பெங்களூரு: விமானங்களை குத்தகைக்கு எடுத்தது, பைலட்களுக்கு சம்பள பாக்கி பிரச்சனைகளால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மேலும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு ஒடு தளத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ், நாட்டிலேயே இரண்டாவது பெரிய தனியார் விமான நிறுவனம். வெள்ளி விழாவையும் கொண்டாடி முடித்திருக்கிறது.1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 1993 மே 5ஆம் தேதி விமான சேவையைத் தொடங்கியது. நான்கு விமானங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இன்று 124 விமானங்கள் உள்ளன. இவற்றில் சொந்தமாக உள்ள விமானங்களின் எண்ணிக்கை 16. இந்தியாவில் 47 நகரங்களுக்கிடையிலும், 20 சர்வதேச வழித்தடங்களில் 15 நாடுகளிடையே விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ். இந்நிறுவனத்திடம் 86 போயிங் 737 ரக விமானங்களும், போயிங் 777, ஏர்பஸ் ஏ 330, ஏடிஆர் 72 ரக விமானங்களும் உள்ளன. 108 விமானங்கள் குத்தகை அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
நிறுவனத்தில் தற்போது 16 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். நிறுவனத்தில் 51 சதவிகித பங்குகள் நரேஷ் கோயல் வசமும், எதியாட் ஏர்வேஸ் வசம் 24 சதவிகித பங்குகளும், பொதுமக்களிடம் 25 சதவிகித பங்குகளும் உள்ளன. இன்று இதன் விமானங்கள் அனைத்தும் குத்தகை பாக்கிக்காகவும், ஊழியர்களின் சம்பளப் பிரச்சனைகளுக்காவும் தினந்தோறும் தரையிறக்கப்படுகின்றன. ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊழியர்களுக்கு சம்பள பாக்கி. இருந்தாலும் ஏன் விமானங்களை இயக்க முடியவில்லை என்ற காரணத்தையும் இந்நிறுவனம் தெளிவாக சொல்லவில்லை.
நஷ்டத்தில் ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. விமானத் துறையில் நிலவும் கடும் போட்டி, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை, கச்சா எண்ணெய் விலையேற்றம் இதனால் நிறுவனத்தின் நிர்வாக செலவுகள் அதிகரித்தன. வங்கிகளிடம் பெறப்பட்ட கடனுக்குரிய வட்டியை திரும்ப செலுத்த முடியாத நிலை, குத்தகை மூலம் பெறப்பட்ட விமானங்களுக்குரிய குத்தகைத் தொகையை செலுத்த முடியாத நிலை உருவானது,.
ஜெட் ஏர்வேஸ் பங்குகள் கடும் சரிவு
கடந்த ஜனவரி மத்தியில் ஜெட் ஏர்வேஸின் பங்குகள் ரூ.295க்கு விற்பனை ஆனது. ஆனால், இரண்டு மாதங்களில் இந்தப் பங்கின் விலை 17 சதவிகிதம் சரிந்து, இன்று இதன் விலை ரூ.242க்கு விற்பனையாகிக் கொண்டு உள்ளது. வங்கிகளுக்கு திரும்ப செலுத்தவேண்டிய கடன் பாக்கியையும் செலுத்த முடியாத நிலை ஒரு பக்கம். கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைப் போலவே இதுவும் மூடப்படுமோ என்று திக் திக் மனநிலையுடனே நாள்களைக் கடத்தும் ஊழியர்கள். இதன் காரணமாகவே இந்தப் பங்கின் விலை இந்த அளவுக்கு சரிய காரணம்.
அடம்பிடிக்கும் நரேஷ் கோயல்
பங்குச் சந்தையில் மடமடவென சரிந்து வரும் ஜெட் ஏர்வேஸின் பங்கு விலை வீழ்ச்சியால் பங்குதாரர்கள் ஒருபுறம் புலம்பிக்கொண்டு இருக்க, வந்தா ராஜாவாதான் வருவேன் என்பது போல, நிறுவனராகத்தான் தொடர்வேன் என்று பிடிவாதம் காட்டும் நிறுவனர் நரேஷ் கோயல் மறுபுறம் அடம் பிடிக்க, ஜெட் ஏர்வேஸின் சமீபகால செயல்பாடுகள் அனைத்தும் நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன.
விமானங்கள் தரையிறக்கம்
ஜெட் ஏர்வேஸ் விமானங்களை குத்தகைக்கு விட்டுள்ள ஃப்ளை லீசிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான காம் பேரிங்டன், நாங்கள் விமானங்களை பறக்க விடாமல் தரையிறக்கி கட்டுப்படுத்தி வைத்திருப்பது என்னவோ உண்மைதான். அதே நேரம் குத்தகை ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கவில்லை. மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம், நடப்பு மார்ச் மாத இறுதி வரையிலும் நாங்கள் காத்திருப்போம். இல்லை என்றால் ஜெட் ஏர்வேஸின் விமானங்களை வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிடுவோம், என்றார்.
காம் பேரிங்டன் மேலும் கூறுகையில், நாங்கள் ஜெட் ஏர்வேஸூக்கு 3 போயிங் 737-800 ரக விமானங்களை குத்தகைக்கு விட்டுள்ளோம். ஆனால், இதிலிருந்து வெறும் 3 சதவிகித குத்தகை வருமானமே கிடைக்கின்றது என்று விரக்தியுடன் கூறினார்
கடன் பிரச்சனையிலிருந்து தப்புமா ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிலான கூட்டமைப்பின் மூலம் வரைவோலை தயார் செய்தது. ஆனால், இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் அடம்பிடிப்பதால் கடன் மறுசீரமைப்பு பணி பாதியில் நிற்கிறது. ஒருவேளை பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளுக்கு கடன் கிடைத்தால், அதன் மூலம் சுமார் ரூ.84300 கோடி கடன் பிரச்சனை தீரும். இல்லை என்றால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஈஸ்ட் வெஸ்ட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படக்கூடும்.