பிப்ரவரி 14, 2019 அன்று நடந்த புல்வாமா தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களின் உயிர் பிரிந்தது. இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பினர் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் செய்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் ராணுவவே இந்தியா ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை எதிர்பார்த்துக் காத்திர்நுததாம். அதனால் தரைப் படையை எவ்வளவு பலப்படுத்த முடியுமோ அவ்வளவு பலப்படுத்தியதாம்.
ஆனால் இந்த முறை இந்தியா வானில் தாக்குதலை முடக்கிவிட்டது. 12 மிராஜ் 2000 விமானங்கள் களம் இறங்க, சுகோய் 30 ரக விமானங்கள் மிராஜை பாதுகாத்துக் கொண்டே பாகிஸ்தான் அபகரிப்பு காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து மொத்த ஜெய்ஷ் இ முகம்மது கூடாரங்களையும், பயிற்சியகங்களையும் அழித்தொழித்தது இந்திய விமானப் படை.
எச்சரிக்கை
பக்துன்வா மாகாணத்தில் உள்ள பால்கோட் பகுதியில் மலை உச்சியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் படர்ந்திருந்தது ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையம். அதை மட்டும் தான் குறி வைத்தது இந்தியா. ஒரு சிவிலியன் கூட இதனால் பாதிக்கப்படக் கூடாது, ஒரு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூட தாக்கப்படக் கூடாது என கண்ணும் கருத்துமாக தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் மீத தாக்குதல் தொடர்ந்தால் அது போராக மாறக்கூடும் என்பதால் தான் இந்தியா இத்தனை கவனமாக திட்டமிட்டது.
போர் வியூகம்
மேற்கு மற்றும் மத்திய பிராந்திய விமானப்படைத் தளங்களிலிருந்து விமானங்கள் பறந்து சென்று தாக்கியிருக்கின்றன. எங்கேயிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதைப் பாகிஸ்தானால் புரிந்துகொள்ள முடியவில்லை. 12 மிராஜ் விமானங்களும் 4 பிரிவுகளாகப் பிரிந்து மூன்று இலக்குகளைத் தாக்கியுள்ளன.
சரியான பாதுகாப்பு
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சுகோய்-30 ரக விமானம் பாதுகாப்புக்குச் சென்றுள்ளது. ஆனால், மிராஜ் விமானங்கள் மட்டுமே தாக்குதலை நடத்தியுள்ளன. வானில் எரிபொருள் நிரப்பும் விமானமான ஐ.எல்-78 ரக விமானம் மட்டுமே பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. பிற விமானங்கள் அனைத்துமே காஷ்மீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.
பதறிய பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தானின் எல்லையில் புகுந்து (பாகிஸ்தான் ஆளுகையின் கீழ் இருக்கும் காஷ்மீரைத் தான் அவர்கள் பாகிஸ்தான் எல்லை எனச் சொல்கிறார்கள்.) தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பர்வேஸ் கட்டார்க் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரோஷி ஆகியோர் கூட்டாக இணைந்து சர்வதேச மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
பாக் அனுமதித்ததா..?
பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், `நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா விமானப்படைத் தலைமையகத்துக்கு வந்தார். இங்கேதான் இந்திய விமானங்களைப் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அனுமதிக்கும் திட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதியும் விமானப்படைத் தளபதி முஜாகீத் அன்வர் கான் சேர்ந்து பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானங்களை அனுமதித்துள்ளனர்' என்று கேள்வி எழுப்பினார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பதில்
இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷி, `இது பொறுப்பற்ற குற்றச்சாட்டு. ராணுவத் தளபதியும் விமானப்படைத் தளபதியும் எந்த விதமான திட்டமிடலிலும் ஈடுபடவில்லை. நம் விமானப்படையைக் குறைத்து மதிப்பிட விட வேண்டாம். எல்லா நிலையிலும் பாகிஸ்தான் விமானப்படை தயாராக இருந்தது'' என்றார்.
பாக் ரேடார் ஜாம் ஆகிவிட்டதா..?
பாகிஸ்தான் ரேடாரை இந்தியா ஜாம் செய்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, `அப்படியென்றால் எப்படி இந்திய விமானங்களைப் பாகிஸ்தான் விமானங்களால் விரட்ட முடிந்திருக்காதே' என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பதிலளித்தார். ஆனால் உண்மையில் இந்திய விமானங்களின் இலக்குகளான ஜெய்ஷ் இ முகம்மது கூடாரங்களை அழகாக திட்ட மிட்டு அழித்துவிட்டு தங்கள் இருப்பிடத்துக்கு வந்துவிட்டது இந்திய விமானப் படை.
தகுந்த பதிலடி கொடுப்போம்
`உங்களால் ஒரு இந்திய விமானத்துக்குக் கூட சிறு கீறல் கூட ஏற்படுத்த முடியவில்லையா' என்று மற்றொரு பாகிஸ்தான் செய்தியாளர் குமுறினார். இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், `நீங்கள் ஒரு பாகிஸ்தானி. நான் உங்களிடம் தாழ்மையாக ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ராணுவ ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பதிலடி கொடுக்கும் திறன் நம்மிடையே உள்ளது. நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டாம். தக்க தருணத்தில் ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கப்படும்' என்று சமாளித்தார்.