வாஷிங்டன்: இந்தியர்களால் மறக்க முடியாத புல்வாமா தக்குதலைக் கண்டித்து பல்வேறுநாடுகளும், அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து விட்டன.
அந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சீனா தடை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
ஆனால் ஒரு முக்கியமான அமைப்பு மட்டும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. உண்மையில் பேச முடியாமல் தவிக்கிறது.
அந்த அமைப்பை பேச விடாமல் தடுப்பது நம் அண்டை நாடான சீனா. ஆம் சீனா தான் இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வரும் எந்த ஒரு கண்டன அறிக்கையையும் ஆதரிக்காமல் தடுத்து வருகிறது.
UN Security Council (UNSC)
புல்வாமா தாக்குதல் நடந்த அன்றைய தினமே இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஐநா பாதுகப்பு கவுன்சிலிடம் பேசி விட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்றது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் காஷ்மீரில் நடக்கும் இந்திய தரப்பு உயிரிழப்பை கண்டிக்க முன் வந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் முறை. அதிலும் குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கண்டன அறிக்கையில் "Jaish E Muhammad தீவிரவாத அமைப்பின் பெயரும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவித்து தீவிரவாதிகளை இந்திய நீதிமன்றங்களின் முன் கொண்டு வர வேண்டும்" என்கிற வார்த்தைகளையும் சேர்த்து அறிக்கை விடுமாறு கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா.
ஓகே சொன்ன ஐநா
பாதுகாப்பு கவுன்சிலும் இந்தியாவின் கோரிக்கைகளை முழுமையாக ஒப்புக் கொண்டது. இந்தியா கேட்பது போல பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை விட்டால் உலக நாடுகளிடம் இருந்து, இந்தியாவுக்கு தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான உதவிகள் நிறையக் கிடைக்கும். ஆயுதங்கள் தொடங்கி உளவுத் துறை அறிக்கைகள் வரை பல வசதிகளை இந்தியா செலவே செய்யாமல் அசால்டாக பெற முடியும்.
உதவிய அமெரிக்கா
அமெரிக்காவுக்கு என்ன தலை வலியோ இந்தியா புல்வாமா தாக்குதலுக்கான கண்டன அறிக்கை கோரிக்கையை சிரமேற் கொண்டு எல்லாவற்றையும் தயார் செய்தது. பிப்ரவரி 15-ம் தேதியே இந்த கண்டன அறிக்கையை வெளியிடக் காத்திருந்ததும் அமெரிக்காவின் வேகத்தால் தான்.
வாய்தா வாங்கும் சீனா
பொதுவாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒரு அறிக்கையோ, கண்டனமோ தெரிவிக்கிறது என்றால் அதில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்களும் சேர்ந்து கையொப்பமிட்டே வெளியிடுவார்கள். பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு சூட்டோடு சூடாக பிப்ரவரி 15-ம் தேதியே ஐநா பாதுகாப்பு கவுன்சில் தன் கண்டனத்தை வெளிப்படுத்தத் தயாரானது. 14 நாடுகளும் தயார் என்றது. ஒரு நாடு மட்டும் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டது. அது தான் சீனா..!
பாக் முயற்சி
இதற்கு மத்தியில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரையே நேரடியாக சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையும் தயார் செய்ய வேண்டாம் என பேச்சு வார்த்தை நடத்தியது. அதிலும் குறிப்பாக மசூத் ஆசார் பிரச்னை எழ வேண்டாம் எனவும் பேச்சு வார்த்தை நடத்தியவர் பாகிஸ்தானின் முக்கிய வெளியுறவு அதிகாரி மலிஹா லோதி (Maleeha Lodhi). ஆனால் பயன் இல்லை. இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின் தான் பாகிஸ்தான் இந்த விஷயத்தை நீர்த்துப் போகச் செய்ய சீனாவை நாடி இருக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் எந்த அளவுக்கு நட்பு நாடுகள் எனப்தைச் சொல்ல வேண்டுமா..? தவிர காஷ்மீர் மீதும் சீனாவுக்கு இருக்கும் ஆசையை நினைவாக்க பாகிஸ்தானை கொம்பு சீவி விட்டுக் கொண்டிருப்பதும் இந்த சீனா தானே..!
சீன கண்டன அறிக்கை
சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு புல்வாமா தாக்குதல் தொடர்பாக கொடுத்த கண்டன அறிக்கையில் ஒரு வார்த்தை கூட தீவிரவாதம் எனச் சொல்லப்படவில்லை. குறிப்பாக மசூத் அசார் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என சில இந்திய அதிகாரிகள் முனகி வருகிறார்கள். இத்தனை பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்த பின், அதுவும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற பின்னும் கூட சீனா தன் கண்டன அறிக்கையில் "தீவிரவாதம்" என்றோ "மசூத் அசார்" என்கிற ஒரு சொல்லைச் சேர்க்காமல் எப்படி அறிக்கை வெளியிடுகிறது என சீனா மீது வெறுப்பாகி இருக்கிறார்கள், இந்திய அதிகாரிகள்.
மீண்டும் ஒத்தி வைப்பு
இத்தனைப் பிரச்னைகள் நடந்த பின்னும் இதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையை ஏற்கவில்லை சீனா. மீண்டும் புதிய அறிக்கையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறது. இன்னும் இப்படி எத்தனை அறிக்கைகள் தயாரானாலும் அதை தன் விட்டோ அதிகாரத்தை வைத்துக் தடுத்துக் கொண்டே தான் இருக்குமோ..? எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
சீன தரப்பு
"சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் குழு ஆய்வில் பங்கு கொள்ளும்," என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தீர்வு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.
அமெரிக்கா தரப்பு
"மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி தெற் காசிய பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குலைப்பதாகவே இருக்கும்" என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு பொருந்தும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆக அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நிற்கின்ற போதும், சீனா பாகிஸ்தானோடு உறவில் தான் இருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் மசூத் அசார் என்கிற தீவிரவாதியைக் கூட தீவிரவாதி என சர்வதேச அரங்கில் சொல்லாததைப் பார்த்தால் "மசூத் அசார் தீவிரவாதியா என சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் கேட்கும் போலிருக்கிறதே..?" என இந்திய அதிகாரிகள் கடுப்பில் இருக்கிறார்கள்.