சென்னை: இந்தியாவில் முதன் முறையாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு வசதியாக மொபைல் மூலம் பணம் பெறும் யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது.
யோனோ மொபைல் ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனை மூலம் ரூ.10000 வரையிலும் எடுக்க முடியும். அதே நாள் ஒன்றுக்கு 2 முறை மட்டுமே இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் யோனோ மொபைல் ஆப்ஸை நாடு முழுவதும் உள்ள 16500 எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்காக 6 இலக்க ரகசிய எண்ணை உருவாக்க வேண்டியது அவசியம்.
ஏடிஎம் கார்டு
வங்கிக்கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கம் வசதி உள்ளது. இதில் வசதியை விட மோசடி நடப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு வங்கிக்கும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதில் சில வரையறைகள்(cash limit) உள்ளன. சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளன.
பணம் எடுக்க ஜிஎஸ்டி வரி
சில வங்கிகள் தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சேவைக் கட்டணம் பிடிப்பதில்லை. ஆனால் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு சேவைக் கட்டணத்தையும் ஜிஎஸ்டியாக 18 சதவிகித்தையும் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அது ரூ.100 எடுத்தாலும் சரி அல்லது 1000 எடுத்தாலும் சரி சேவைக் கட்டணத்தை பிடித்துக்கொள்வது வாடிக்கை.
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம்
வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்குவதற்காக தற்போது எஸ்பிஐ வங்கி நாட்டில் முதல் முறையாக ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தாமலேயே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மார்ச் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
யோனோ கேஷ்(YONO CASH)
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்காக நாம் யோனோ (YONO) என்னும் மொபைல் ஆப்ஸை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்பு பணம் எடுக்க விரும்பும்போது, முதலில் யோனோ கேஷ்(YONO CASH) ரகசிய அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். அதன் பின்புதான் பணம் எடுப்பதற்காக அங்கீகாரம் அளிக்கும் 6 இலக்க OTP ரகசிய எண் நம்முடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (SMS)அனுப்பப்படும்.
அரைமணி நேரம்தான்
நம்முடைய மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP எண் குறுஞ்செய்தி வந்த நிமிடத்தில் இருந்து அடுத்த 30 நிமிடங்களுக்குள் நாம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியின் யோனோ கேஷ் பாய்ண்டுக்கு சென்று 6 இலக்க OTP எண்ணைப் பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 30 நிமிடங்களுக்கு மேல் கால தாமதமானல் யோனோ பாய்ண்ட்டில் பணம் எடுக்க முடியாது. திரும்பவும் 6 இலக்க OTP ரகசிய எண்ணை உருவாக்க வேண்டும்.
16500 யோனோ கேஷ் பாய்ண்ட்டுகள்
எஸ்பிஐ வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 58000 ஏடிஎம்களும் POS (Point of Sale) களும் உள்ளன. இருந்தாலும் தற்போது 16500 ஏடிஎம்களில் மட்டுமே யோனோ கேஷ் பாய்ண்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பின்னர் படிப்படியாக அனைத்து ஏடிஎம்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. யோனோ கேஷ் பாய்ண்ட்களில் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே மூலம் பணம் எடுக்க முடியும். ஒரு தடவைக்கு அதிகபட்சமாக ரூ.10000 வரை மட்டுமே எடுக்க முடியும்.
ஆறு இலக்க ரகசிய எண்
யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் மூலம் பணம் எடுக்கும் வசதியால், நம்முடைய ரகசிய எண் திருடுபோகும் போவதற்கு வாய்ப்பு இல்லை. ஏடிஎம் கார்டை கையோடு கொண்டு போகவேண்டிய அவசியமும் இல்லை. 6 இலக்க எண்ணை ஞாபகம் வைத்துக்கொண்டாலே போதும்.
மோசடி தடுக்கப்படும்
யோனோ மொபைல் ஆப்ஸ் வசதியை குறித்து விளக்கிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸை பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். இந்த புதிய வசதியின் மூலம் ஏடிஎம் கார்டுகளில் நடக்கும் மோசடி பரிவர்த்தனைகளை தடுக்கலாம் என்றார்.
பாதுகாப்பு வசதி
யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தி பணம் எடுப்பதிலும் ஒரு ஆபத்து காத்திருக்கிறது. அதாவது, ஒருவேளை நம்முடைய மொபைல் ஃபோன் திருடு போய்விட்டால், அதை வைத்து யார் வேண்டுமானாலும் நம்முடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். இதைப் பற்றி விளக்கமளித்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகள், அந்தக் கவலை வேண்டாம். சந்தேகத்திற்கிடான பணப் பரிவர்த்தனைகளை தடுப்பதற்கும் யோனோ கேஷ் பாய்ண்ட்டில் பாதுகாப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.