பிரிட்டன்: Europe Union என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மார்ச் 29, 2019ம் தேதி அன்று பிரிட்டன் வெளியேற உள்ளது.
பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இன்று பிரிட்டன் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இரண்டாவது முறையாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக 391 எம்.பி.களும், ஆதரவாக 242 எம்.பி.களும் வாக்களித்திருக்கிறார்கள்.
கொஞ்சம் வரலாறு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக, 2016 ஜூன் 23-ம் தேதி, பிரிட்டன் நாட்டு மக்களால் வாக்களிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வெளியேற்ற ஒப்பந்தம்
வாக்கெடுப்பு நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, வரும் 29ம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) உள்ளது. இந்த வெளியேற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், பிரிட்டன் அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் 2018ம் ஆண்டு நவம்பரில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அது தான் பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம்.
எதிரான வாக்குகள்
பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இதுகுறித்து கடந்த ஜனவரி 15, 2019ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்பிகளும், ஆதரவாக 202 எம்.பி.களும் வாக்களித்தனர்.
மாற்றம் தேவை
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் அந்நாட்டு மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டே இதற்கு காரணம். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் சிறுசிறு மாற்றங்களுடன், இன்று நாடாளுமன்ற கீழ் சபையில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார்.
என்ன மாற்றம் வேண்டும்
இந்த முறையும் வாக்கெடுப்பு தெரசா மேவுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது. இன்னும் பிரிட்டனுக்கு சாதகமான விஷயங்கள் நடக்க வேண்டும் என உறுப்பினர்கள் தெரசா மேவிடம் கேட்டிருக்கிறார்களாம். தெரசா மேவோ இன்னும் என்ன தான் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என ஓப்பனாகவே உறுப்பினர்களிடம் கேட்டு வருகிறார்களாம்.