டாடா குழுமத்தின் நிறுவனர் யார்..? ஜே ஆர் டி டாடா என்றால் தவறான விடை. ஜாம்செட் ஜி டாடா. ஜாம்செட்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட டாடா குழுமம் தன் 100 நிறுவனங்களை 10 நிறுவன குழுக்களாக மாற்ற இருக்கின்றன.
என்ன காரணம் எனக் கேட்டால் "சிதறிக் கிடக்கும் 100 நிறுவனங்களை ஒன்று திரட்டி அவைகளை முழுமையாக நிர்வகித்து நல்ல லாபம் பார்ப்பது தான் டாடா குழுமத்தின் திட்டம்" என்கிறார்கள்.
இந்த ஒருங்கிணைப்புக்குப் பின்னும் தாய் நிறுவனமான டாடா குழுமத்தின் பிரதிநிதிகள் தான் 10 நிறுவன குழுக்களையும் தலைமை தாங்கி நடத்துவார்கள் எனவும் விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
10 நிறுவன குழுக்கள்
IT - டிசிஎஸ், டாடா எலிக்ஸி
Steel - டாடா ஸ்டீல்
Automotive - டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்
Consumer & Retail - டாடா கெமிக்கல்ஸ், டாடா குளோபல் பிவரேஜஸ், வோல்டாஸ், டைட்டன், இன்ஃபினிட்டி ரீடெயில், ட்ரெண்ட்
Infrastructure - டாடா பவர், டாடா ப்ராஜெக்ட்ஸ், டாடா ஹவுசிங், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ், டாடா ரியால்டி $ இன்ஃப்ரா
Financial Services - டாடா கேப்பிட்டல், டாடா ஏஐஏ லைஃப், டாடா அஸெட் மேனேஜ்மெண்ட், டாடா ஏஐஜி
Aerospace & Defence - டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்,
Tourism & Travel - இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா விஸ்தாரா, ஏர் ஏஷியா இந்தியா
Telecom & Media - டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்கை, டாடா டெலிசர்வீசஸ்
Trading and Investments - டாடா இண்டர்நேஷனல், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா இன்வெஸ்மெண்ட்
அந்தத் தலைவன்
டாடா குழுமத்தின் பிரதிநிதியாக வருபவர்கள், அந்ததந்த துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்களாகவும், அந்த துறையை தனி ஆளாக டாடா சார்பாக நடத்திச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் எனவும் டாடா குழுமம் சொல்கிறதாம்.
Verticalisation
இப்படி நிறுவன குழுக்களைப் பிரிப்பதால் ஒவ்வொரு நிறுவனத்துக்குமான அறிவு பகிர்ந்து கொள்ளப்படும். அதோடு திட்டமிடல் மற்றும் உற்பத்தியில் மேலோங்கி நிற்க முடியும் எனவும் டாடா குழுமம் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக ஒரு நிறுவன குழுவில் இருக்கும் நிறுவனத்தின் சுதந்திரத்தில் மற்ரொரு நிறுவனமோ அல்லது அந்த நிறுவன குழுவின் தலைவரின் தலியீடுகளோ இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் என்றும் சொல்கிறார்கள்.
டாடா மூடுவிழா
மேலே சொன்ன படி நிறுவனங்களை மாற்றி அமைக்க சுமார் ஒரு வருடம் வரை ஆகலாம். இந்த 100 நிறுவனங்களின் கீழ் சுமார் 1000 துணை நிறுவனங்கள் இருக்கின்றன. தேவையான நிறுவனங்களை வைத்துக் கொண்டு சிறப்பாக முன்னேறுவது, தேவையற்ற நிறுவனங்களை மூடிவிடுவது என திட்டமாம்.
1 வருடம் மேல்
இந்த 100 நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களை எல்லாம் ஒரு நிறுவன குழுக்களுக்கும் கொண்டு வருவது ஒன்றும் அத்தனை சுலபமான விஷயம் கிடையாது, பங்குச் சந்தை தொடங்கி முதலீட்டாளர்கள் வரை பலருக்கு தகவல்களைத் தெரிவித்து ஒப்புதல் வாங்க வேண்டி இருப்பதால் இது கொஞ்சம் தாமதமாகும் என்றே சொல்கிறார்கள்.
எவ்வளவு செலவு
சுமார் 70,000 கோடி ரூபாயை இந்த புதிய நிறுவன அமைப்பு மாற்றத்துக்கு டாடா குழுமம் இதுவரை செலவு செய்திருக்கிறதாம். இந்த 70,000 கோடி ரூபாயில் தான் இணைப்புகள், மூடுவிழாக்கள் எல்லாம் நடத்தி வருகிறார்களாம்.
டாடா-க்கு நன்மை தான்
டாடா போன்ற சிக்கலான அதிக பிசினஸ் செய்யக் கூடிய நிறுவனத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வது பல விதங்களில் செலவுகளை குறைத்துக் கொள்ள உதவும். அதோடு சப்ளை மற்றும் போக்குவரத்து விஷயங்கள் மொத்த டாடா குழுமத்துக்கும் பெரிய அலவில் செலவுகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் சந்தையைப் பிடிக்க ஒரு டாடா நிறுவனத்துக்கு மேற்கொள்ளும் செலவில் இனி ஒன்றுக்கு மேற்பட்ட டாடா குழும நிறுவனங்கள் பயன் பெறும் என பல்வேறு நன்மைகளைப் பட்டியலிடுகிறார்கள். சந்தை வல்லுநர்கள்.
இன்று 100 நிறுவனங்களாக வளர்ந்திருக்கும் டாடாவின் புராணத்தையும் கொஞ்சம் வேகமாக பார்த்துவிடுவோமா..?
அப்பா
ஜாம்செட்ஜி டாடா. இந்திய தொழிற்துறையின் தந்தை எனப் பெயரெடுத்தவர். ஜாம்செட்ஜியின் குடும்பம் பார்மபரியமாக பார்சி பூசாரியாகவே வழிவழியாக வந்து கொண்டிருந்தவர்கள்.
அப்பாவின் அப்பா
ஆனால் ஜாம்செட்ஜியின் தந்தை நுஸர்வான்ஜிக்கு பிடிக்கவில்லை. பாரம்பரியங்கள், அப்பா அம்மா பிரச்னைகளை எல்லாம் தாண்டி ஒரு தொழில்முனைவோராக வெளியே வந்தார். ஆரம்பத்தில் ஏற்றுமதி வியாபாரத்தில் களமிறங்கினார். 14 வயதிலேயே ஜாம்செட்ஜி தந்தையின் ஏற்றுமதி வியாபாரத்தில் உதவத் தொடங்கினார்.
1857-ல்
1857 என்ற உடன் சிப்பாய்க் கலகம் நினைவுக்கு வரலாம். அப்படி வந்தால் சரி தான். அந்த காலங்களில் தான் ஆங்கிலேயர்கள் முழுமையாக இந்தியாவை அடக்கி அடிமைகளைப் போல ஆளத் தொடங்கிய காலம். அந்த நேரங்களில் அப்பா நுஸர்வான் ஜியும், மகன் ஜாம்செட்ஜியும் அதிகம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
கலவர நேரம்
இந்த கலவரத்தைப் படிக்கும் நமக்கு இந்திய வீரர்கள் சிந்திய ரத்தமும், அவர்களின் வீர மரணமும் நினைவுக்கு வரும். ஆனால் டாடா குடும்பத்தினருக்கு அவர்கள் பயந்து பயந்து மேற்கொண்டு பயணங்கள், பிசினஸ் உரிமங்களுக்கு ஆங்கிலேயர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவைகள் தான் நினைவுக்கு வரும். ஆம். இவர்கள் வெளிநாடுகளூக்கும் பயணம் மேற்கொள்ளும் போது எல்லாம் இந்தியர் தீவிரவாதிகளூக்கு உதவுகிறார்களா என விசாரணை நடக்கும். சரி ஜாம்செட்ஜி கதைக்கு வருவோம்.
ஜாம்செட்ஜி வியாபாரம்
நம் ஜாம்செட்ஜி முதலில் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த நிறுவனங்களை வாங்கி கொஞ்சம் லாபத்தில் ஓடச் செய்து மொத்த நிறுவனத்தையும் நல்ல விலைக்கு விற்கத் தொடங்கினார். 1868-ல் தன் கையில் இருந்த 21,000 ரூபாயை முதலாகப் போட்டு திவாலான சின்ச்போக்லி எண்ணெய் மில்லை வாங்கினார். அடுத்த ஆண்டே அதை ஒரு பருத்தி மில்லாக மாற்றி லாபத்தில் ஓடச் செய்தார், வெள்ளியர்களிடம் நல்லுறவு கொள்ள அலெக்ஸாடிரா என பருத்தி மில்லுக்கு பெயர் வைத்து விசுவாசத்தைக் காட்டினார்.இரண்டு வருடத்தில் நல்ல லாபத்துக்கு விற்று தன் முதல் பெரிய வியாபார லாபத்தைச் சுவைத்தார்.
தொழிற்துறைக் கனவுகள்
ஒரு தரமான இரும்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும். உலக தரத்திலான கல்வி மையங்களைக் கட்ட வேண்டும், ஒரு பிரமாதமான பிரமாண்ட ஹோட்டலைக் கட்ட வேண்டும், நீர் மின்சார உற்பத்திமையங்களைத் தொடங்க வேண்டும் என நான்கு முக்கிய கனவுகளைக் கண்டார்.
டாடா செய்தது
ஜாம்செட்ஜி கனவு கண்டதில் தாஜ் ஹோட்டலை மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. அன்றைய தேதியில் தாஜ் ஹோட்டலில் என்ன சிறப்பு தெரியுமா..? ஒட்டு மொத்த மும்பையிலேயே மின்சார வசதி கொண்ட ஒரே ஹோட்டல் நம் தாஜ் ஹோட்டல் தான். 2008 தீவிரவாத தாக்குதலின் போது தாக்கப்பட்ட அந்த ஹோட்டல் தான் டாடா நிறுவனத்தின் முதல் ஹோட்டல். தி தாஜ்.
IISc
ஜாம்செட்ஜி டாடா தான் ஒரு இந்திய அறிவியல் மையத்தை கட்டமைக்க 1898-ல் கர்சனிடம் கோரிக்கை வைத்தார். அதன் பின் தான் மைசூர் மகாராஜா 370 ஏக்கர் நிலம் கொடுத்து உதவினார். கட்டடக்களை டாடா தன் செலவில் கட்டினார். ஹைதராபாத் நிஜாம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அப்படி டாடா கண்ட கனவு தான் இன்று பெங்களூரின் IISc ஆக நிமிர்ந்து நிற்கிறது.
தொராப்ஜி டாடா
அப்பா கண்ட நான்கு கனவுகளில் தாஜ் ஹோட்டல் தவிர மற்றவைகளை நிறைவேற்றியவர் தொராப்ஜி தான். இந்தியாவில் நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஹைட்ரோ எலெக்ட்ரிசிட்டிக்கு 1911-ல் தனி நிறுவனம் அமைத்து கொபோலி (Khopoli) பகுதியில் திட்டத்தை செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பிவ்பூரி (Bhivpuri) மற்றும் பிஹ்ரா (Bhira) பகுதிகளிலும் திட்டங்களை வரிசையாகச் செயல்படுத்தி அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இரும்பை விரும்பு
ஒரு நாட்டின் பொருளாதார பிரதிபலிப்பாக இரும்பு உற்பத்தி இருந்தது. சரியாக 1907-ல் இரும்பு உற்பத்தியில் தலை இட்டது டாடா. இன்று உலகின் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனம் டாடா தான். அதோடு இன்னொரு வரலாற்று சுவாரஸ்யம் நியூ இண்டியா இன்ஷூரன்ஸ் கம்பெனியை நிறுவியவரும் டாடா தான். தன்னால் முடிந்த வரை டாடா வை வளர்த்துக் கொடுத்தார். இவர் பதவிக் காலம் முடிந்த நேரத்தில் (1932) இந்தியாவின் ஹோட்டல் துறையில் தனியார் முதலிடம், இன்ஷூரன்ஸ் துறையில் முதலிடம், இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு நிறுவனம் என டாடா அடுத்த தளத்தில் இருந்தது.
Nowroji Saklatwala
ஜாம்செட்ஜியின் சகோதரர் வழி சொந்தத்தில் வந்தவர். 1899-ல் சாதாரண க்ளார்காக டாடா குழுமத்தில் சேர்ந்து, தலைவர் வரை உயர்ந்தவர். இவர் காலத்தில் டாடா குழுமம் பெரிய வளர்ச்சி காணவில்லை என குறை கூறுபவர்கள் உண்டு. ஆனால் இவர் 1932 - 1938 காலம் வரை டாடா நிறுவனத்தை உலக பொருளாதார மந்த நிலையில் சிறப்பாக நிவகித்தவர் என்பதை மறந்துவிடுகிறார்கள். 1929 அமெரிக்க பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் எல்லாம் முடிவதற்குள் இறந்துவிட்டார்.
அசுர வளர்ச்சி
டாடா என்றால் ஜே ஆர் டி டாடா என்கிற ரேஞ்சுக்கு இந்திய தொழிற் துறைகளை இரட்டிப்பு ஆக்கியவர். டாடா குழுமத்தின் தலைவராக நீண்ட காலம் பதவியில் இருந்தவர். 1938 - 1991 வரை 53 ஆண்டுகள் டாடாவை அடுத்த லெவலுக்கு கொண்டு வந்தவர். 1936 பிரெஞ்சுக் குடிமகன். இந்தியாவின் சிவில் ஏவியேஷனின் தந்தை என அழைக்கப்படுபவர். 1932-ல் இந்தியாவில் விமானங்களை இறக்கி வித்தை காட்டியவர். 1932-ல் டாடா ஏவியேஷன் சர்வீஸாக இருந்த நிறுவனத்தை தான் இன்று ஏர் இந்தியா வைத்திருக்கிறார்கள்.
நேருவை எதிர்த்து வழக்கு
1953 காலங்களில் இந்தியாவின் ஒரே விமான நிறுவனத்தை அரசுடைமை ஆக்க வந்த போது தன்னால் முடிந்த வரை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார். ஆனால் அரசுக்குத் தான் நீதிமன்றம் சாதகமாக தீர்பளித்தது. அதோடு அன்றைய தேதியில் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் எல்லாம் கொடுக்க முடியாது, நீங்கள் கேட்பது போல எல்லா பேப்பர்களையும் கொண்டு வந்திருக்கிறோம் என கெத்து காடியவர். அதனாலேயே ஜே ஆர் டி டாடா இந்தியாவின் நட்சத்திர பிசினஸ்மேன்களில் ஒருவராக இன்று வரை ஜொலிக்கிறார்.
கால் பதித்தல்
இரும்பு, பொறியியல், மின்சாரம், ரசாயனம், ஹோட்டல்கள், ப்யாணம் என இந்தியாவின் பல்வேறு துறைகளில் டாடாவை முன்னெடுத்துச் சென்றவர். இவர் தலைமையில் தான் டாடா குழுமம் 14 நிறுவனங்களில் இருந்து 95 நிறுவனங்களாக அதிகரித்தது. சொத்துக்களும் 100 மில்லியன் டாலரின் இருந்து 5 பில்லியன் டாலராக அதிகரித்தது. இன்ரு கொடி கட்டிப் பறக்கும் Titan, TCS, Tata motors எல்லாமே இவர் காலத்தில் தொடங்கியது தான்.
கேன்சர் இன்ஸ்டிடியூட்
இவர் தலைமையில் தான் மும்பையில் 1941-ல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிறுவப்பட்டது. 1945-ல் Tata Institute of Fundamental Research (TIFR), 1956-ல் தில்லியில் இருக்கும் NCAER - National council of Applied Economic Research-ஐ நிறுவியவர்.
ஏழைத் தோழன்
இந்தியாவில் எட்டு மணி நேர வேலை, தொழில் விபத்துக்களில் உயிர் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களூக்கு ஒரு பெரிய உதவித் தொகை, இலவச மருத்துவ வசதிகள், எதிர்கால ஓய்வு நிதி என திட்டமிட்டு தன் நிறுவனத்தில் அமல்படுத்தியவர். இன்று இவைகள் எல்லாமே இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. ஒரு பணியாளர் வீட்டில் இருந்து கிளம்புவதில் இருந்து அவர் மீண்டும் வீடு போய் சேரும் வரையான நேரம் முழுவதுமே அவர் பணியில் இருந்ததாகத் தான் அர்த்தம். ஆக வழியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நிறுவனம் அவர்களுக்கான உதவித் தொகையை வழங்கும் எனச் சொல்ல்லி தன் நிறுவன ஊழியர்களுக்குக் கொடுத்தவர். ஒரு கட்டத்தில் இந்த போக்குவரத்து நேரத்துக்கும் கூலியைச் சேர்த்துக் கொடுத்து தன் லாபத்தைக் குறைத்துக் கொண்டார்.
உலகமே பாராட்டு
ஜாம்செட்பூரைச் சுற்றிப் பார்த்து அதன் சுகாதாரம், வாழ்கை தரம், ஊழியர்கள் நடத்தப்படும் விதம், ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் + மற்ற வசதிகள் என எல்லாவற்றையும் கணக்கிட்ட பின் ஐநாவின்Global compact city ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. அத்தனை பெருமையும் நம் ஜே ஆர் டியையே சேரும். இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல இவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்கி கெளரவித்தது. இவர் இறந்த போது இந்திய பாராளுமன்ற ஒத்தி வைக்கப்பட்டது.
ரத்தன் டாடா
டாடா குழுமத்தின் தத்தெடுக்கப்பட்டவரின் பரம்பரை இங்கிருந்து தான் தொடங்குகிறது. ஆம் ரத்தன்ஜி என்பவரால் தத்தெடுக்கப்பட்ட நவால் என்பவர் தான் நவால் டாடா ஆகிறார். நவால் டாட்டாவின் மகன் தான் நம் ரத்தன் டாடா. நவால் டாடா தன்னை தத்தெடுத்த தந்தைக்கு நன்றி சொல்லும் விதத்தில் தான் தன் மகனுக்கு ரத்தன் எனப் பெயர் வைத்தாராம்.
1991-ல்
1991-ல் டாடா குழுமத்தின் சூப்பர் ஸ்டார் ஜே ஆர் டி டாடா ஓய்வு பெற்ற பின் ரத்தன் டாடா தலைவராக பொறுப்பேற்றார். டாடா நிறுவனங்களில் 10 வருடங்களுக்கு மேல் ஒரே நிறுவனத்தில் சோம்பலாக இருந்த உயர் அதிகாரிகளை வடிகட்டி இளைஞர்களுக்கு வழிவிட்டார். அனைத்து டாடா குழும நிறுவனங்களின் லாபத்தில் ஒரு பகுதியை தான தர்மங்களுக்கு ஒதுக்கச் சொல்லி ஸ்ட்ரிக் ஆர்டர் போட்டவர் நம் ரத்தன் தான். இவர் காலத்தில் தான் டாடா மிச்சம் மீதி விட்டு வைத்திருந்த அனைத்து துறைகளீலும் விரிவாக்கம் செய்தார்கள்.
Salt to Software
Salt to software என்பதை டாடாவின் பிசினஸுக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ரத்தன் டாடா காலத்தில் டாடா குழும நிறுவனங்களின் வருவாய் (Revenue) 40 மடங்கு அதிகரித்தது. நிகர லாபமோ (Net Profit) 50 மடங்கு அதிகரித்தது. இவர் காலத்தில் தான் ஜாகுவார் லேண்ட் ரோவரை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. கோரஸ் ஸ்டீலை டாடா ஸ்டீல் வாங்கியது. இவர் காலத்தில் தான் டாடாவை ஒரு பெரிய இந்திய நிறுவனம் என்கிற பெயரில் இருந்து பெரிய சர்வதேச நிறுவனமாக உலகம் முழுக்க வியாபாரத்தைப் பரப்பினார். இன்ரு டாடா குழுமத்துக்கு வரும் மொத்த வருவாயில் 65% வெளிநாடுகளில் இருந்து வருகிறது.
2019-ல்
ரத்தன் டாடாவுக்குப் பிறகு சைரஸ் மிஸ்த்திரி பதவி ஏற்று நடந்த பிரச்னைகள் எல்லாம் நாம் அறிந்ததே. சைரஸ் மிஸ்த்திரியின் பிரச்னைக்குப் பின் இப்போது நடராஜன் சந்திரசேகரன் தலைமையில் டாடா செயல்படுகிறது. நடராஜன் சந்திரசேகரன் பதவிக்கு வந்த பின் கொண்டு வரும் மிகப் பெரிய முடிவு இந்த 10 நிறுவன குழுக்கள்.
ஆக இனி டாடா நிறுவனம் வளருமா..? 100 நிறுவனங்கள் 10 நிறுவன குழுக்கலாக மாறியது நல்லதா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.