டெல்லி: அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் ஸ்விகி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டா போட்டி நிலவுகிறது.
முன்பெல்லாம் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டும் வெளியூர் செல்லும் போதும் அதையே கட்டு சாதமாக பொட்டலமாக கட்டிக் கொண்டு போய் சாப்பிட்டும் வந்த நம்முடைய பழக்கம் நாளடைவில் மறைந்து போய் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வந்தோம். பின்னர் இந்த பழக்கமும் மாறிப்போய், இருந்த இடத்தில் இருந்தே நமக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் உருவானது.
நாம் இருக்கும் இடத்தில் இருந்தே நமக்கு தேவைப்படும் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் நம்முடைய உணவு நம்மைத் தேடி வந்து விடும். நாம் எந்த ஹோட்டலில் ஆர்டர் செய்தோமோ அந்த ஹோட்டல்களே நம்முடைய இடத்திற்கு வந்து உணவுகளை டோர் டெலிவரி செய்துவிட்டுப் போகும். இன்னும் சில ஹோட்டல்கள் அதற்காக இருக்கும் டெரிவரி நிறுவனங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்புடைத்து விடும்.
ஆர்டர் செய்து சாப்பிடும் மக்கள்
நாம் ஆர்டர் செய்த உணவுகளை டோர் டெலிவரி செய்தற்கு பல நிறுவனங்கள் உள்ளன. ஆர்டர் செய்த உணவுகளை டோர் டெலிவரி செய்வதற்கு இந்தியாவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், இவற்றில் முன்னணியில் இருப்பது ஸ்விகி ஆகும். பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் 5000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். 2014ஆம் ஆண்டில், சுமார் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மூலதனம் 3.3 பில்லியன் டாலர்களாகும். இதன் 2018ஆம் ஆண்டு வருமானம் 4.4 பில்லியன் டாலர்களாகும்.
ஆன்லைன் உணவு ஆர்டர்
ஸ்விகியைப் போலவே உணவுகளை டோர் டெலிவரி செய்யும் மற்றொரு நிறுவனம் ஜொமாட்டோ. இந்நிறுவனம் தற்போது இந்தியா உட்பட 24 நாடுகளில் உணவுகளை டோர் டெலிவரி செய்துவருகிறது. 2008ஆம் ஆண்டில் ஃபுட்டிபே என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டில் ஜொமாட்டோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உணவுகள் ஆர்டர்
2011ஆம் ஆண்டில் இந்தியாவின் பெங்களுரு, புனே, சென்னை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தன்னுடைய சேவையைத் தொடங்கியது. பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளிலும் தன்னுடைய சேவையை விரிவுபடுத்தியது. தற்போது இந்தியாவில் ஆன்லைன் உணவு ஆர்டர்களை பிடிப்பதில் இவ்விரு நிறுவனங்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.
போட்டிக்கு வந்த உபேர் ஈட்ஸ்
ஸ்விகி, ஜொமாட்டோ நிறுவனங்களைப் போலவே, உணவு டோர் டெலிவரி செய்யும் வெளிநாட்டு நிறுவனம் உபர் ஈட்ஸ். அமெரிக்காவின் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் நிறுவனத்தின் துணை நிறுனமான உபேர் ஈட்ஸ் கடந்த 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியாவிலும் இந்நிறுவனம் தன்னுடைய உணவு டெலிவரி செய்யும் சேவையை நடத்திவருகிறது.
10 லட்சம் உணவுகள் டெலிவரி
டாக்ஸி சேவையில் உபேரின் நேரடி போட்டி நிறுவனமாக இருந்து வரும் ஓலாவின் ஃபுட்பாண்டாவை விட உபர் ஈட்ஸ் அதிக டெலிவரியை செய்தாலும், ஸ்விகி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் திணறிவருகிறது. உபர் ஈட்ஸ் ஒரு நாளைக்கு சராசரியாக 1,50,000 முதல் 2,50,000 உணவு டெலிரியை செய்கிறது. ஸ்விகி மற்றும் ஜோமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 10 லட்சம் வரை உணவு ஆர்டர்களை டெலிவரி செய்கின்றன. இதனாலேயே இந்நிறுவனத்தை விற்பனை செய்வதே சிறந்தது என்று முடிவெடுத்துள்ளது.
போட்டா போட்டி
உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்விகி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் களத்தில் இறங்கி உள்ளன. கடந்த ஆண்டு முதலேயே போட்டி நிறுவனங்களை வளைப்பதில் ஸ்விகி, ஜொமாட்டோ இடையே பலத்த போட்டி நிலவிவருகிறது. இதில் ஸ்விகி, உபர் ஈட்ஸை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிகிறது.
பேரம் பேசும் ஸ்விகி
உபேர் ஈட்ஸ் நிறுவனம் மற்ற நாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களை போட்டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. உபேர் ஈட்ஸ் நிறுவனத்தால் ஆண்டுக்கு 15 முதல் 20 மில்லியன் டாலர் வரை நட்டம் ஏற்படுவதாகவும், அதை விற்றுவிட்டால் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடுவது சுலபமாகவும், லாபகரமானதாகவும் இருக்கும் என்று உபேர் நினைக்கிறது. ஆனால் என்ன விலைக்கு உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை ஸ்விகி வாங்கும் என்ற விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.