வரும் ஏப்ரல் முதல் மே மாதங்கள் வரை இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
அடுத்த சில நாட்களில் அல்லது வாரங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துவிடுவார்கள்.
இந்த தேதியே இப்போது நரேந்திர மோடியின் கைப்பிடிக்குள் சிக்கித் தவிப்பதாக காங்கிரஸின் அகமது படேல் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். சரி பெட்ரோல் விலைப் பிரச்னைக்கு வருவோம்.
தேர்தல் பிரசாரம்
தேர்தல் நேரத்தில் தான் ஐந்து வருடங்களுக்கு முன் வந்த பாதைகளில் தங்கள் சொகுசு கார்களில் அல்லது எளிமையாக தோற்றம் தரக் கூடிய இருசக்கர வாகனங்களில் வந்து ஓட்டுக்களைப் போடச் சொல்வார்கள்.
தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்
தலைவர்கள் மட்டுமே தங்கள் இடங்களில் இருந்து மக்களைச் சந்திக்க வருவார்கள் என குறைத்துக் கணக்கிட வேண்டாம். பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு தலைவனை ஆதரிக்க, அவரை எதிர்த்துப் பேச, அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள என பல்வேறு நபர்கள் தேர்தலை மட்டுமே காரணமாக வைத்துக் கொண்டு அதிகம் சாலை வழியாக பயணிப்பார்கள்.
வாகனங்கள்
ஏற்கனவே சொன்னது போல் வரும் தலைவர் எரிபொருள் சிக்கனமான வாகனங்களைத் தேர்வு செய்யமாட்டார்கள். முழு சொகுசு வாகனங்களாக உள்ளவைகளையே தேர்வு செய்வார்கள். டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா எக்ஸ் யூ வி 500, ஃபோர்ட் எண்டீவர், டொயோட்டா ஃபார்ட்யூனர், வோல்வோ எஸ்யூவிக்கள் போன்றவைகளைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதோடு தேர்தல் பிரசார வாகனங்களுக்கான எரிபொருட்கள் வேறு.
அரசு வாகனங்கள்
போலீஸ், மத்திய ரிசர்வ் படையினர், துணை ராணுவத்தினர் என பல பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெயர வேண்டி இருக்கும். அதோடு தேர்தல் கருவிகள், இயந்திரங்கள், தஸ்தாவேஜ்கள் என எல்லாவற்றையும் போக்குவரத்து செய்ய வேண்டி இருக்கிறது. இத்தனையையும் செய்து முடிக்க அரசும் ஒரு பெரிய கணிசமான அளவு பெட்ரோல் மற்றும் டீசலைப் பயன்படுத்தும் தானே.
பெட்ரோல் செலவுகள்
இப்படி பலரும் தேர்தலைக் காரணம் காட்டி அதிகம் நில பரப்புகளில் வாகனங்களில் பயணிக்க இருப்பதால், ஒரு நாளுக்கு இந்தியாவுக்கு 75,000 முதல் 1,00,000 பேரல் கச்சா எண்ணெய் கூடுதலாக செலவாகும். இப்போது இந்தியா நாள் ஒன்றுக்கு சுமார் 4.5 லட்சம் பேரல் முதல் 4.9 லட்சம் பேரல் வரை கச்சா எண்ணெய்யை சுத்தீகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக விற்கிறது. இனி இந்த 75,000 முதல் 1,00,000 பேரல்களையும் கூடுதலாக சுத்தீகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக விற்பனை செய்ய வேண்டி இருக்கும்.
பராமரிப்புகள்
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான கால கட்டங்களில் தான் பொதுவாக எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் பராமரிப்புக்காக மூடுவார்களாம்.
விலை எகிறும்
இந்த நேரத்தில் பராமரிப்பில் ஈடுபடுவதால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான டிமாண்ட் இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும். அதனால் தொடர்ந்து தேர்தல் முடியும் வரை விலை ஏகிறும் எனச் சொல்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த வெங் இன் சின் (Weng Inn Chin).
கேஸ் சப்ளை
தேர்தல் நேரத்தில் பாஜகவின் திட்டங்களான உஜ்வாலா திட்டத்தைச் சொல்லி ஓட்டு வாங்குவதற்காக, சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் நிரப்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆக கேஸ் விலையும் தேர்தல் வரை கட்டுப்பாடாக இருப்பது போல இருந்தாலும், தேர்தலுக்குப் பின் தொடர்ந்து விலை அதிகரிக்கலாம் எனவும் சொல்கிறார்.
நிறுவனங்களின் லாபம்
கச்சா எண்ணெய்யை பெட்ரோல் மற்றும் டீசலாக சுத்தீகரிப்பு செய்து கிடைக்கும் லாபம் சுமார் 25 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறதாம். இந்த நேரத்தில் கூட லாபம் பார்க்காமல், எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களின் பராமரிப்பு காலத்தை ஒதுக்கி இருக்கிறார்களாம். எனவே இந்தியாவுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. அதையும் மீறி பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் பெட்ரோல் மற்றும் டீசலை அப்படியே வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாம் சுத்தீகரிப்பு செய்து விற்பதை விட 15 - 20 சதவிகிதம் விலை அதிகமாகத் தான் இருக்கும் என்கிறார் சின்.
நம் தலைவிதி
எனவே தேவைக்கு தகுந்த சப்ளை இல்லாமல் திணறும் போது விலை கூடியே தீரும். நம் பணத்தில், நம்மிடம் பிரச்சாரம் செய்ய வரும் அரசியல் வாதிகள் என்ன விலை சொன்னாலும் வாங்கிவிடுவார்கள். லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கூட, ரத்தக் கொதிப்பை வெளிப்படுத்தும் நம் போன்ற ஆட்கள் விலை ஏற்றத்தை முழுங்க முடியாமல் புகைந்து கொண்டிருப்போம். அரசியல்வாதிகள் ஏசி பிரசார வாகனத்தில் நமக்கு டாடா காட்டிக் கொண்டிருப்பார்கள்.