் ஒரு செங்களைக்கூட நட முடியும். அப்படி ஒருவேளை சிந்து நதி நீர் ஆணையத்தில் ஒரு சுமூக தீர்வு ஏற்படவில்லை என்றால் இரு நாட்டு அரசுகளும் இந்த விவகாரத்தில் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். அதோடு நடுநிலையான துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நடுவர் நீதிமன்றத்தையோ அணுகலாம் எனவும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சர்ச்சைக்குரிய விவகாரம்
இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களான பகுல் துல் அணை (Pakul dul dam 1,000 மெகாவாட்), கீழ் கல்நல் (Lower kalnal, 48 மெகாவாட்) ஆகிய இரண்டு நீர் மின்சார திட்டத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்தியா பாகிஸ்தானை மதித்த்தாகத் தெரியவில்லை. சரிப்பா நீங்க சம்மதிக்கல பாத்துக்குறோம். ஆனால் இந்த இரண்டு நீர் மின் நிலைய வேலைகளை நிறுத்த முடியாது என ஆகஸ்ட் 2018-லேயே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது இந்தியா.
பயன் இல்லை
"காஷ்மீர் அதன் நீர் வளங்களை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை" என பாகிஸ்தான் நாட்டுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பார்த்தசாரதி ஜி ஒரு பேட்டியில் சொல்கிறார். அதே நேரத்தில், காஷ்மீருக்கு, தன்னுடைய மாநிலத்தின் நீர்வள ஆதாரத்திலிருந்து எந்த வொரு பெரிய நன்மையும் கிடைப்பதில்லை என்கிற கருத்தை காஷ்மீர அரசியல் கட்சிகளே முன் வைக்கின்றன.
முதல் அமைச்சர்
பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் மெஹ்மூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, ‘சிந்து நதி ஒப்பந்தத்தால் காஷ்மீர் மாநிலத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது என்றும், அதற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என பகீர் கிளப்பினார்.
உலக சாதனை
உலகில் சிறந்த நீர் பகிவு ஒப்பந்தங்களில் சிந்து நதி ஒப்பந்தமும் ஒன்று. அதுவும் சிக்கலான எல்லைக் கோடுகள் மற்றும் வேறு பட்ட மதம் மற்றும் கலாசார பண்பாடுகளைக் கொண்டு இரு நாடுகள் ஒரே நதிகளை பகிர்ந்து கொள்வது என்றால் சும்மாவா..? அதனால் தான் இன்று வரை சிந்து நதி நீர் பங்கீட்டு பிரச்னை என்றால் உலக மீடியாக்கள் நம்மைப் பார்க்கின்றன.
ரத்து செய்ய முடியுமா?
"ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு நாடும் ஒருதரப்பாக ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ, மாற்றவோ முடியாது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதாவது செய்வதாக இருந்தாலும், புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதாக இருந்தாலும், அதை இரு நாடுகளும் இணைந்துதான் செய்ய முடியும்" என சிந்து நதிப் படுகை ஒப்பந்தத்தில், 1993 முதல் 2011 ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் ஆணையராக இருந்த ஜமாத் அலி ஷா சொல்கிறார்.
முடியும்
ஒரு நாட்டை மற்றொரு நாடு பொருளாதார ரீதியிலோ அல்லது பாதுகாப்பு ரீதியிலோ தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தால் சில சர்வதேச சட்டங்கள் படி ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தங்களில் இருந்து பின் வாங்கலாமாம்.
விளைவு
மீண்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 17 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் காய்ந்த வானம் பார்த்த பூமியாகிவிடும். அப்போது இந்தியா சொல்வதைக் கேட்டால் ஒழிய, பாகிஸ்தானுக்கு நீர் கிடைக்காது. விவசாயம் மட்டுமின்றி ஏகப்பட்ட தொழிற்சாலைகளும் தண்ணீரை நம்பி இருப்பதால் பாகிஸ்தானுக்கு பலத்த அடியை பொருளாதார ரீதியாகத்தர முடியும் என கணக்கு போடுகிறது மத்திய அரசு.
சர்வதேச அழுத்தம்
ஆனால் இந்திய பிரிவினைக்குப் பிறகு, உலக வங்கி தான் நாட்டாமையாக இருந்து இந்த சிந்து நதி பங்கீட்டு ஒப்பந்தத்தை போட்டுக் கொடுத்தது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தால், பாகிஸ்தான் நேரடியாக உலக வங்கியிடம் புகார் சொல்லும். உலக வங்கியின் கடன் வசதிகள், இந்தியாவுக்கு சர்வதேச அளவில் கொடுத்திருக்கும் ரேட்டிங்குகள் எல்லாவற்ரிலும் கை வைக்கும் என்கிற பயமும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
உறவு விரிசல்
அப்படி நடந்தால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பலத்த அடி விழும். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வராது, சர்வதேச அளவிலான நற்பெயர் போய்விடும், மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளில் கூட விரிசல் எழலாம். அதற்காகத் தான் இந்தியா புலியைப் போல சிந்து நதி விஷயத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறது.