பெய்ஜிங்: நேற்று எத்தியோப்பியாவில் இருந்து பறக்கத் தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் விமானக் கோளாறு காரணமாக் கட்டுப்பாடு இழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் விமான ஓட்டிகள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து வெடித்துச் சிதறி 189 பேர் பலியானார்கள்.
இரண்டு முறையும் விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் சிக்கியது கவனிக்கத்தக்கது. எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது. இது வெறும் விபத்துக்குள்ளான நாடுகள் மட்டும் அல்ல. இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை கட்டமைப்பு மற்ரும் தொழில்நுட்பத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை சீன ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து போயிங் நிறுவனத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது சீனா.
சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகார பூர்வமாகவே உத்தரவிட்டுள்ளார்களாம். போயிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் எப்ஏஏவிடம் பேசி, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் தான் விமானத்தை மீண்டும் சீன ஏர்லைன் நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் எனவும் கறாராக தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம்.