டெல்லி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு இதுவரை பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் போடப்படவில்லையாம். இது மத்திய அரசின் டெலிகாம் நிறுவனம்.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தைடம் ஊழியர்களுக்கான சம்பளத்தை உடனடியாக கொடுக்குமாறு அமைச்சர் மனோஜ் சின்ஹாவிடம் ஊழியர்கள் சங்கம் முறையிட்டிருக்கிறதாம்.
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர் நஷ்டத்திலேயே தான் போய்க் கொண்டிருக்கிறது.
8000 கோடியா..?
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 8,000 கோடி ரூபாய். அதற்கு முந்தைய 2016 - 17 நிதியாண்டில் 4,786 கோடி ரூபாயில் இருந்து இவ்வளவு நஷ்டம் அதிகரித்திருக்கிறது.
சம்பளம் எங்கே..?
பிப்ரவரி மாத சம்பளம் மட்டும் அல்ல, இனி வரும் பல மாதங்களின் சம்பளம் நிச்சயமாக தாமதமாக வாய்ப்புகள் அதிகம் என பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள்.
சம்பளக் கணக்கு
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரும் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதம் ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகி விடுகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு என எல்லாவற்றையும் கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் எட்டு சதவிகிதம் கூடுதலாக ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவாகிறதாம்.
வருவாய் அதிகரிக்கவில்லை
ஊழியர்களுக்கு தானாகே ஊழிய உயர்வு, படிக் காசு உயர்வு நடக்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பதிலலியே என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி அதிகாரிகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கடன்
பிஎஸ்என்எல் மட்டுமல்ல எல்லா தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களும் தங்களுக்கான முதல் தொகையை வருவாயில் இருந்து பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கடன் வாங்கித் தான் நிறுவனத்தை நடத்துகிறார்கள். ஆக அது போல பிஎஸ்என்எல் நிறுவனமும் கடன் வாங்க முயற்சித்து வருகிறதாம். ஆனால் இதுவரை தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வரவில்லையாம்.
சம்பளம் எப்போது
காஷ்மீர், ஒடிஸா, கேரளா, டெல்லி போன்ற பகுதிகளில் வருவாய் வர வர கொஞ்சம் கொஞ்சமாக சம்பளங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களாம். இதே போல வருவாய் வர வர அனைத்து பிராந்திய ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் டெலிகாம் துறை அதிகாரிகள்.