டெல்லி: வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
சிம்கார்டு பெறவும், வங்கி கணக்குத் தொடங்கவும், ஆதார் எண்ணை, சுய விருப்பத்தின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளலாம்.
சுருக்கமாக இனி ஆதார் எண்ணை தேவை என்றால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். யாரும் ஆதாரைக் கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.
அரசு திட்டங்கள்
அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு, வங்கிக் கணக்குகளுக்கு, செல்போன் சிம் கார்டுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது இதை எதிர்த்துச் சமூக ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
செப்டம்பர் 2018
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் வங்கிக் கணக்குகள், செல்போன் சேவை மற்றும் மாணவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆதார் எண்ணைக் கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது எனத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.
வருமான வரி
வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு உடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது.
தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், மொபைல்போன் பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சீர்செய்யும் வகையிலும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியது.
செல்போன்
இந்நிலையில், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆதார் சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவை லோக்சபாவில் கடந்த ஜனவரி மாதம் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
சுய விருப்பம்
தனிநபர்கள் தாங்களாக விரும்பி செல்போன் இணைப்பு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்ட திருத்த மசோதா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினர்.
ராஜ்யசபா
இந்த சட்ட மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறாத நிலையில், லோக்சபாவில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்ட திருத்தம்
டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வங்கிக் கணக்கு
இதையடுத்து வங்கிக் கணக்கு, செல்போன் இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதன்படி, சிம்கார்டு பெறவும், வங்கிக் கணக்கு தொடங்கவும் கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
லோக் சபா
ராஜ்நாத் சிங் லோக்சபாவில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 122 கோடியே 90 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களில் 6 கோடியே 71 லட்சம் பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும், 29 கோடியே 2 லட்சம் பேர் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அப்போது அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.