மைசூரு: லோக்சபா தேர்தலில் வாக்காளரின் விரலில் வைக்கப்படும் மை பாட்டில்களை தயாரிக்க சுமார் 33 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். 26 லட்சம் மை பாட்டில்களை தயாரிக்க மத்திய அரசுக்கு சொந்தமான மைசூரு பெய்ண்ட்ஸ் அண்டு வார்னீஷ் நிறுவனத்திற்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தேர்தல் முதல் லோக்சபா பொதுத் தேர்தல் வரையிலும் நாம் வாக்களிக்கும்போது நம் இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் மை கடந்த 67 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்திடமிருந்தே வாங்கப்பட்டு வருகிறது.இயற்கையான ரசாயன கலவையில் தயாரிக்கப்படுவதால் எளிதில் அழிக்க முடியாது.
தேர்தலில் ஒரு முறை வாக்களித்தவர் மீண்டும் திரும்பி வந்து வாக்களிப்பதை தடுக்கவும், ஒருவருடைய வாக்கை இன்னொருவர் போடுவதை தடுக்கவும் இந்த மை வைக்கும் நடைமுறை உருவானது.
சாதாரணமாக ஒரு பாட்டில் மை கொண்டு சுமார் 800 முதல் 850 பேர்களின் கை விரலில் மை வைக்க முடியும். வாக்களிக்கும்போது வைக்கப்படும் மை எளிதில் அழிக்கமுடியாத வண்ணம் உருவாக்கப்படுவதான் இதன் தனித் தன்மையாகும்.
ஊதா நிற மை
ஒவ்வொரு தேர்தலிலும், அது சாதாரண பஞ்சாயத்து போர்டு தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, வாக்களிக்கப்போகும் போது, அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பு மறக்காமல் நம்முடைய இடது கை ஆட்காட்டி விரலில் ஊதா நிறத்தில் மை தடவப்படும். நம் விரலில் வைக்கும் போது கருப்பு நிறத்தில் இருந்தாலும், பின்னர் ஊதா நிறத்திற்கு மாறிவிடும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்காவது நம் விரலை விட்டு போகாது. அப்படியே நாம் அழுத்தி துடைத்தாலும் கைவிரல் கையோடு வந்துவிடும்.
எப்போது முதல் இந்த பழக்கம்
வாக்களிக்கும்போது ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும் பழக்கம் 1962ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தான் முதன் முறையாக கொண்டுவரப்பட்டது. இதுவரையிலும் எத்தனையோ தேர்தல்கள் கடந்து போய்விட்டன. வாக்குசீட்டு பயன்படுத்தியது போய் மின்னணு வாக்களிக்கும் முறையும் வந்துவிட்டது. ஆனால், விரலில் மை வைக்கும் பழக்கம் மட்டும் அதே பழைய முறை தொடர்கிறது.
மைசூரு பெய்ண்ட்ஸ் அண்டு வார்னீஷ்
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மை தயாரிக்கப்படுவது வெளியில் எங்கும் கிடையாது. மத்திய அரசுக்கு சொந்தமான மைசூரு பெய்ண்ட்ஸ் அண்டு வார்னீஷ் என்னும் நிறுவனத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் கர்நாடக மாநிலம் மைசூருவில் அமைந்துள்ளது. 1962ஆம் ஆண்டு முதலே இந்நிறுவனம் அனைத்து தேர்தலுக்கும் மை தயாரித்து தேர்தல் கமிஷனுக்கு அளிக்கிறது.
இயற்கை ரசாயன கலவை
இந்நிறுவனம் மைசூருவின் முன்னாள் அரசர் நால்வாடி கிருஷ்ணராஜ உடையார் முயற்சியில் 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த 1960ஆம் ஆண்டு முதல் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் வழிகாட்டுதலில் இயற்கையான ரசாயன கலவையைப் பயன்படுத்தி மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
எவ்வளவு செலவாகும்
தற்போது வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கும் மை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்காக மை தயாரிக்கும் பணியை தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் மாதமே அளித்துவிட்டது. இந்தப் பணிக்கான மொத்த மதிப்பு சுமார் 33 கோடி ரூபாய் ஆகும்.
26 லட்சம் மை பாட்டில்கள்
வரும் லோக்சபா தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் 26 லட்சம் மை பாட்டில்களை தயாரிக்கும் பணியை அளித்திருந்தாலும், தற்போது வரையில் சுமார் 20 லட்சம் மை பாட்டில்களை தயாரித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளது. மீதமுள்ள 6 லட்சம் மை பாட்டில்களை இன்னும் 2 வாரத்திற்குள் தயாரித்து அளிப்பதாகவும், இதற்கான பணியில் ஊழியர்கள் இரவும் பகலும் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
850 பேர் கை விரல்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் 22 லட்சம் மை பாட்டில்களை தயாரிக்கும் பணியை மைசூரு பெய்ண்ட்ஸ் அண்டு வார்னீஷ் நிறுவனத்திற்கு அளித்திருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக சுமார் 4 லட்சம் மை பாட்டில்களை தயாரிக்கும் பணியை அளித்துள்ளது. ஒரு பாட்டில் மை பயன்படுத்தி சுமார் 800 முதல் 850 பேர்களின் கை விரலில் மை வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
40 நாடுகளில் கை விரலில் மை
தேர்தலில் கை விரலில் மை வைக்கும் நடைமுறை இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, ஜப்பான், கனடா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.