அமெரிக்கா: எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.
இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.
இந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன் வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்து வருகிறது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜிண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மாற்றம் கொண்டு வருவோம்
இதனிடையே, போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதற்காக மென்பொருளில் மாற்றம் செய்யவிருப்பதாக போயிங் நிறுவனம் பதறிக் கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறது.
தொடரும் தடை
இப்படி உலக நாடுகள் பயந்து நடுங்கிக் கொண்டு, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க தடை விதித்துக் கொண்டிருக்கும் போது, "போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க எந்த ஒரு வலுவான ஆதாரமோ காரணமோ இல்லை" என அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு (Federal Aviation Administration) சொல்லி இருக்கிறது.
FAA தலைவர் பேட்டி
அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக தலைவர் டேனியல் எல்வெல் "தற்போது வரை நாங்கள் செய்த ஆய்வுகளின் படி, செயல்திறன் அமைப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, இந்த ரக விமானத்துக்கு பறக்க தடை விதிப்பதற்கு எந்த காரணமும் இல்லை." எனச் சொல்லி இருக்கிறார்
கிடைத்தால் சொல்கிறோம்
அதோடு "விபத்துக்குள்ளான எத்தியோப்பியா விமானம் 308 பற்றி எங்களின் ஆய்வுகளில், ஏதேனும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால், அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக தக்க நடவடிக்கைஎடுக்கும்" என தெரிவித்தார்.