இப்போது தான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் மேகம் கொஞ்சம் கலைந்திருக்குறது. ஆனால் அதற்குள் போரைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறது மத்திய அரசு.
ரா (RAW), ஐபி (Intelligence Bureau) போன்ற அமைப்புகள் தங்கள் உளவு அறிக்கைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மத்தியில் போர் எழுந்தால் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறார்கள்.
அப்போது தான் பாகிஸ்தானை தைரியமாக எதிர் கொள்ள முடியும், இந்தியாவின் ராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் சுமூகமாக இருக்கும் என மத்திய அரசை அழுத்தமாக எச்சரித்திருக்கிறார்கள் உளவுத் துறையினர்.
எச்சரிக்கை ஏன்
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் தேவைகளை அதிக அளவில் பூர்த்தி செய்வது ஈராக், ஈரான், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் தான். இந்த நாடுகளில் இருந்து கப்பல் வழியாகத் தான் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்கின்றன. சவுதி ஈரான், ஈராக் என இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் அனைத்து நாடுகளும் பெர்ஷிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளைத் தாண்டி பாகிஸ்தானுக்கு அருகில் செல்லும் சர்வதேச கடல் வழிப் பாதையின் வழியாகத் தான் இந்தியாவுக்கு வரும்.
எதிர்க்கலாம்
ஆக, பாகிஸ்தான் வழியாகவோ அல்லது பெர்ஷிய மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளிலோ பாகிஸ்தான் தன் இஸ்லாமிய நட்பு நாடுகளோடு அல்லது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளோடு தாக்குதல் நடத்தினால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் வரத்து முற்றிலும் தடை படும்.
போரில் தோல்வி
கச்சா எண்ணெய் இல்லை என்றால் பீரங்கிகள், போர் விமானங்கள், போர் கப்பல்கள், ராணுவ வீரர்களுக்கான தரை வழிப் போக்குவரத்து என எல்லாமே பாதிக்கப்படும். வெற்றி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு சாதகமாகிவிடும். எனவே தான் இந்தியா போருக்கு போவதென்றால் குறைந்தது 30 நாட்களுக்கான கச்சா எண்ணெய்யை கையில் வைத்துக் கொண்டு தான் போக வேண்டும் என்கிறது.
எத்தனை நாட்களுக்கு வரும்
இப்போதைக்கு இந்தியாவிடம் 5.33 மில்லியன் டன் வரையான கச்சா எண்ணய்யை மங்களூரு, விசாகப்பட்டினம், படூர் (உடுப்பி, கர்நாடகா) ஆகிய இடங்களில் சேமித்து வைக்க முடியும். இந்த 5.3 மில்லியன் மெட்ரிக் டன்னைக் கொண்டு, இந்தியாவின் எரிபொருள் தேவையை சுமார் 10 நாட்களுக்கு பூர்த்தி செய்யலாம். இந்த 3 கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை Indian Strategic Petroleum Reserve Program என்கிறார்கள்.
இன்னும் 10 நாட்களுக்கு
இந்த Strategic Petroleum Reserve (India) திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க திட்டமிடுகிறது இந்தியா. அதற்கு தான் சவுதி அரசோடும் ராஜதந்திரமாக பேசி வருகிறது. புதிய திட்டப்படி 6.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை சேமிக்கும் அளவுக்கு பெரிய சேமிப்பு கிடங்குகளை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த புதிய 6.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யைக் கொண்டு சுமார் 12 நாட்களுக்கு, இந்தியாவுக்குத் தேவையான எரிபொருளை உற்பத்தி செய்ய முடியுமாம்.
சவுதி முதலீடு வருமா..?
சவுதி அரேபியாவின் எரிசக்தித் துறை அமைச்சர் கலித் அல் ஃபலிஹ் (Khalid al falih) உடன் இந்தியாவின் எண்ணெய் வளத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கடந்த சனிக்கிழமை தில்லியில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் (கர்நாடகா, கேரளா பகுதிகளில்) 44 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் சுத்தீகரிப்பு திட்டங்களைப் பற்றி பேசி இருக்கிறார்களாம். இந்த திட்டத்தோடு தான் இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் கட்டிக் கொடுக்கச் சொல்கிறார்கள். சவுதி முன் மொழிவது சுத்தீகரிப்பு ஆலையைத் தானாம். ஆனால் இந்தியா முன் மொழிவது சேமிப்பு கிடங்குகளைத் தானாம்.
நிலையற்ற விலை
இந்தியாவின் 4 / 5 பங்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து தான் பூர்த்தி செய்து கொள்கிறது. கச்சா எண்ணெய்யோ மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அப்பிரிக்காவில் தான் அதிகம் கிடைக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் அப்பிரிக்காவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையால் எண்ணெய் விலை நிலை பெறாமல் இருக்கிறது. இந்த பிரச்னையில் இருந்து இந்தியாவின் எரிபொருள் விலையைக் காக்கவும் இந்த நடவடிக்கைகள் பயன்படும் எனப்தால் தான் சவுதியை விடாமல் ராஜதந்திரமாக விரட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
சவுதியில் லீஸ்
ஏற்கனவே சேமிப்பு கிடங்குகளில் பல டேங்குகளை சவுதி அரேபியாவின் அபுதாபி நேஷனல் ஆயில் கார்ப்பரேஷனுக்கு லீஸுக்கு விட்டு இருக்கிறது இந்தியா. சவுதி அரேபியாவின் புதிய சுத்தீகரிப்பு ஆலைகளுக்கு அருகிலேயே இந்த புதிய இரண்டு சேமிப்பு கிடங்குகளையும் அவர்கள் காசிலேயே அமைக்கத் தான் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுகிறது.
22 நாட்கள்
ஒருவேளை சவுதி அரேபியா இந்திய அரசின் தேவைக்கு செவி சாய்த்து, புதிய எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலையோடு இரண்டு பெரிய கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் அமைக்க ஒப்புக் கொண்டால் அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் கையில் 22 நாட்களுக்கான தேவையான கச்சா எண்ணெய் தயாராக இருக்கும்.
சவுதி உறவு
இந்தியாவின் கோரிக்கையை சவுதியும் எளிதில் மறுத்துவிட முடியாது. காரணம் சவுதி அரேபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் சுமார் 36 சதவிகிதத்தை இறக்குமதி செய்வது இந்தியா தான். எனவே சவுதியும் தன் வர்த்தக உறவோடு, நல்ல நட்பையும், வியாபாரத்தையும் இழக்க வேண்டாம் என யோசித்து வருகிறதாம்.