ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ போன்ற தனியார் விமான சேவை நிறுவனங்கள் தொடங்கி ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் என அரசு விமான சேவை நிறுவனங்கள் வரை இந்தியாவில் விமானங்களை இயக்க போதுமான பயணிகள் விமானத்தை இயக்கும் விமானிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த செய்தியை ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது CAPA என்கிற விமான ஆலோசனை அமைப்பு.
தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் விமானிகளுக்கு சரியான சம்பளம் கிடைக்காததாலும், கொடுக்கும் சம்பளத்தைக் கூட தாமதமாகக் கொடுப்பதாலும் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.
விமானிகளைப் பிடி
அப்படி வெளியேறும் விமானிகளை நேரடியாக சந்தித்துப் பேசி இண்டிகோவில் விமானியாகச் சேரச் சொல்கிறார்களாம். நல்ல சம்பளம், ஒழுங்காக நேரத்துக்கு சொன்ன சம்பளத்தைக் கொடுப்பது என கொஞ்சம் சரியாக நடந்து கொள்வதால் பல்வேறு விமானிகளும் இண்டிகோ பக்கம் திரும்பி இருக்கிறார்களாம்.
விமான சேவை ரத்து
சமீபத்தில் தான் இண்டிகோ ஒரே அடியாக 30 விமானப் பயணங்களை ரத்து செய்தார்கள். காரணம் போதுமான விமானிகள் இல்லாதது தான் அவர்கள் பிரச்னை. இப்போது ஜெட் ஏர்வேஸில் இருந்து வெளியேறும் விமானிகள் பிடித்து இன்னும் சிறப்பாக திட்டமிட்டு நிறைய வழித் தடங்களில் விமான சேவைகளை தொடங்கி இருக்கிறார்களாம்.
எத்தனை விமானிகள்
இந்தியாவில் மொத்தம் 7,963 பயணிகள் விமானங்களை ஓட்ட்ம் விமானிகள் மட்டுமே இருக்கிறார்களாம். இந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் கூடுதலாக 2,000 விமானிகள் தேவைப் படுகிறார்களாம்.
10 ஆண்டுகளில்
அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் அதிகரிக்க இருக்கும் விமானப் பயணங்கள், விமானப் பயணிகளின் எண்ணிக்கை, சரக்கு கையாளுதல் போன்றவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த கணிப்பில் படி அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் சுமார் 17,000 விமானிகள் கூடுதலாக தேவைப் படுவார்களாம். ஆக மொத்தம் சுமார் 25,000 பயணிகள் தேவை.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் தான் இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு விமான சேவை வழங்கும் நிறுவனம். இவர்களிடம் 3,100 விமானிகள் சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்க்கிறார்களாம். இது போக அவ்வப் போது ஒப்பந்த அடிப்படையில் ஓட்டும் விமானிகளும் உண்டு. இண்டிகோ ஒரு மாதத்துக்கு 9 - 10 விமான வழித்தடங்களில் புதிதாக தன் சேவையை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.