மும்பை: தொடர்ந்து 7வது ஆண்டாக, தனியார் கார்பொரேட் துறையின் முதலீடு நாட்டில் குறைந்து கொண்டே வருகிறது.
மொத்த மூலதன செலவினம் (capex), 2016-17ம் நிதியாண்டில் இருந்து, 2017-18ம் நிதியாண்டில், 10.15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, ரூ .165,500 கோடியிலிருந்து, ரூ.148,700 கோடியாக சரிவடைந்துள்ளது என்று தெரிவிக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய ஆய்வு.
7வது வருடமாக தனியார், கார்பொரேட் துறையின் முதலீடுகள் என்பது சரிவடைந்துள்ளது. அதேநேரம், ஏற்கனவே, அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் செயலாக்கம் பெறுவதில், ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. தனியார் கார்பொரேட் துறையின், கணிசமான திட்டங்கள், கிடப்பில் உள்ளன. சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன, சில திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை, மோசமான திட்ட செயலாக்கம் போன்றவை இதற்கான சில காரணமாக கூறப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களில் சிக்கியுள்ள வங்கி நிதி அளவு ரூ.10 லட்சம் கோடி என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், ரிசர்வ் வங்கி சர்வே, சில நம்பிக்கை வார்த்தைகளையும், தெரிவிக்கிறது. முதலீட்டு செயல்பாடுகள் வேகம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் உள்ள திட்டங்கள் வேகம் பெறுவதால், முதலீடுகளின் அளவு அதிகரிக்கப்போகிறது. சமீபத்திய, கார்பொரேட்கள் மற்றும் வங்கித்துறை பேலன்ஸ் ஷீட்களை பலப்படுத்தும் முயற்சிகளால், மூலதன பங்களிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சொல்கிறது ரிசர்வ் வங்கி ஆய்வு.
மூலதன செலவினம் எவ்வாறு குறைந்து கொண்டே வருகிறது என்பதை இந்த புள்ளி விவரம் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.
வருடம் | முதலீடுத் தொகை (கோடிகளில்) |
2010-11 | ரூ.370,600 |
2011-12 | ரூ.368,100 |
2012-13 | ரூ.305,100 |
2013-14 | ரூ.269,900 |
2014-15 | ரூ.205,000 |
2015-16 | ரூ.190,600 |
2016-17 | ரூ.165,500 |
2017-18 | ரூ.148,700 |
2018-19 | ரூ.79,200 (முழுமையல்ல) |
2018-19 முதல் பாதி நிதியாண்டில், ரூ.91,400 கோடி மதிப்புள்ள 190 திட்டங்களுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன. ரூ.115,800 கோடி மதிப்புள்ள 451 முதலீட்டு திட்டங்களுக்கு, நிதி வழங்குதலின் மூன்று வகை அமைப்புகளான, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் & 'ஐபிஓ'க்கள் மூலமாக அனுமதி கிடைத்துள்ளன.
ரிசர்வ் வங்கி கணக்கெடுப்புப்படி, 2017-18ம் நிதியாண்டில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. மொத்த முதலீட்டில், அம்மாநிலத்திற்கு 22.6 சவீதம் முதலீடுகள் சென்றுள்ளன. இதையடுத்து கர்நாடகா, ஆந்திரா, குஜராத், தமிழகம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு முதலீடுகள் சென்றுள்ளன.
தொழில்துறை அடிப்படையில் எடுத்துப் பார்த்தால், ரசாயனம் மற்றும் அவை சார்ந்த உற்பத்தி துறை 2017-18ம் நிதியாண்டின் மொத்த திட்ட மதிப்பில் 11 சதவீதத்துடன் உள்ளது. 2012-13 முதல் 2016-17 இடைப்பட்ட காலத்தில், 1.7% அளவுக்கு இத்துறையில் முதலீடு வளர்ந்துள்ளது. அதேநேரம், 2016-17ம் நிதியாண்டுடன் ஒப்பிட்டால், கட்டுமானத்துறையின் முதலீட்டு பங்களிப்பு 12 சதவீதத்திலிருந்து, 5.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
புதிய முதலீட்டில் 9.2 அளவுக்கான செலவீனம், விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கானதாகும். முதலீட்டு ஆதாரத்தில், நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்களிப்பு 89.3 சதவீதமாக உள்ளது.
சமீபத்தில் வெளியாகியுள்ள பொருளாதார புள்ளி விவரமும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு கவலையளிக்க கூடியதுதான். கடந்த ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி என்பது 1.7 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, டிசம்பரில் தொழிற்சாலை வெளியீடு வளர்ச்சி 2.6 சதவீதமாக இருந்ததை ஒப்பிட்டால் இது பெரிய அளவுக்கான வீழ்ச்சி என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த நிதியாண்டின் நாலாவது காலாண்டில், கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிட்டால் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மோடி அரசின் முதல் 3 ஆண்டு கால ஆட்சிகாலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்ததை ஒப்பிட்டால், பின்னர், அது சரிவடைந்துள்ளதை அறியலாம்.
2014-15ம் நிதியாண்டில், 7.9%, 2015-16ல் 8% மற்றும் 2016-17ம் நிதியாண்டில் 7.2 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களில், பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் கீழே குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
வெறுமனே தொழில்துறை சார்ந்த வளர்ச்சி மட்டும் வீழ்ச்சியடையவில்லை. தொடர்ச்சியாக 7 நிதி காலாண்டுகளாகவே, விவசாய துறை வளர்ச்சியும், ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துவிட்டது. மோடி அரசு, பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைத்தான் இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காண்பிக்கின்றன.