நியூ யார்க்: கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 10, 2019 அன்று காலை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒன்று எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபிக்கு புறப்பட்டது.
ET 308 என்கிற எண் தாங்கிய அந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், பறக்கத் தொடங்கி ஆறாவது நிமிடத்தில் இருந்தே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக பறந்து விபத்தில் வெடித்துச் சிதறியது. 157 பேர் மொத்தமாக இறந்தார்கள்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் 2018 அக்டோபர் 29-ம் தேதி அன்று சியோகர்னோ ஹத்தா சர்வதேச விமான நிலையத்தில் (இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தா) இருந்து புறப்பட்டு இந்தோனேசியாவின் பங்கல் பினாஞ் நகருக்குச் செல்ல வேண்டிய Lion Air Flight 610 என்கிற விமானமும் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி 189 பேர் இறந்தார்கள்.
போயிங்க் 737 மேக்ஸ்
Air lion flight 610 மற்றும் ET 308 ஆகிய இரண்டு விமானங்களுமே போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தான். எனவே சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், ஏரோ மெக்ஸிகோ, கேமன் ஏர்வேஸ், காமேர் ஏர்வேஸ், ஏரோலைன் அர்ஜெண்டைன் போன்ற நாடுகளும் விமான நிறுவனங்களும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களைத் தடை செய்திருக்கிறார்கள்.
விபத்துக் காரணம்
stall-prevention system என ஒரு மென் பொருளை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் பொருத்தி இருக்கிறார்கள். இந்த மென் பொருள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அதிரடியாக, மிக வேகமாக, மேல் எழும்புவதைத் தடுத்து நிலையாக பறக்க வசதியாக வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த மென் பொருள் தான் air lion flight 610 & ET 308 விமான விபத்துக்களூக்கு காரணமாக இருக்கலாம் என அழுத்தமாக சந்தேகிக்கிறார்களாம் விமான விபத்து நிபுணர்கள்.
சந்தேகத்துக்கு காரணம்
இரண்டு விமானங்களை ஓட்டியது அனுபவமுள்ள விமானிகள் தான். ஆனாலும் அவர்களால் விமானத்தை மேல் எழும்பச் செய்ய முடியவில்லை என்கிற பேச்சுக்களை காக்பிட் ரெகார்டர்களில் இருந்து கேட்க முடிந்ததாம். ஆக விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே இறங்கும் போது அதை உடனடியாக மேலே எழுப்ப முயற்சித்த விமானிகளின் முயற்சியை மென்பொருள் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து கீழ் நோக்கி விமானத்தை தள்ளி இருக்கிறதாம்.
சோதனை
அமெரிக்காவின் Federal Aviation Administration தான் போயிங் ரக விமானங்களை பரிசோதித்து சான்றலித்து வருகிறார்கள். இப்போது மீண்டும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை சோதனை செய்து மறு சான்றளிக்கப் போகிறார்களாம்.
போயிங்குக்கு நஷ்டம்
நியூயார்க் பங்குச் சதையில் பட்டியலிடப் பட்டிருக்கும் போயிங் நிறுவன பங்குகளின் விலை வெள்ளிக்கிழமை மாலை 422 டாலராக வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் திங்கள் காலை முதலே இந்த நிறுவன பங்குகள் 371 டாலருக்கு வர்த்தகமாகத் தொடங்கின. நேற்று மாலை 399 டாலருக்கு கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.
வியாபாரம்
மொத்த போயிங் ரக விமானங்களிலேயே நிறுவனத்துக்கு அதிக லாபம் கொண்டு வருவது இந்த 737 மேக்ஸ் 8 ரக விமானம் தான். போயிங்கின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் இந்த ஒரு ரக விமானத்தை நம்பித் தான் இருக்கிறது. இதுவரை 350-க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி கொடுத்திருக்கிறார்கள். இன்னும் 5000 விமானங்களை ஆர்டர் வேறு எடுத்திருக்கிறார்களாம்.
எதிர்கால வியாபாரம்
போயிங் நிறுவனத்தின் கையிலிருக்கும் மொத்த ஆர்டர்களில் 65 சதவிகித ஆர்டர்கள் இந்த போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் மட்டும் தான். ஆக இந்த விமானம் சார்ந்த நெகட்டிவ் செய்திகள், தங்கள் எதிர்கால வியாபாரத்தை முழுமையாக பாதிக்கும் என பயந்து போய் இருக்கிறது போயிங்.
737-ஐ நம்பி இருக்கும் போயிங்
போயிங் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2018-ம் ஆண்டில் 101 பில்லியன் டாலர். அதில் 40 சதவிகித வருவாய் இந்த ஒரே ஒரு ரக விமானத்தில் இருந்து தான் வந்தது. இதை இந்திய ரூபாயில் மதிப்பிட்டால் போயிங் நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் 7.10 லட்சம் கோடி ரூபாய். அதில் 40% என்பது சுமார் 2.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஒரு வருடம் மட்டும் இல்லை. அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஒரு பெரிய அளவிலான வருவாய்க்கு காரணமாக இருந்திருக்கிறது.
பதற்றம்
இப்படி தன் நிறுவனத்தின் பெரிய வருவாய் சோர்ஸிலேயே கை வைத்துவிட்டார்களே என கவலையில் ஆழ்ந்திருக்கிறது போயிங். இருப்பினும் தன் எதிர்கால ஆர்டர்கள் பாதிக்காத வகையில், தன் பெயர் கெட்டு விடாத வகையில் எதையாவது செய்து தன் வியாபாரத்தை, குறிப்பாக போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை மீண்டும் விற்க அமெரிக்காவின் Federal Aviation Administration இடம் சான்று வாங்க தவித்துக் கொண்டிருக்கிறது. சான்றுகள் எல்லாம் வாங்கினால் கூட சீனா போன்ற நாடுகள் தன் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை மீண்டும் பயன்படுத்துவார்களா..? என சந்தேகமாகவே பார்க்கிறது. சீனாவில் மட்டும் நேற்றைய கணக்குப் படி சுமார் 96 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் இந்த கூடுதல் கவலையாம். எதிர்கால ஆர்டர்களில் கூட சீனாவுக்கு ஒரு கணிசமான பங்கு இருப்பதாகவும் போயிங் அதிகாரிகள் சொல்கிறார்கள். இதை எல்லாம் மீறி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை வாடிக்கையாளர்களும், விமான நிறுவனங்களும் மறுக்கத் தொடங்கினால் போயிங் நிறுவனத்துக்கு 2.84 லட்சம் கோடி பிசினஸுக்கு கோவிந்தா தான்.