டெல்லி: நீங்கள் படித்தது சரி தான் புல்வாமாவில் வீர மரணமடைந்த மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கடைசியாக மாத சம்பளம் எவ்வளவு வாங்கினார்களோ அதில் 75 சதவிகிதத்தை அவர்கள் குடும்பத்துக்கு ஓய்வு ஊதியமாக கொடுக்க இருக்கிறது மத்திய அரசு.
கடைசி மாத சம்பளத்தில் வாங்கிய அடிப்படை ஊதியம் (Basic Pay) + தினப் படிக் காசு (Dearness Allowance) இந்த இரண்டையும் கூட்டி வரும் தொகையைத் தான் ஓய்வு ஊதியமாக கொடுக்கப் போகிறார்களாம். இந்த இரண்டையும் கூட்டினால் ஏறத்தாழ வீரர்களின் சம்பளத்தில் 75% வந்துவிடுமாம்.
இறந்த வீரரின் மனைவி உயிருடன் இருக்கும் வரை இந்த ஓய்வுத் தொகை கொடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்படி மனைவிக்கு ஓய்வு ஊதியம் வாங்க விருப்பமில்லாதவர்களுக்கு சொந்த பந்தங்களில் மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் சேர விருப்பமிருந்தால், அவர்களுக்கு வேலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
அப்படி ஒருவேளை இறந்த வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலையில் சேர விருப்பமிருந்தால் மாநில அரசுகள் வேலைகளைக் கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம். ஆக எப்படியும் இறந்த வீரர்களின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என யோசித்து முடிவு செய்திருக்கிறார்களாம்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, உயிர் தியாகம் செய்த மத்திய ரிசர்வ் போலிஸ் படையினருக்கு பல்வேறு அரசு திட்டங்களில் இருந்தும், அரசு நிதியில் இருந்தும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறதாம்.